26/05/2025

வருகிறோம் வளர்கிறோம்

 

வருகிறோம் வளர்கிறோம்
.......வளர்ந்தபின் போகிறோம்
மாறியது ஒன்றும் இல்லையே!
தருகிறோம் தளர்கிறோம்
.......தளர்ந்தபின் விழுகிறோம்
தாண்டியது ஒன்றும் இல்லையே!
ஒருவராய் உயிர்க்கிறோம்
........ஒருவரில் கலக்கிறோம்
ஓடியது வாழ்வின் எல்லையே!
ஒருவரின் வழியிலே
........ ஒருவரை விதைக்கிறோம்
ஊழ்வரவு தீர வில்லையே!
✍️செ. இராசா

24/05/2025

நகைச்சுவை

 

நகைச்சுவை உள்ளுணர்வால்
.....நட்பு பெருகும்
பகையுணர்வு கொண்டிருந்தால்
.....பாழாம்- மிகையில்லை
நல்லிணக்கம் கூட்டும்
.....நகையுணர்வு மேலோங்க
சொல்லிலே வேண்டும்
.....சுவை
✍️செ. இராசா

12/05/2025

நல்லிணக்கம்

 

நல்லிணக்கம் உண்டேல் நமைவெல்ல யாருண்டோ?
சொல்லி அடித்திடலாம் சூழ்ந்து
(1)

இணக்கமுடன் வாழ இடர்:இடரிப் போகும்
கணம்கணம் வாழ்ந்து கட!
(2)

உடலோ டுயிரென ஒற்றுமையாய்ப் போனால்
கடலும் கடுகளவே காண்!
(3)

தன்னோடு தானே தனியாக நிற்பவர்கள்
என்றைக்கும் போகார் இணைந்து
(4)

உடலுயிர் உள்ளமெலாம் ஓர்கோட்டில் வந்தால்
கடந்திடலாம் இவ்வாழ்வைக் கண்டு
(5)

தெளிவான ஒத்திசைவில் தேனீக்கள் ஆனால்
எளிதாகக் கிட்டும் இலக்கு
(6)

குடும்ப உறவுக்குள் கூடும் இணக்கம்
அடுத்துவெளி போனால் அழகு
(7)

இணக்கமுடன் செய்கின்ற எச்செயலும் வாழ்வில்
வணக்கமிட வைக்கும் மகிழ்ந்து
(8)



சுற்றமும் நட்புமாய் சூழ்ந்திருக்க வாழ்பவர்கள்
பெற்றவரம் நல்லிணக்கப் பேறு
(9)

எல்லா உறவும் உறவல்ல எப்பிணக்கும்
இல்லா உறவே உறவு
(10)

✍️செ. இராசா

11/05/2025

பாகிஸ்தானிய நண்பர் திரு. ஹபீப்

 

இனி இராணுவத்தில் சேர உடல் தகுதியைவிட தொழில்நுட்ப அறிவும் செயற்கை நுண்ணறிவு என்னும் AI தொழில் நுட்ப அறிவுமே தேவை என்பதை உணர்த்தியுள்ளது இந்தப் போர். அதைவிட முக்கியம் போலித் தகவல்களைப் பரப்பும் சமூக வலைத்தளப் போராளிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்க அதே ரீதியிலான சமூக வலைத்தளப் பின்புலம் கொண்ட ஒரு நான்காவது படையும் தேவையென்பதே. எது எப்படியோ இந்தப்போர் முடிவுக்கு வந்தமையில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் உறவுகளே...

காரணம், நான் பற்பல பாகிஸ்தானிய மக்களுடன் பழகியவன் என்கிற ரீதியில், அவர்களைப்பற்றி நன்றாகவே அறிந்து வைத்துள்ளேன். ஆம் பெரும்பாலானவர்கள் உண்மையை உணர்ந்த நல்ல நண்பர்களே. நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளதை நன்றாகவே உணர்ந்தவர்கள். இதை உணராத சில அரசியல் வாதிகளாலேயே இப்படிப்பட்ட சூழல் உருவாகியுள்ளது என்பதை ஒத்துக் கொள்பவர்கள்.

எது எப்படியோ... நாங்கள் இங்கே கத்தாரில் உள்ள இந்திய பாகிஸ்தானியர்கள் ஒற்றுமையாகவே உள்ளோம் என்பதை உறுதிப்படுத்தவே இந்தப் படத்தைப் பகிர்கின்றேன் உறவுகளே...

இந்தப் படத்தில் உள்ளவர் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பாகிஸ்தானிய நண்பர் திரு. ஹபீப் அவர்கள் (முன்னாள் கத்தார் அரசு ஊழியர்) அவருடன் அடியேன் செ. இராசமாணிக்கமாகிய யாம்.

✍️செ. இராசா

06/05/2025

வீட்டின்பால்

 

சூப்பினிது ஜாமினிது என்பர்தம் வீட்டின்பால்
ஆப்பமே உண்ணா தவர்

30/04/2025

ஒருநாளிலை ஒருநாளிலே

 

ஒருநாளிலை ஒருநாளிலே
...உயர்வாய்ப்படி என்றே
திருவாய்மொழி மொழியாகவே
...தெளிவாயுரை நன்றே...
முருகா:அருள் தருவாயென
...முறையாய்த்தொழ இன்றே
வருவானவன் தருவானவன்
....முயல்வாய்; அடி சென்றே...
✍️செ. இராசா

28/04/2025

என்ன சொல்லி என்ன ஆக

 

என்ன சொல்லி என்ன ஆக
...என்று நோக வேண்டுமா?
இன்னல் தந்த எதிரி இங்கே
...இல்லை என்றே வேண்டுமா?
இன்னும் இன்னும் இன்னும் என்றே
....என்றும் தொடர வேண்டுமா?
இன்பம் சூழ இன்னல் மாய
.....எங்கும் மாற வேண்டுமா?
✍️செ. இராசா

25/04/2025

கலை வேறு கலைஞன் வேறல்ல

 

கத்தாரில் எத்தனையோ தமிழ் அமைப்புகள் இருந்தாலும் ஒரு விடயம் மட்டும் நன்றாகப் புரிகிறது. இங்கே அமைப்பு ரீதியாக இருந்தால் மட்டுமே முறையான அழைப்பு வருகிறது. இல்லையேல் நீங்கள் என்னதான் திறமையானவர்களாக இருந்தாலும் ஒன்று ஓரங்கட்டப் படுவீர்கள் இல்லையேல் அழைப்பே வந்தாலும் நமக்கான மதிப்பை அங்கே எதிர்பார்க்க முடியாது.

கவிதை எழுதுபவனெல்லாம் கவிஞனல்ல, கவிதையாக வாழ்பவனே கவிஞன் என்ற பாரதியின் வரிகளுக்கிணங்க உண்மையை உரக்கச் சொன்னாலும் ஓரங்கட்டப்படுகிறோமோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை.
இருப்பினும் எம்குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் எப்போதும் போலவே...

இங்கே கலை வேறு கலைஞன் வேறல்ல. கலையை மதிப்பவன் கட்டாயம் கலைஞனையும் மதிப்பான். அப்படி மதியாத இடத்தில் ஒரு கலைஞன் இருந்தால் அது அவன் கலைக்குச் செய்யும் அவமதிப்பே என்பதை உணர்ந்து, சில அமைப்பு ரீதியான நிகழ்வுகளில் கலந்து கொள்வதை என்று நாம் தவிர்க்கிறோமோ அன்றே அவர்களும் திருந்துவார்கள் என்பதை நாம் உணர வேண்டும் மக்களே... இல்லையேல்....கடைசிவரைக்கும் அவர்களுக்காய்க் கைதட்டும் ஒரு அங்கத்தினராக மட்டுமே இருக்க வேண்டியதுதான்.

நன்றி!

செ. இராசமாணிக்கம்

20/04/2025

வெங்காயம்

 

சர்க்கரை இல்லாத் தேநீர் தந்தாய்
இன்னும் இனிக்கிறதே...! என்றேன்..
நல்ல நகைச்'சுவை என்கிறாய்..

வெறும் கஞ்சிதான் உள்ளதென்றாய்
தொட்டுக்க என்ன? என்றேன்..
சிரித்தபடி அருகே வந்தாய்...
என்னாச்சு என்றேன்..
இந்தா... வெங்காயம் என்கிறாய்

✍️செ. இராசா

19/04/2025

மறுமலர்ச்சி என்றகட்சி

 

மறுமலர்ச்சி என்றகட்சி
......மாநிலத்தில் கண்டு
மறுமலர்ச்சி என்றாலே
.....மாற்றமெனச் சொல்லி
மறுபடியும் மாறிநின்று
.....மாறிநின்று நன்றாய்
மறுமலர்ச்சி கண்டவர்க்கெம்
..... வாழ்த்து!

✍️செ. இராசா