01/08/2023

எழுத்து ----- குறள் வெண்பாக்கள்




எல்லா எழுத்தும் எழுத்தல்ல தீதொன்றும்
இல்லா எழுத்தே எழுத்து
(1)

எழுத்தின் வலிமை எழுத்தில் தெரியும்
எழுதும்முன் எண்ணி எழுது
(2)

எழுத்தில் அறம்கண்டோன் ஏற்றுகின்ற பாட்டின்
எழுத்தில் உறைவான் இறை
(3)

மற்றவர் சொற்படியே மாற்றுகிறோம் என்றானால்
கற்றதமிழ் என்னாகும் சொல்?
(4)

இறையின் கொடையால் இறங்கும் எழுத்தால்
இறையையும் வாழ்த்தி எழுது
(5)

கலையாகச் செய்கின்ற கையெழுத்(து) ஓங்க
தலையெழுத்தும் வேண்டும் தனித்து
(6)

எழுத எழுதத்தான் ஏற்றமென எண்ணி
எழுத்தைத் தவம்போல் எழுது
(7)

விலையில்லா நல்லெழுத்தை வேண்டிவரும் பேர்க்கு
விலைவைத்துத் தந்தால் மதிப்பு
(8)

அனைத்தையும் ஏற்க அவசியம் இல்லை
வினையறிந்து செய்ய விரும்பு
(9)

தனித்துவம் காட்டாமல் தந்தென்ன வாகும்
இனியேனும் மாற்றி எழுது
(10)

✍️செ. இராசா

No comments: