09/11/2020

அனைவரும் சமம்

 


 

வந்துவிழும் வெள்ளொளியால் வானவில்லின் வர்ணம்போல்
வந்தவிந்தை ஆராய்ந்தால் நாம்
(1)

உன்னிலும் என்னிலும் ஓடுகின்ற செங்குருதி
என்றேனும் மாறிடுமா சொல்?
(2)

கருவறையில் தங்குகின்ற காலத்தை நீட்டும்
ஒருவருமே இல்லை உணர்
(3)

கல்லறைக்குப் போகின்ற காலத்தை நீக்குகின்ற
வல்லோர்கள் யாரிங்கே சொல்?
(4)

கட்சித் தலைவன்போல் கண்டபடி பேசவா
இட்டம்போல் செய்தீர் இறை?
(5)

நாக்கிலா? தோளிலா? வந்தவழி தாயிலா?!
போக்கிலாப் பொய்கள் பொசுக்கு
(6)

அப்பப்பா போதும்பா அள்ளிவிட வேண்டாம்பா
தப்பப்பா தீண்டாமைத் தீ
(7)

நம்பினால் ஆத்தீகர்! நம்பாதார் நாத்தீகர்!
தன்னினத்தை ஏய்ப்பவர் யார்?
(8)

புண்படுத்திப் புண்படுத்திப் போர்க்களம் ஆக்காமல்
பண்பட்டப் புத்தியில் நில்
(9)

ஆட்சியர் ஆனாலும் ஆசிரியர் ஆனாலும்
காட்டுகின்ற செய்கையால் காண்
(10)

✍️செ. இராசமாணிக்கம்

#அனைவரும்_சமம்
#வள்ளுவர்_திங்கள்_136

No comments: