01/06/2022

மௌனக் கதவுகள்

 


இரண்டு கண்கள்
இரண்டு காதுகள்
இரண்டு நாசிகளென
இரண்டிரண்டாய் வைத்த இறைவன்;
ஒரு வாயிருக்க
இரண்டு வேலை தந்ததுபற்றி
என்றாவது எண்ணினோமா?!
 
பொய் சொல்லாதே
புறங்கூறாதே என்றெல்லாம்
பயனில்லாததை தவிர்க்க
பாடம் நடத்தினாரே வள்ளுவர்
உரைத்த கூற்றின்
உட்பொருளை ஆராய்ந்தோமா?
 
புத்தரோ இயேசுவோ
சித்தரோ ஞானியோ
இவர்களெல்லாம்
சிந்தனையுரை ஆற்றவேண்டி
சிந்தித்தார்களா?! இல்லை
சிந்தித்ததன் விளைவாக
சிந்தனையுரை ஆற்றினார்களா?
 
சிந்தியுங்கள்....
சிந்தனையின் மூலம் என்னவென்று...
சிந்தியுங்கள்...
சிந்தையின் நாதம் யாதென்று...
பிறகு பாருங்கள்
வாயடைத்தைப் போவீர்..
 
ஆம்...
அங்கே மௌனக் கதவுகள் திறந்திருக்கும்....
 
✍️செ. இராசா

No comments: