02/10/2021

காந்தி உயிர்த்தெழுந்தால்----குறள் வெண்பாவில்



உப்புவரி போட்டவரை ஓடவிட்ட தேசத்தில்
தப்புவரி போட்டவர்யார் செப்பு?
(1)

ஜின்னாவும் நேருவும் சேர்ந்திருந்தால் இந்நேரம்
இன்னாவைக் காண்போமா இங்கு?
(2)

ஏட்டிக்குப் போட்டியாய் எப்போதும் மோதினால்
நாட்டிற்காக் கிட்டும் நலம்?
(3)

துப்பாக்கித் தூக்கார்முன் துப்பாக்கித் தூக்கியே
தப்பாக்கித் தாக்கினால் தப்பு
(4)

அரிசனம் ஓங்கிட அம்பேத்கர் தந்த
உரிமைகள் எங்கே உரை?!
(5)

உயிர்வதைத் தப்பென்ற உண்மையைச் சொன்னால்
உயிர்க்கொலை செய்யும் உலகு
(6)

குடிகாக்க வேண்டிக் குடியரசு செய்தால்
குடி-அரசாய் ஆனதேன் கூறு?
(7)

சட்டத்தின் முன்னே சகலரும் ஒன்றென்றால்
இட்டம்போல் மாற்றுபவர் யார்?
(😎

நீட்டென்றும் கேட்டென்றும் நீட்டி முழங்காமல்
நீட்டுவீர் நல்நம்பிக் கை
(9)

வேற்றுமையில் ஒற்றுமைதான் வேண்டுகிற ஒன்றியமாம்
மாற்றிவிட வேண்டாம் மதி
(10)

✍️செ. இராசா

#வீர_வணக்கம்

No comments: