29/12/2023

எண்ணம்போல் வாழ்வு

 குறள் அந்தாதி


எண்ண அலைச்சுழலின் எண்ணிக்கை சீரானால்
வண்ண மயமாகும் வாழ்வு
(1)

வாழ்வை வளமாக்கும் மன்றத்தில் கற்றறிந்து
ஆழ்மனதை நன்றா(க்)க ஆய்
(2)

ஆய்ந்தறிந்து பார்க்காமல் அப்படியே ஏற்பவர்கள்
சாய்ந்திடுவர் மீண்டும் தவிர்த்து
(3)

தவிர்க்க முடியாத் தவறினைக் கூட
தவிர்க்க உதவும் தவம்
(4)

தவம்செய்வோர் வாழ்வில் தனித்துவம் கூட
உவமையாய்க் கூறும் உலகு
(5)

உலகியல் யாவும் உவகையாய்த் தோன்ற
கலங்காமல் செல்வீர் கடந்து
(6)

கடக்கும் வினைகள் கடந்துதான் போகும்
நடப்பதை ஏற்று நட
(7)

நடப்பதை ஏற்க நமக்குள்ள யுக்தி
திடம்தரும் யோகா தெளி
(8)

தெளிவுடன் நோக்கத் தெரிந்திடும் பாதை
ஒளிதரும் நற்தவம் ஊற்று
(9)

ஊற்றெனத் தோன்றும் உயர்கவிபோல் நம்வாழ்க்கை
ஏற்றமுற நல்லதையே எண்ணு!
(10)

✍️செ. இராசா

No comments: