03/08/2023

மிளகு



பொங்கல் சாப்பிடுகையில்
உங்கள் பல்லில் மிளகுபட்டால்
வெறும் மிளகுதானே என்று
ஒதுக்கி ஓரம் தள்ளுபவரா நீங்கள்?
எனில்‌...
உங்களுக்குத்தான் இந்தப்பதிவு...

ஆம்..
இந்த மிளகுதான்
இந்த மிளகிற்காகத்தான்
நாம் அடிமையானோம் என்றால்
நம்புவீர்களா?!!
அதுதான் உண்மை...

இங்கே...
வாஸ்கோடாகாமா வரும் வரைக்கும்
நாமும் அறிந்திருக்கவில்லை
காலிகட்டில் கால் வைப்பவன்தான்
காலை வாரப்போகிறானென்று...

சூப்பில் மிளகிடும்வரைக்கும்
அவனும் கணித்திருக்கவில்லை
விலைபேசி விற்பவனைத்தான்
வலைவீசப் போகிறோமென்று..

ஆமாம்....
மிளகாய்க்கு ஏன்
மிளகாய் என்று
பேர்வந்தது தெரியுமா?
மிளகாய்
மிள..‌.காய் (பெப்பராய்) உறைத்ததால்
மிளகாய் என்றனராம்...
அட
அவ்வளவு ஏன்?
சில்லி நாட்டைச் சேர்ந்ததால்தான்
சில்லிக்கே சில்லியென்று பெயர்...
எனில்
சில்லியும் மிளகாயும் காரணப்பெயர்களே தவிர
மிளகுபோல் உருவான
இடுகுறிப்பெயரல்ல...

கடுகு சிறுத்தாலும்
காரம் குறையாது என்பது
பழமொழி....

மிளகு சிறுத்தாலும்
மேன்மை குறையாது என்பது
புதுமொழி...

காரணம்
மிளகாயால் வரும் கேடுகள் எதுவும்
மிளகால் இல்லை...
மிளகாலே வரும் நன்மைகள் ஏதும்
மிளகாயில் இல்லை...
எனில்
மிளகை நேசி...
மிளகையே நேசி.‌‌..

வாழ்க வளமுடன்!

✍️செ. இராசா

No comments: