24/03/2023

வாழ்த்துப் பத்து

 


மற்றோரைப் பாராட்டும் மாவுள்ளம் கொண்டோரை
உற்றாராய்க் காணும் உலகு
(1)
வாழ்த்துகிற உள்ளம் வருகின்ற யாவர்க்கும்
காழ்ப்புணர்ச்சி தோன்றாது காண்
(2)
போற்றுவதைப் போற்றினால் போற்றிடுவர் யாவரும்
தூற்றினால் துப்புவர் சொல்
(3)
நல்லதைப் பாராட்டும் நல்லுள்ளம் கொண்டோரை
பொல்லாரும் செய்வர் புகழ்
(4)
உச்சத்தில் நின்றாலும் ஊன்றுகோல் போன்றவர்
அச்சமின்றி காட்டுவர் அன்பு
(5)
பூனையை யானையெனப் பொய்யெல்லாம் சொல்லாமல்
பூனையைப் பூனையெனப் போற்று
(6)
காசுபொருள் தந்தால்தான் கர்ணனா என்னயிங்கு
பேசுகவி தந்தாலும் தான்!
(7)
நிற்போர் நடப்பர் நடப்பவர் ஓடுவர்
பற்றின்றிப் பாராட்டிப் பார்
(8)
கண்முன்னே நிற்போர்க்குக் கைதட்டா விட்டாலும்
எண்ணத்தால் செய்யாய் இடர்
(9)
நல்லோர் ஒருவரின் நாவிலே வந்துவிழும்
எல்லாமும் பொன்னென்றே எண்ணு!
(10)
 
✍️செ. இராசா

No comments: