29/01/2017

உண்மை எதுவெனத் தெரியாமல்


உண்மை எதுவெனத் தெரியாமல்
உழல்வோர் பலராய் உள்ளனரே!

துன்பம் நீங்கிய நிகழ்வினையே
இன்பம் என்றே நினைக்கின்றார்!

உள்ளம் மகிழ்ந்திட ஆசைகொண்டு
பள்ளம் படுகுழி வீழ்கின்றார்!

மோசம் போவோம் என்றறிந்தும்
வேசம் கலைக்கவே மறுக்கின்றார்!

என்போல் சிறந்தவர் யாரென்றே
தன்போல் அவரே பேசுகின்றார்!

ஆசை வெகுளி காமம் தனில்
ஆதிக்கம் கொண்டே ஆள்கின்றார்!

இல்லறம் நல்லறம் என்றறிந்தும்
தன்னறம் அதுவாய் மாற்றாதார்!

மெய்ப்பொருள் அதனை அறியாமல்
பொய்ப்பொருள் சொல்லித் திரிகின்றார்!

எத்தனை கோடி இன்பமுண்டு !
எங்கும் இறைவன் சாயலுண்டு!

அன்பே சிவமாய் வாழ்ந்திடுவோம்!
அறம் வழிப் பொருளில் இன்புறுவோம்!

உண்மை இதுவெனத் தெரிந்தேநாம்!
உள்ளம் உயர்வுற வாழ்ந்திடுவோம்!


✍️ செ. இராசமாணிக்கம்

No comments: