12/05/2023

நல்ல தமிழ் பாட்டெழுதி

 


நல்ல தமிழ் பாட்டெழுதி
விண்ணைத் தொடும் பேரெடுக்க
உன்னை வரம் வேண்டுகின்றேன் வடிவேலா...
இல்லை எனும் பேர்களுக்கும்
தன்னைத் தரும் வள்ளளென
செய்யும் கரம் வேண்டுகின்றேன்
வடிவேலா..

நட்பின் பெயர் என்றுசொல்லி
உள்ள வரை கூடிவிட்டு
உள்ள வதை செய்பவர்க்கும் வடிவேலா...
வெட்கித் தலை நாணிநிற்க
மின்னும் படி ஏறிநிற்க
எந்தன் தரம் கூட்டிடுவாய் வடிவேலா...

கத்தர் நில மண்ணைவிட்டு
சென்னை வரும் சூழலுக்கு
என்னை வர வைத்தவனே வடிவேலா...
வித்தை பல செய்வதற்கா
புத்தம் புது வாழ்க்கையென
எந்தன் நிலை மாற்றினாயோ வடிவேலா...

✍️செ. இராசா

No comments: