25/11/2017

வெற்றிப்படிகள்-களஞ்சியம் கவிதைப் போட்டி-80 (வெற்றிக் கவிதை)

80வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு.சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், இரண்டாம் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர் திரு. நிகரன் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


வெற்றிப்படிகள்
***************
கற்பதைக் கசடறக் கற்றுவிட்டு
பெற்றதைத் தெளிவுறக் கடைபிடித்து
வெற்றிப் படிகளில் கால்வைப்போம்!


இடறிய கணங்களை நினையாமல்
இதயத்தில் கனங்களை சுமக்காமல்
இலட்சியப் படிகளை அடைந்திடுவோம்!

வெற்றியின் விளைவிலே மூழ்காமல்
வெற்றியை தலையிலே ஏற்றாமல்
வெற்றிமேல் வெற்றி குவித்திடுவோம்!
————————————————
விமானி ஆகிடும் கனவினிலே
விஞ்ஞானி கலாம்ஐயா தோற்றாலும்
விண்புகழ் அடைந்ததை நினைத்திடுவோம்!

பள்ளிகள் துரத்திய பலநபர்கள்
பள்ளியில் பாடமாய் ஆனதுபோல்
புதியதோர் சாதனை படைத்திடுவோம்!

எழுத்து மயக்கநோய் (டிஸ்லெக்சியா) கொண்டவர்கள்
எழுந்து உலகினை வென்றதுபோல்
எழுச்சியால் சாதனை செய்திடுவோம்!
——————————————
தோல்விகள் தொடர்ந்து வந்தாலும்
தோற்றதை நினைத்து புலம்பாமல்
தோள்கள் நிமிர்த்தி நடந்திடுவோம்!

தூற்றும் நபர்களை சபிக்காமல்
ஆற்றும் பணியினை நேசித்தே
வெற்றிப் படிகளை மிதித்திடுவோம்!

வெற்று மனிதராய் நடக்காமல்
வெற்றி மனிதராய் சாதித்தே
வெற்றியின் அளவுகோல் ஆகிடுவோம்!


https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1936710029981237/

No comments: