14/11/2017

சினம்



கோபத்தில் கொட்டிய வார்த்தைகளோ
கொடுங்கனல் நெருப்பாய்ச் சுட்டுவிடும்!
கொடுஞ்சொல் வார்த்த காயங்களோ
கொடுமையின் வலிகளைச் சுட்டிவிடும்!

வன்சொல் வார்த்தைகள் வந்தபின்னே
வருந்திதான் ஆவது ஒன்றுமில்லை!
உயிர்க்கொலை தவறாய் நடந்தபின்னே
உயிர்வந்து உடலினை சேர்வதில்லை!

சினத்தினை அடக்குதல் சிரமமெனில்
சிதறிடும் வார்த்தையைத் தடுத்திடுவீர்!
நாவினை அடக்குதல் சிரமமெனில்
நாணத்தில் வெட்கியே குனிந்திடுவீர்!

சரிந்திடும் நொடிகளில் விழித்துவிடின்
சபலமும் சினமும் தோற்றுவிடும்!
சரித்திடும் கணங்களை வென்றுவிடின்
சரித்திரம் நமதாய் மாறிவிடும்!

—�—�செ. இராசா—�—
 
சிவாவின்  பின்னூட்டம்: 

சினம் கொள்ளா மனம் வேண்டும்-அதை
இனம் கண்டறியும் குணம் வேண்டும்,
பணம் இல்லா நிலையினிலும்-ஏன்

வனம் புகும் சூழலிலும்
மணம்மிகு வாழ்வை வாழ
சினமதை தவிர்த்தால் போதும்-இல்லை
பிணம்போலுனை ஊரார் எண்ணும்
 
பதில்  பின்னூட்டம்:

உண்மைதான் நண்பா..... ஆனால் சினம் தவிர்த்தல் எளிதல்லவே.....முயற்சியும் பயிற்சியும் வேண்டும்

No comments: