13/04/2021

வள்ளுவர் திங்கள் 155---------தாழ்ந்திடாதே----அதிகாரம் மானம்


நல்ல உணவிலே நஞ்சைக் கலந்திட்டால்
நல்லதற்கும் பேரென்ன? நஞ்சு!
(1)

உயரத்தில் நிற்போர் ஒருவேளை வீழ்ந்தால்
உயரம் பொறுத்தே அடி
(2)

புகழின் உயரத்தால் போதையில் வீழார்
சகத்தில் தெரிவார் தனித்து
(3)

பொருளது போனாலோ போகட்டும் ஆனால்
பெருகின்ற பேர்போனால் போச்சு
(4)

சிகரத்தில் நின்று சிறுஞ்செயல் செய்தால்
சகலரும் ஊதுவர் சங்கு
(5)

மானம் மரியாதை மண்ணிலே இல்லையெனில்
சாணத்தைப் போல்தான் மதிப்பு
(6)

இலக்கினை எட்டியதாய் ஏறாமல் நின்றால்
இலக்கின்மேல் நிற்பர் பலர்
(7)

இல்லாத போதும் இருப்போனாய் வாழ்வோனின்
இல்லத்தில் இல்லை இல
(8)

இகழ்வாரை எண்ணி இடிந்திட வேண்டாம்
நிகழ்வாலே யாரென்று காட்டு
(9)

ஞானச் செருக்கோடு‌ வாழ்கின்ற ஓர்கவிஞன்
ஞானத்தால் வென்றிடுவான் பார்
(10)

✍️செ.இராசா

No comments: