12/03/2020

நான் சாதி மதம் பார்த்தேனா?

இப்போது சொல்லுங்கள்?- நான்
சாதி மதம் பார்த்தேனா?; இல்லை
நீதீ பேதம் பார்த்தேனா?!
உறவு பகை பார்த்தேனா?! இல்லை
உயர்வு தாழ்வு பார்த்தேனா?

இல்லையே..

கரம் கொடுத்த அனைவரையும்
கவ்விக் கொண்டேன்
தோள் கொடுத்த அனைவரையும்
தொற்றிக் கொண்டேன்

என்ன தவறிழைத்தேன்
எம்மை ஏன் சபிக்கின்றீர்?!

என் நோக்கம் யாதெனில்
போதிப்பதே...

ஆம்

சரிசமம் யாதென்று
சரியாய்ப் போதிப்பது...

மறைபொருள் யாதென்று
மறைவாயப் போதிப்பது...

மரணபயம் இல்லார்க்கு
மனிதத்தைப் போதிப்பது..

முரண்பட்டு நிற்போர்க்கு
முக்தியைப் போதிப்பது..

நிறுத்து
நீ என்ன போதிதர்மரா?
போதனைசெய்ய...

பொறுங்கள்;
நான்
மதம் போதிக்கும்
மதகுரு அல்ல...
கொல்லாமை போதிக்கும்
குலகுருவும் அல்ல
கொடூரமாய்ப் போதிக்கும்
கொரானாவே நான்...
கோரமாய் ஊடுறுவும்
கோவிட்டே (COVID 19) நான்

என் பிரம்மாக்களே
என்னை மட்டும் சபிக்காதீர்...
நான் எமனல்ல சிவன்!

No comments: