02/01/2023

நூல்பல கல் ---- ஔவைத் திங்கள்- 23

 


நூல்பல கற்றால்தான் நுண்ணறிவு மேலோங்கி
ஆல்போல் விரியும் அறிவு.
(1)
 
தன்நிலை யாதென்று தானறிய வேண்டுமெனில்
பன்நோக்கில் கற்பாய் பல.
(2)
 
கிணற்றுத் தவளைபோல் கீழிருக்கும் மாந்தர்
கிணற்றைக் கடலென்பர் கேள்.
(3)
 
படிக்கப் படிக்க பயிலும் படிப்பு
படிக்காப் படிப்பு பல.
(4)
 
தான்பல கற்றாலும் தன்போக்கு மாறிவர
ஊன்றிப் படித்தால்தான் உண்டு.
(5)
 
நுனிப்புல்லை மேய்வதுபோல் நூல்களைக் கற்றால்
பனித்துளியாய் மாயும் பணிந்து.
(6)
 
கற்றிடக் கற்றிடக் கற்றிடும் ஆவலில்
கற்பவர் கற்கிறார் காண்.
(7)
 
மற்றவர்கள் நூல்சொல்லும் மாண்பினைக் கண்டறியார்
கற்றோர்முன் நிற்கும் கடுகு.
(8)
 
மற்றவர் நூல்சொல்லும் மாண்பினை உய்த்தறிந்தோர்
கற்றோர்முன் என்றும் கடல்.
(9)
 
என்றைக்கோ கற்றவை எப்போதோ கைகொடுக்கும்
என்றென்றும் கற்பாய் இசைந்து.
(10)
 
✍️செ. இராசா

No comments: