22/02/2021

புகழ்ப்பத்து ----------வள்ளுவர் திங்கள்-150


தானாகக் கிட்டுமா?! தள்ளாடி முன்னேறிப்
போனால்தான் கிட்டும் புகழ்
(1)

விழுந்தால் எழுகிற வித்தையைக் கற்றோன்
விழுமுன் எழுவான் விரைந்து
(3)

தனித்துவம் இன்றித் தரணியில் வாழும்
மனிதருக்கு இல்லை மதிப்பு
(3)

காலத்தை ஆராய்ந்து கச்சிதமாய் வாழ்வோர்க்கே
ஞாலத்தில் கிட்டும் மதிப்பு
(4)

பிறகு பிறகென்று பேசிடும் பேரை
பிறரென்றும் பேசார் பிறகு
(5)

கிட்டிய வாய்ப்பினைக் கெட்டியாய்ப் பற்றினால்
எட்டிடும் தூரம் எளிது
(6)

முடிவை அடைய முயலா தெனினும்
முடியும் வரைக்கும் முயல்
(7)

எண்ணிய எண்ணம்போல் எல்லாம் நடந்திட
கண்ணிலே அர்ச்சுனன்போல் காண்
(8)

உனக்கான செய்கையை ஊராரா செய்வர்
சொனங்காமல் இப்போதே செய்
(9)

பிரபஞ்ச ஈர்ப்பின் பெருஞ்செய லாலே
வருகிற வெற்றி வரும்
(10)

No comments: