14/01/2023

சம்பளம்


உழைத்த உழைப்பிற்கு
உழைப்பின் அடிப்படையில் தரப்படும்
ஓர் பொருளே சம்பளம்..

அதென்ன சம்பளம்?

சம்பா நெல்லும்
உப்பள உப்பும்
ஈடு பொருளாய் தந்த காலத்தில்
சம்பா அளவுப்பு சொற்றொடரே
சம்பளம் ஆனதென்பர்...

அதேபோல்‌...
உழைப்பினைக் குறிக்கும்
ஊழியச் சொற்றொடரே
ஊதியம் ஆனதென்பர்....

அதென்ன கூலி?

பஞ்ச காலத்தில்
கூல் ஊற்றியதாலேயே
கூலியாய் ஆனதென்பர்....

இவ்வளவு ஏன்
SALARY என்ற ஆங்கிலச்சொல்லே
SALTல் இருந்துதான் வந்ததாம்
சந்தேகமெனில் கூகுளைப் பாருங்கள்...

அதெல்லாம் சரி...
அதற்கென்ன இப்போது?
அதானே...‌‌

மாதச் சம்பளம்
மாதா மாதம் வருவோருக்குத் தெரியாது
அதன் மகிமை....
தாமதம் ஆனாலோ
தடைபட்டுப் போனாலோ தெரியும்
சம்பளமே தம் பலமென்று...

நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில்
வெட்டியாய் வெட்டுவோருக்குத் தெரியாது
அதன் மகிமை..
அதுவும் கிடைக்காதபோதே தெரியும்
வடநாட்டுக்காரன் வராத இடம்
அதுமட்டுமே என்று...

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்...
ஒன்றின் மகிமை என்பது
ஒன்றில் இருக்கும்போது அல்ல...
ஒன்றை இழக்கும்போதே தெரியும்....
ஆக..‌
இருக்கும்போதே சேமியுங்கள்...
இல்லாதபோது உதவும்...

✍️செ. இராசா

No comments: