17/11/2020

இறைவனுக் கிடையில் எதற்கய்யாத் தரகர்?

 

 

இறைவனுக் கிடையில் எதற்கய்யாத் தரகர்?
இறைவனின் உடையில் ஏனய்யா நடிகர்?!
மறைபொருள் அறியா மதக்கடைக் கணக்கர்
மறையருள் அறிவா மனிதனுக் கருள்வர்?

நிறைகுடம் என்றும் சிந்துமா சொல்லு
குறைகுடம் தானே குதித்திடும் தள்ளு
இறையிடம் என்றும் உன்மனம் நம்பு
கறையின்றி நீயும் கழுவிட எண்ணு

அறத்தால் ஈட்டிடும் பொருளால் இன்பம்
அறிந்திட வேண்டும் அறமே தெய்வம்...
பிறப்பால் பிரிக்கும் பெயரா புனிதம்?!
சிறப்பால் சேர்க்கும் செயலே யாவும்!

உன்னுள் என்னுள் எங்கும்
......ஓடும் குருதி சொல்லும்
அன்றும் இன்றும் யாவும்
......ஆதிக் குருதிச் சொந்தம்
நீயும் நானும் யாரும்
.....நிற்கும் சாட்சி ரூபம்
தீயும் நீரும் யாவும்
...... தெய்வம் தந்த மூலம்

✍️செ.இராசா

No comments: