06/07/2023

என்னோடு நான் --------- குறள் அந்தாதி




இத்தனைநாள் ஆகிடுச்சே... என்னப்பா செஞ்சிருக்க
செத்தழிஞ்சு போகும்முன் செய்!
(1)

செய்செய் எனநானும் செய்துதான் பார்க்கின்றேன்
செய்வினைக்கு எங்கே சிறப்பு?!
(2)

சிறப்பை எதிர்பார்த்து செய்யாமல் நாளும்
பொறுப்புடன் செய்தால் புகழ்!
(3)

புகழுக்காய்த் தானா புனைகின்றேன் இல்லை
அகவுணர்ச்சி தானே அது
(4)

அதுதான் இலக்கென்றால் ஐயமென்ன உன்னுள்
புதுப்புது யுக்தியுடன் போ
(5)

போகின்ற பாதையில்தான் போகின்றேன் என்றாலும்
போகுமிடம் சேரவில்லைப் போய்
(6)

போய்விட்டு சொல்லாதே போனவழி தப்பென
ஆய்ந்தறிந்து போனால் அழகு
(7)

அழகாகக் காய்நகர்த்தி அத்தனையும் செய்தும்
விழலுக்கு இறைத்தநீர் வீண்!
(8)

வீணருடன் கூடி விரையங்கள் செய்யாமல்
ஆனவரை செய்வாய் அடுத்து
(9)

அடுத்தடுத்து மேலேறி அப்படியே போனால்
எடுத்தசெயல் போய்விடுமா இத்து?!
(10)

✍️செ. இராசா

No comments: