29/12/2021

ஆதி வந்தான்



 

அவனும் அவனின் ஏழு வயது மகனும் அவ்வளவு பாசமாக இருப்பார்கள். அவன் மகன் கேட்கும் அத்தனை விடயங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி வைக்கின்ற தந்தையாகவே அவன் இருந்தான். ஆயினும் அவன் மகன் விரும்பிக் கேட்ட ஒரு நாய்க்குட்டியை மட்டும் அவனால் வாங்கித்தர முடியவில்லை. அதுதான் அவன் மகனுக்கு ஒரே ஏக்கமாக இருந்தது.

அவனும் விடுவதாக இல்லை. தன் மகனின் ஏக்கத்தைப்போக்கத் தெருத்தெருவாய் அலைந்தான். தெருமுக்கில் எதேச்சையாக ஒரு நாய்க்குட்டி வந்ததைக் கவனித்து அதைத்தூக்கிவந்தான். ஆனால் அவனின் தாயார் அதைப் பெட்டைநாயென்று சொல்லி நிராகரித்துவிட்டார்கள். எந்த நாயாய் இருந்தாலென்ன என்று எவ்வளவோ சொல்லியும் பெண்நாயை ஏற்கத் தயாராக இல்லை. மிகுந்த மனவருத்ததில் நாட்கள் நகர்ந்தது.

கார்த்திகை 1 ஆம்தேதி அவன் தன் மகனுக்கு மாலை போட்டுவிட்டு தானும் ஐயப்பனுக்காக விரதமிருந்தார். அப்போதும்கூட அவனும் அவன் மகனும் தெருவெங்கும் நாய்க்குட்டி தேடினார்கள். விரதமிருந்து ஐயப்பன் கோவில் சென்று மலையிறங்கி வரும்போது அவர்கள்கூட வந்த ஒருவர் அவனிடம் யார் யார் என்னென்ன வேண்டீனீர்கள் என்று விளையாட்டாகக் கேட்டார். அப்போது அவன் தான் தன் மைந்தனை ஐயப்பனிடம் ஒப்படைத்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அவன் மகனோ தனக்கோர் நாய்க்குட்டி வேண்டுமென்று இறைவனிடம் வேண்டியதாகக் கூறினான். இதைக்கேட்ட அவனின் மனது மிகவும் வாடியது

மலையிறங்கி வந்ததுமே எங்கெங்கோ தேடினான். முடிவில் ஒரு நாய்க்குட்டி கிடைத்தே விட்டது. அதைக்கண்ட உடனேயே அவனும் அவன் மைந்தனும் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். என்ன பெயர் வைக்கலாமென்று அப்பா கேட்டார். மகனோ தன் செல்ல நாய்க்குட்டிக்கு "பெவி" என்று சொன்னான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெயர்க்காரணம் கேட்டான். அது ஆங்கிலப் பெயராமாம் அர்த்தமெல்லாம் இல்லையாமாம். ஏற்கெனவே தன் அன்பு மகனுக்கு வேற்றுமொழி வைத்த குற்றவுணர்வோடு இருந்த அப்பா இம்முறை தன் மகன் வைத்த பெயரை மறுதலித்து "ஆதி" என்று தமிழ்ப் பெயர்சூட்டினார். அதை மறுக்காமல் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இப்போதுமுதல் அவர்களின் குடும்பத்தில் ஆதியும் ஒருவனாய் வலம்வருகிறான்...

✍️செ. இராசா



No comments: