03/11/2020

யாவிலும் உலவும் யாரிந்த நான் நான்?

#நான்

யாவிலும் உலவும் யார்இந்த நான் நான்?
யாருக்குத் தெரியும் யார்தான் இந்த நான்?

இறைவனின் கையில் எழுதுகோல் நான் நான்
மறைபொருள் உரைக்கும் மகத்துவம் நான் நான்
கவிதையில் உறையும் கருப்பொருள் நான் நான்
கவிஞனுள் நிறையும் கர்வமும் நான் நான்
உயிரெனச் சொல்லும் மெய்ப்பொருள் இந்த நான்
உண்மையைச் சொல்லும் நான்யார்? அவனே நான்....

#அப்படியா?  இனி

பிறந்தது என்றால் பிறக்குமுன் எங்கே எங்கே?!
இறந்தது என்றால் இறந்தபின் எங்கே எங்கே?
மறந்தது என்றால் நிகழ்ந்தது எங்கே எங்கே?
நிகழ்ந்தது என்றால் மறந்தது ஏனோ இங்கே?!

யாவிலும் உலவும் யார்இந்தநான் நான்?
யாருக்குத் தெரியும் யார்தான் இந்த நான்?

மெய்யெனச் சொன்னால் மெய்யுடல் போவ தெங்கே?!
பொய்யெனச் சொன்னால் பொய்க்கேன் வாழ்க்கை இங்கே?!
தெய்வமே என்றால் தேடிடும் தெய்வம் எங்கே?
செய்வினை என்றால் தெய்வமுன் செய்கை எங்கே?!

யாவிலும் உலவும் யார்இந்த நான் நான்?
யாருக்குத் தெரியும் யார்தான் இந்த நான்?

✍️செ.இராசா

No comments: