23/02/2017

கள்ளும் சினமும்


கள்ளும் சினமும் குணத்தால் ஒன்றே!
சொல்லும் நாக்கும் பிரளும் நன்றே!
வெறியும் வேகமும் சங்கமம் கொண்டே!
ஏறிடும் இரண்டிலும் போதை ஒன்றே!

கண்ணும் நெஞ்சும் பார்வை மங்கும்!
கல்வியும் அறிவும் காற்றில் பறக்கும்!
காலும் கையும் நடனம் ஆடும்!
காதலும் தேனும் கசந்தே போகும்!

மூக்கும் முழியும் கோணல் ஆகும்!
மூளையும் செல்லும் முடிவை நோக்கும்!
குணமும் குலமும் குறைவால் மங்கும்!
குருதியில் நஞ்சும் குன்றாய்ச் சேரும்!

நாயும் பேயும் நாவினில் வாழும்!
நோயும் பிணியும் உறவாய் கூடும்!
நட்பும் தமரும் விலகிட நேரும்!
நாடியும் நரம்பும் தளர்ந்தே போகும்!

கள்ளும் சினமும் நீக்கிட வேண்டும்!
எள்ளும் உலகம் வென்றிட வேண்டும்!
அன்பும் அறமும் போற்றிட வேண்டும்!
அறிவும் தெளிவும் அடைந்திட வேண்டும்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!

No comments: