23/12/2021

ஐவர் அதிகாரம்



 
(நாகையில் நான் சந்தித்த கவி ஆளுமைகளுக்காக #ஐந்து_பத்துக்கள்)
 
விக்டர்தாஸ் அண்ணாவின் விண்முட்டும் செந்தமிழை
எக்கணமும் எண்ணுகிறேன் இங்கு
(1)
 
பாசத்தின் ஊற்றுநீர் பண்பாடி ஆற்றும்நீர்
நேசத்தில் நின்நிகர் நீர்
(2)
 
ஜெயகாந்தன் நற்சபைபோல் செய்தீரே அண்ணா
ஜெயஜெய போற்றியண்ணா ஜெய்
(3)
 
அன்பாய் அளித்தீர்கள் ஆயிரம் செய்திகள்
என்னண்ணா யாம்செய்வோம் ஈடு
(4)
 
பாடல் எழுதிடவே பண்பாய் உரைத்தீர்கள்
தேடலுக்குத் தந்தீர்நல் தீர்வு
(5)
 
பணத்தைப் பணமென்றாப் பார்த்தீர்கள் அன்று
குணத்தால்நீர் என்றென்றும் குன்று
(6)
 
ஓரிலையில் சோறுண்டோம் உன்பாவில் கட்டுண்டோம்
நேரிழைபோல் வைத்தாயே ஈர்ப்பு
(7)
 
கண்ணதாசன் கம்பனெல்லாம் கண்முன்னேக் கொண்டுவந்த
அண்ணதாசன் நாங்களெனில் ஆம்
(8.)
 
தம்பியெனச் சொல்கின்ற தங்க(ள்)க் குரலோசை
எம்முள் ஒலிக்கிறதே இங்கு
(9)
 
என்னையும் உங்களுடன் ஏற்றிவிட்டீர் நற்சபையில்
என்னேயேன் பாக்கியம் இன்று
(10)
 
பொன்மணி தாசரய்யா புன்னகை நேசரய்யா
உங்கள்போல் யாரய்யா உண்டு
(11)
 
அறுபத்தி எட்டென்றார் ஐயா அகவை
விறுவிறுப்பில் மெய்ப்பதி னாறு
(12)
 
ஒப்பில்லா வாகனத்தை ஓட்டுகிற மாண்பைப்போல்
செப்புபவை எல்லாம் சிறப்பு
(13)
 
மீனும் இறாலுமாய் மாமிசச் சோறுமாய்
வேணும் படியாய் விருந்து
(14)
 
விருந்தோம்பல் என்றாலே வேளிரைத்தான் சொல்வர்
வருந்துவர் முன்னோர் இனி
(15)
 
 தமிழ்பாடிச் செல்வோர்க்குத் தந்திடுவர் என்னும்
தமிழ்க்கூற்றை மெய்ப்பித்தீர் தந்து
(16)
 
நெல்லுக் கிறைத்தநீர் புல்லுக்கும் என்பர்;இக்
கல்லுக்கும் செய்தீர் களிப்பு
(17)
 
மூத்தத் தமிழறிஞர் முன்வந்து செய்ததுபோல்
பீத்தகவி செய்வேனோ பின்பு
(18)
 
பம்பரம்போல் சுற்றிவந்து பார்த்தெம்மைக் கேட்பீரே
"என்னவேணும் சொல்லிடுங்'கள்" என்று
(19)
 
விருத்தமும் செய்து விருந்தும் படைக்க
வருவோர்யார் பொன்மணி(யார்)முன் வா
(20)
 
திட்டகுடி தாண்டிவந்து தித்திக்க வைத்தவனே
முட்டக் குடியுன் தமிழ்
(21)
 

அண்ணாபால் அன்பிருக்கும் ஐயன்போல் பண்பிருக்கும்
வெண்பாவின் வேந்தரே நீர்
(22)
 
கண்மூடிக் கண்திறந்தால் காட்சியெல்லாம் வெண்பாவா
என்னப்பா ஏன்பா இது
(23)
 
திட்டகுடி யாரன்பும் தித்திக்கும் வெண்பாபோல்
இட்டம்போல் போட்ட இனிப்பு
(24)
 
கடையை அடைத்துவிட்டுக் கண்டெம்மில் நீரும்
தடையின்றித் தந்தீர் தமிழ்
(25)
 
கொலைசெய்த தாய்முன்னே கொஞ்சியழும் பிள்ளை
நிலைசொல்லி வைத்தீர் நெருப்பு
(26)
 
வலக்கரம் என்றுதான் வைத்துரைப்பார் உம்மை
பலச்சிரம் உன்னுள்ளே பார்
(27)
 
அன்பிற்கோர் எல்லையுண்டாம் ஆயாமல் சொல்கின்றார்
உன்-பாபோல் இல்லையென்பேன் ஓர்ந்து
(28)
 
முச்சங்கம் செய்திருந்த முன்னோர்கள் வந்திருந்தால்
அச்சன்போல் செய்திருப்பார் அன்று
(29)
 
உன்பால் வருமன்பால் உயிர்ப்பால் வரும்துடிப்பால்
நண்பா இதுவென்(ண்)பாப் பா
(30)
 
சித்தப்பூ கோவாலு செஞ்சதெல்லாம் கேட்கையில
அப்பப்பா அத்தனையும் அள்ளு
(31)
 
தேசாந் திரிபோலத் தேடியதைச் சொன்னீரே
ஆசான்யா நீர்:இனிமேல் ஆம்
(32)
 
துறவியெனச் சொல்றவன்லாம் தூக்குகிறான் சொம்பு
துறந்தாலும் செய்யலைநீ வம்பு
(33)
 
படிச்சதெல்லாம் அள்ளிப் பலருக்கும் தந்துப்
படியானாய் வள்ளல்நீப் பா
(34)
 
சேர்த்த பணமெல்லாம் செய்யத்தான் என்றாயே
வார்த்த வரலைப்பா... ம்மா❤️
(35)
 
கோவாலு சித்தப்பூ கொண்டுவந்த சாக்லேட்டோ
ஏவாளுக் கிட்டா இனிப்பு
(36)
 
அப்பா வரும்வேளை அப்பவென்ன ஆகுமென
அப்பாவாய்ச் சொன்னாய்; அழகு
(37)
 
பத்துக்குப் பத்தென்று பக்குவமாய் நீர்செய்யும்
வித்தையெல்லாம் என்னப்பா...வோய்
(38)
 
நிறுவன வேலைக்கும் நேரம் ஒதுக்கி
சிறப்பாகச் செய்தீர் செயல்
(39)
 
சொம்மா இருக்காம சோக்கா டபாய்க்கிற
யம்மாம் பெருசுன் மனசு
(40)
 
 
குருபக்தி என்னவென்று கூறாமல் கூறி
பெருஞ்சீடன் ஆனாயே பின்
(41)
 
சபரியைத் தேடித்தான் சாமிகள் போவர்
சபரியே தேடிவந்தார் அன்று
(42)
 
நச்சென்று செய்கின்றாய் நல்ல குறுங்கவிகள்
கச்சிதமாய் இப்படியேக் கட்டு
(43)
 
உபசரிப்பில் உன்னைப்போல் ஓராளும் உண்டோ
அபயம் தருமுந்தன் அன்பு
(44)
 
தொண்டிநகர் தாண்டிவந்து தொண்டுசெய்ய வந்தவனே
அண்ணன்மேல் எத்தனை அன்பு?
(45)
 
அண்ணா எனவுன்நா அன்பாய் அழைத்தாலே
அன்புமழைச் சாரல் அது
(46)
 
நாகை வருமுன்னே நம்மிருவர் கைகோர்க்க
தோகை விரிந்(த்)த மனம்
(47)
]
எதையும் எதிர்பாரா இத்தகைய
உள்ளம்
கதைக்கும் கவிகள் கவின்
(48)
 
தவமாய்த் தவமிருந்தத் தம்பியின் நோக்கம்
அவனால் அவனடைந்தான் அன்று
(49)
 
குடுகுடு வென்றே குருசேவை செய்யக்
கொடுத்தாயே நேசக் கரம்
(50)
 
✍️செ. இராசா

No comments: