27/06/2022

குறளுரையாடல்---கரு-பொது

#குறளந்தாதி
#ஒற்றைப்படை_தமிழ்ப்பேரொளி
#இரட்டைப்படை_இராசா

நடக்கின்ற உந்தன் நடையோ மிடுக்காய்த்
தடம்பதிக் கட்டும் தனித்து!
(1)

தனித்து நடந்தாலும் தள்ளிவிடப் பார்ப்பர்
துணிந்து தெளிவோடு செல்!
(2)

செல்லும் வழியில் செயலினைக் காட்டிடப்
புல்லும் வணங்கும் புரிந்து.
(3)

புரிந்தவர் மட்டும்தான் போகிறார் முன்னே
புரியாதோர்க் கில்லை பிழைப்பு
(4)

பிழைப்பினை நம்பி பிறழ்ந்தே உழல்வோர்
உழைப்பின்றி பெற்றிடுவார் ஊண்
(5)

ஊண்மிகு உண்டும் உறங்கிக் கழித்துமாய்
வீண்வாழ்வு வேண்டாம் விடு
(6)

விடுவது என்றாலும் விட்டொழிப்போம் வீணில்
கெடுவதென்றால் யாவருக்கும் கேடு
(7)

கேடில்லா நற்கூற்றைக் கேட்டபின்னும் மாறாதார்
வீடின்றிப் போவார் விடு
(8)

விடுதலை பெற்றே வியப்பு றுவாயே
கெடுதலை விட்டே கிளம்பு
(9)

கிளம்புகின்ற போதில் கிடைப்பதுதான் என்ன?
உளத்தில் நிறுத்தி ஒழுகு
(10)

ஒழுகிடும் அன்பினில் உன்னையே கண்டேன்
பழக இனித்திடும் பா
(11)

பாவில் சிறந்தநல் பாவொன்றைப் பாடுங்கால்
நாவில் சுவையேறும் நன்று
(12)

நன்றாய்ச் சுவைத்திட்டேன் நானிங்கு நல்லுணவு
உண்டீரோ நீரும் உணவு...
(13)

உணவும்தான் வேண்டுமோ ஓங்குதமிழ் சேர்ந்தால்
இணக்கமுடன் பாடல்  இனிது
(14)

இனிதாய்த் தொடங்கிய இன்றமிழ்ப் பாக்கள்
கனிபோல் இனிக்கும் கனிந்து
(15)

கனிந்துருகி பாடுங்கால் கைகொடுப்பான் என்றே
பணிந்துருகி பாடினர் பா
(16)

பாவினங்கள் எல்லாம் பழகிடும் தோழர்காள்
மேவிடுவார் ஒண்புகழ் மேல்
(17)

மேலிருந்து பார்த்தால் மிகச்சிறிதாய்த் தோன்றுவது
கீழிருந்தால் மாறும் குணம்
(18)

குணம்நாடி நற்செயலின் கொள்கைநாடிச் செல்ல
இனம்கூடி வாழும் இணைந்து
(19)

இணைந்தால் கிடைக்கும் இனிமைப் பயனை
நினைந்து தெளிந்து நட
(20)

✍️ இருவரும்

27.06.2022

No comments: