31/12/2023

நகம்




விரல்நுனியைப் பாதுகாக்க
இயற்கையளித்த கவசங்களே
நகங்கள்...
அதனால்தான் என்னவோ
விரல்மீறி வளர
கவசங்களுக்கு அனுமதி இல்லை!

இறந்த செல்கள் எழுப்புகின்ற
கல்லறைத் தூண்களே
நகங்கள்...
அதனால்தான் என்னவோ
வர்ணங்கள் உதிர்ந்தால்
புதிய முலாம்கள் பூசுப்படுகின்றன!

பலருக்கும் பல்லிடுக்கே
நகவெட்டியானதால்
நகவெட்டிகள் எல்லாம்
மௌனவிரதத்தில்...

இன்றைக்கும் நகயிடுக்கே
கிள்ள உதவுவதால்
அடங்காதோர் காதெல்லாம்
ஆசிரியர் கைகளுக்குள்...

நகங்களின் தேவையென்பது
சும்மா சொறிவதற்கு மட்டுமல்ல...
அக விளையாட்டை
ஆவணப் படுத்துவதற்கும்தான்
புரியவில்லையா?!
எனில்...
வாத்சாயனரை வாசியுங்கள்!
அர்த்தவீரரை நேசியுங்கள்!
கீறலின் மொழி புரியும்; இந்தக்
கிறுக்கலின் ஒளி தெரியும்!

✍️செ. இராசா

கரு உதவி: மகன்

No comments: