23/01/2023

தலைப்பு: ஔவை_யார்? (ஔவைத் திங்கள் 25)



சுருங்க உரைக்கின்ற சூட்சுமம் சொல்லும்
பெருங்கவி ஔவையார் பேர்!
(1)

ஈரடிக்கு வள்ளுவனார் என்பதுபோல் நற்பெருமை
ஓரடிக்கு ஔவையால் உண்டு!
(2)

குறைவாகச் சொல்லும் குறுந்தகவல் நுட்ப
முறைகாட்டித் தந்தார் முதல்!
(3)

மூத்த குடியாக முன்நிற்கும் நம்மினத்தைக்
காத்த புலவரிவர் காண்!
(4)

மூதுரையின் நல்வழியில் முன்னேறிச் செல்வோர்க்குத்
தீதுரைகள் தீண்டாது செல்!
(5)

அங்கவையும் சங்கவையும் ஔவையால் மீண்டமைக்குச்
சங்கத் தமிழ்மொழியே சான்று!
(6)

அதியமான் தந்தகனி ஔவை-யார் என்றே
பதிவான சான்றாகும் பார்!
(7)

காசுக்குப் பாடிய கம்பனையும் கண்டித்த
மாசில்லா தாயை வணங்கு!
(8)

பாரியையும் காரியையும் பைந்தமிழர் யாவரையும்
பேரன்பால் கட்டிவைத்த பெண்!
(9)

வங்கக் கடலோரம் வைத்திடுவோம் அன்னைக்குத்
தங்கத்தால் மின்னும் சிலை!
(10)

✍️செ. இராசா

No comments: