20/10/2017

தூரம் இல்லை ----களஞ்சியம் கவிதைப் போட்டியில் (76) பங்குபெற்ற கவிதை (முடிவு வரவில்லை



களஞ்சியம் கவிதையில் இடம்பெற்று தீர்ப்பு வராத என் கவிதைகள் 

(20.10.2017)

கண்களில் காண்கின்ற காட்சிகளால்
கருணையால் கண்ணீர் வடிகின்றதா?!
கடவுளும் நமக்கினித் தூரமில்லை!
கருணையால் கடவுளும் வெளிப்படுமே!

வாட்டிடும் வறுமையில் தவிக்கையிலும்
வாய்ப்பினை சரியாய்க் கணித்தோமா?!
வானமும் நமக்கினித் தூரமில்லை!
வாய்ப்பினால் வானமும் வசப்படுமே!

படுத்திடும் துன்பம் வருகையிலும்
பணியினில் நேர்மையாய் இருந்தோமா?!
பதவியும் நமக்கினித் தூரமில்லை!
பணிவினால் பதவிகள் கிடைத்திடுமே!

இன்னல்கள் எங்ஙனம் வந்தாலும்
எதிலும் நன்மையே கண்டோமா?
இன்பங்கள் நமக்கினித் தூரமில்லை!
எதிர்ப்பிலும் இன்பங்கள் தெரிந்திடுமே!

போட்டியில் கவிதைகள் தோற்றாலும்
படைப்பும் கவிதையும் தோற்றிடுமா?!
வெற்றிகள் நமக்கினித் தூரமில்லை!
வென்றிடும் முயற்சிகள் தொடரட்டுமே!

கவியின் அரசர்கள் படைத்ததுபோல்
கவிதையில் காவியம் மலர்ந்திடுமா?!
காவியம் நமக்கினித் தூரமில்லை!
களஞ்சியக் கவிஞர்களால் சாத்தியமே!

தமிழர்கள் செழிப்புடன் வாழ்வதற்கு
தமிழ்மொழி ஊக்கம் தந்திடுமா?
தமிழாளுமை நமக்கினித் தூரமில்லை!
தமிழ்நூல்கள் படித்தால் சாத்தியமே!

கற்கால மொழியின் நூல்களெல்லாம்
கணினியில் சரளமாய்க் கிடைத்திடுமா?!
தமிழ்நூலகம் நமக்கினித் தூரமில்லை!
தமிழ்ப்பட்டறைக் குழுவால் சாத்தியமே!



No comments: