20/12/2021

கலங்காதிரு மனமே --------- வள்ளுவர் திங்கள் 190

 #கலங்காதிரு_மனமே
#வள்ளுவர்_திங்கள்_190

நன்மை வரும்போது நான்தான் எனச்சொல்வார்
இன்னலில் சொல்வதில்லை ஏன்
(1)

கலங்கிப்போய் உட்கார்ந்தால் காட்சியா மாறும்
தளர்வுதரும் சிந்தனையைத் தள்ளு
(2)

சீரும் சிறப்புமாய்ச் செய்வதைச் செய்தாலும்
நேரும் வினைதான் விதி
(3)

கவலை எழுகின்ற காரணத்தை ஆய்ந்து
கவலை வலையைக் களை
(4)

நினைக்கின்ற ஒன்று நடக்காமல் போனால்
நினைவெழும் புள்ளியைத் தோண்டு
(5)

சிறிதாய் இருக்கையில் தீர்க்காமல் விட்டால்
குறியீடாய் மாறும் விடு
(6)

புலம்பி அழுகின்ற பொல்லாத செய்கை
கலங்கிய நெஞ்சத்தால் தான்
(7)

எண்ணம் எதுபோலோ எல்லாமும் அப்படியே
வண்ணமாய் மாறிடும் வாழ்வு
(8.)

கவலை மிகையானால் காட்சியுரு மாறும்
அவசியம் கவலை அறு
(9)

நிலையாமை பற்றி நினைப்போரின் வாழ்வின்
நிலைமாறும் நெஞ்சில் நிறுத்து
(10)

✍️செ. இராசா

No comments: