04/03/2026

படபடப்பாய் உள்ளதெனில்

 

படபடப்பாய் உள்ளதெனில்
......பைய நிமிர்ந்து
கடவுளை உள்நோக்கிக்
......காண்பீர்!- திடமடைவீர்!
நோக்கமுடன் நன்றாக
.......மூச்சுப் பயிற்சிசெய்து
தீர்க்கமுடன் செய்வீரே
......தேர்வு!

03/03/2026

வெறுப்பு

 




பற்றிய ஒன்றைப்
பறித்துப் பாருங்கள்...
பச்சக் குழந்தைகூட அலறும்..
ஆனால்..
வெறுப்பை உமிழாது!

அதுவே
ஒருவர் பற்றிய விடயத்தைப்
ஒருவரிடம் பேசுங்கள்
வெறுப்பு வாந்திகள்
வேகமாய் விழும்...

விருப்பின் முரணாய்
வெறுப்பே வீற்றிருந்தாலும்
வெறுப்பையே விரும்பும்
அருவருப்பான உலகமிது....

யோசித்துப் பாருங்கள்?!

பற்றற்றான் பற்றையே
பற்றச்சொன்னார் வள்ளுவர்
........பற்றினோமா?!
பற்றற்றானை விட்டுவிட்டு
பற்றினோம் மதத்தை; விளைவு
பற்றி எரிகிறதுபார்; ஆம்
பற்றி எரிகிறது பார்!

முதலில் ஒருவர் வருவார்!
பின்னர் இன்னொருவர் வருவார்!
இப்போது முன்னவர்பின் நிற்போர்; பழமைவாதி!
பின்னர்வர்பின் நிற்போர்; புதுமைவாதி!

அதற்குப்பின் ஒருவர் வந்தால்
முந்தைய பின்னவர் பழமைவாதி!
இன்றைய பின்னவர் புதுமைவாதி!
இதில் யார் சரி?
இல்லை யாருடையது சரி?!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!

உயிர்நீங்கும் போதும்
பாவிகளை மன்னியுங்கள் என்றார்
இயேசுநாதர்!

யார் பிறரை மன்னிக்கிறாரோ
அவரின் கண்ணியத்தை அதிகப்படுத்துகிறான் என்றார்
நபிகள் நாயகம்!

தத்வமஸி எனும் தத்துவம்கூறி
எதிரியை நேசிக்கச் சொல்கின்றன
உபநிடதங்கள்!

பகைவனுக்கு அருள்வாய்
என்றார் பாரதியார்!
வெறுப்பை அன்பே வெல்லும் என்றார் மகாத்மா!

இப்படி எத்தனையோ போதனைகள்
இருந்தும் என்செய்ய?

வெறுப்புப் பிரசாரம்
வெறுப்புப் பின்னூட்டமென
எதிர்மறைக் கருத்துக்களை
எப்போதும் நிறைத்தால்
எதிர்காலத் தலைமுறை
என்னவாகும்?!
அட
இப்போதே இடிஇடிக்கிறதே.‌‌

போதும்!
வெறுப்பை விருப்பால் வெல்வோம்!
விருப்பை விரிவாய்க் கொள்வோம்!

28/02/2026

பன்னீர் சொம்பு

 




ஞாபகம் இருக்கிறதா?!
முன்பெல்லாம்
சுப காரியங்களில் பார்த்திருப்போம்.
நீண்ட கழுத்தோடு
தலைகுனிந்து வரவேற்கும்
ஒரு வகையான சொம்பு;
பெயர் பன்னீர் சொம்பு..

பாவம்...
இயந்திர வருகை
சொம்பை ஓரம்கட்ட..
சொம்பு நழுவி
சாக்கடையில் வீழ்ந்தது ...
என்னே ஆச்சரியம்...?!!
பன்னீர்
பாவ விமோசனம் அடைந்தது...

ஒன்றை மட்டும் சொல்லுங்கள்?
கோவிலின் உள்ளிருந்தால்
பன்னீர் தீர்த்தமாகும்
சொம்பு இடறி விழுந்தால்
சாக்கடை சந்தனமாகுமா?!

✍️செ. இராசா 

25/02/2026

ஊனொன்றைத் தந்தாய்

 

ஊனொன்றைத் தந்தாய்
...உயிரொன்றை வைத்தாய்
....உலகமிதில் உலவ விட்டாய்!
வானொன்றைத் தந்தாய்
.....வளியொன்றை வைத்தாய்
......வகைவகையாய் படைத்து விட்டாய்!
ஏனொன்றைத் தந்தாய்
.....எமதென்று வைத்தாய்
.....எனையறிய வையும் இறைவா!
நானொன்றைத் தந்தால்
....நானென்ன தருவேன்
....மனமார்ந்த நன்றி இறைவா!
பைந்தமிழைத் தந்தாய்
....பறைசாற்ற வைத்தாய்
....படிப்படியாய் ஏற்றி விட்டாய்!
ஆய்ந்துணர வைத்தாய்
...அறம்புரியச் செய்தாய்
...அறிவொளியைத் தூண்டி விட்டாய்!
சாய்ந்தழிய வைத்தாய்
....சகலருக்கும் ஒன்றாய்
....சமத்துவத்தைத் தந்த இறைவா!
ஓய்ந்தமரும் நாளில்
....உளமுணர்ந்த தாலே
....உரைக்கின்றேன் நன்றி இறைவா!

24/02/2026

அரசியல் திருவிழா

 

அரசியல் திருவிழாவிற்காய்
ஆயிரம் தோரணங்கள்!
முதல் மரியாதை வேண்டி
முரண்பாட்டுக் கூட்டணிகள்!
கரகாட்டம் குத்தாட்டமாய்
உற்சாகத் தொண்டர்கள்!
அள்ளிவிடத் தயாராகும்
குளிர்பான தானங்கள்!

இதோ சூடுபிடிக்கிறது
இன்னுமோர் சூது களம்...
பகடை அவர்கள் கையில்
ஆனால்...பலி?!.

மீண்டுமோர் துகிலுரிப்பு நடக்க
இப்போதே தயாராகிறார்கள்....

பாவம் மக்கள்...

23/02/2026

இரண்டு நண்பர்கள்

 



இளவரசனும் சங்கரும் பால்யகால நண்பர்கள். கிட்டத்தட்ட எட்டாவது படிக்கிற காலத்தில் இருந்து தற்போது வரையுமே நல்ல நண்பர்களாகத்தான் இருந்தார்கள். இருந்தார்கள் என்றால் இப்போது இல்லையா என்றா கேட்கிறீர்கள்?!!. இருங்க சொல்கிறேன்.

வேறு ஏதோவொரு பள்ளியில் இருந்து மாறுதலாகி சங்கர் படிக்கும் பள்ளிக்கு இளவரசன் வந்தபோது அவனிடம் யாருமே அவ்வளவாக பேசவில்லை. அப்போது சங்கர்தான் இளவரசனிடம் நெருங்கிப் பழகினான். சங்கரின் ஊரோ பள்ளி இருந்த அதே ஊர்தான். ஆனால் இளவரசன் ஒரு 5 கிலோமீட்டர் தாண்டி உள்ள கிராமத்தில் இருந்து வருபவன். சிலசமயம் சைக்கிளில் பலசமயம் பேருந்தில் தான் வருவான். பள்ளிக்கூடம் மாலை 4 மணிக்கு விட்டாலும் மாலை 6:30 மணிக்கு வரும் பேருந்துக்காய்க் காத்திருந்துதான் ஊர் போய்ச்சேருவான். அந்த இடைப்பட்ட நேரத்தில் சங்கரின் வீட்டருகே விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் இளவரசன். இப்படித்தான் இவர்கள் இருவருக்குமிடையே நட்பு வளர்ந்தது. ஆனால், இளவரசனின் படிப்பு இந்தப் பள்ளிக்கு வந்தபின் படுமோசமானதால் அவன் தந்தையார் தன் ஊரிலிருந்து கிட்டத்தட்ட 30கிமீ தொலைவில் உள்ள வேறு ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்து விட்டார்கள். இளவரசன் வாழ்வில் இது மிகப்பெரிய வடுவை உண்டாக்கியது. அப்போதும்கூட இளவரசன் சங்கருக்கு கடிதம் மூலம் தன் நட்பில் ஆறுதல் அடைந்தான். ஒருமுறை தன் புதிய பள்ளியில் ஆண்டுவிழா அன்று மேடை நாடகத்தில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியபோது தன் நண்பனையும் அந்தப் பள்ளிக்கு அழைக்க அவனும் வந்திருந்தான். தன் அதீத பிடிவாதத்தால் அந்தப் பள்ளியில் இருந்து அடுத்த வருடமே விலகி தன் நண்பன் இருந்த ஊருக்கு அருகிலேயே இளவரசு வந்துவிட்டான். பிறகு இளவரசு பொறியியல் கல்லூரிக்கும் சங்கர் வேறு ஒரு கலைக் கல்லூரிக்குமாய்ச் செல்லும் சூழல் உருவானது. எங்கே எப்படிப் போனாலும் இருவரும் நட்பை விடாமல் தொடர்ந்தார்கள்.

பிறகு வேலை நிமித்தமாக இளவரசு தொலைதூரம் சென்றான். சங்கர் உள்ளூரிலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென சங்கரின் அம்மா இறந்த செய்தி கேட்டு இளவரசு பதறிப்போய் ஓடிவந்ததுதான் அவன் அனுபவித்த முதல் மரணச் செய்தி. அந்தக் குடும்பத்தில் ஒருவனாக இருந்து அனைத்து காரியங்களையும் முடித்துவிட்டு மிகவும் கனத்த இதயத்தோடு இளவரசு வேலைக்குச் சென்றான்.

கால ஓட்டத்தில் வெளி மாநிலம் வெளிநாடு என எங்கெங்கோ சென்றாலும் இளவரசு தன் நண்பனை என்றுமே மறவாமல் வரும்போதெல்லாம் தன் நண்பனைக் பார்த்து இரவெல்லாம் தூங்காமல் மனம்விட்டுப் பேசித்தான் பிரிவான். ஒருமுறை சங்கரின் தங்கைக்குத் திருமணம் என்கிற செய்தி கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து பணம் ஏதும் வேண்டுமாடா என்று கேட்டு உடனேயே தன்னிடம் இருந்த ஐம்பதாயிரம் ரூபாயை இந்தாடா என்று கொடுத்தான். அந்த நேரத்தில் சங்கர் வடித்த ஆனந்தக் கண்ணீரில் அவர்களின் நட்பு செழித்து வளர்ந்தது‌ அப்படி...அவன் வேறு இவன் வேறு என்றெல்லாம் இருவருமே நினைத்ததே இல்லைதான்.

உள்ளூரில் கஷ்டப்பட்ட சங்கருக்கும் அரசு வேலை கிடைக்கிறது. வெளிநாட்டில் இளவரசும் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறான். ஒருமுறை இளவரசு விடுமுறையில் வந்தபோது மொட்டை மாடியில் இப்படிப் பேசுகிறான், "நண்பா, நாம் எப்போதும் ஒன்னாவே ஒரே வீட்டுல இருக்கணுன்டா.... கல்யாணம் ஆனாலும் சரி.... மாடியில் நீ...கீழ்வீட்ல நான்...இல்லையினா மாறி கூட இருந்துக்குவோம். ஆனால் ஒரே வீட்ல தான்டா இருக்கனும்".. இப்படிலாம் பேசிய இவர்களின் வாழ்க்கை வேகமாகவே ஓடுகிறது. கல்யாணம் ஆகி இருவருக்கும் குழந்தைகள் எல்லாம் வந்துவிட்டது.சொன்னது போலவே இளவரசு பார்த்துப் பார்த்து ஒரு வீடு கட்டி அதில் கீழ் வீட்டில் சங்கரின் குடும்பமும் மேல்வீட்டில் தானுமாய் வசித்து வருகிறான். இப்ப வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லைதான்.

இப்ப சங்கரின் மனைவிக்கும் ஒரு ஆசை வருகிறது. வேறு ஒன்றுமில்லை தானும் ஒரு வீடுகட்டி போகனும்னு. நியாயமான ஆசை தானே?.... இதுபற்றி முன்பே நண்பர்கள் பேசியுள்ளார்கள், இப்படி: "நண்பா...நம்ம மனைவிகளின் ஆசை வேறு விதமாக இருந்தால் நாம் என்ன செய்றது நண்பான்னு. அதுக்கு இளவரசு சொன்னான்...டேய்... அவுங்களுக்காக கட்டுற வீடும் இருக்கட்டும்....அதை வாடகைக்கு விட்டுட்டு..நாம ஒன்றாகவே இருப்போம்" ஆனால் இப்படி பேசுறதெல்லாம் நடந்திடுமா என்ன?!!..
ஆனாலும்...என்ன நினைச்சாங்களோ தெரியல... சங்கர் குடும்பம் புதுவீடு கட்டி பால் காய்ச்சிப் போயிடுச்சு. இதுல இளவரசுக்குத்தான் சரியான அதிர்ச்சி. காரணம்... அவனால் சின்ன வயதில் போட்ட ஒப்பந்தத்தை மீறியதைத் தாங்க முடியவில்லை. இது என்ன கொடுமையா இருக்கு?! கால ஓட்டத்தில் இதையெல்லாமா எல்லோரும் ஞாபகம் வச்சுக்குவாங்க...அப்படின்னு அவன் மனசுக்குள்ள ஒரே சூறாவளி அடிச்சாலும் அவனால் ஏத்துக்கவே முடியலை. தன் நண்பன் இப்படி சரியாக் கூட வருத்தம் தெரிவிக்காமல் சட்டுன்னு போயிட்டானேன்னு இளவரசு சங்கரிடம் பேசுறதே இல்லை. இவன் பேசலையேன்னு அவனும் பேசறது இல்லை. அப்புறம் இரெண்டுபேருக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரிச்சு இப்பப் பல வருசம் ஆயிடுச்சு. ஆனாலும் இளவரசு இப்போதும் நண்பனை நினைச்சிட்டுதான் இருக்கான். சங்கரும் நினைக்காமலா இருப்பான்?!!..

21/02/2026

ஏனோ தெரியவில்லை

 

ஏனோ தெரியவில்லை
இம்முறை அதிகமாய் நாறுகிறது
அரசியல் சாக்கடை

17/02/2026

விளம்பரம்

 


 
படைப்பில்
பல்சுவை இருந்தாலும்
இப்படித்தான் என இயம்பாவிடில்
எப்படி விலைபோகும்?!
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
அஃதே; விளம்பரமில்லா பண்டமும்
ஆம்...
விளம்பரம்
விளம்பினால் வரு(ம்) மானம்!
இல்லையேல்....வெறும் ஓலம்!
அதீத எதிர்பார்ப்பும் ஆபத்தே: அது
அளவை மீறிய உப்பைப்போல
அறுசுவை படைப்பையும்
அருவருக்க வைத்துவிடும்!
ஜாக்கிரதை!
சில விளம்பரங்கள் மோசமானவை!
அது உண்மையில் விசம் தூவும்!
ஊடக வழி தூபமிடும்!
சில விளம்பரங்கள் வசீகரிப்பவை!
அது இலவசமென வரவு வைக்கும்!
வீக்கமென செலவு வைக்கும்!
சில வெற்று அறைகூவல்களும்
ஒரு வகையில் விளம்பரங்கள்தான்
அவை தன் இருப்பைக் காட்ட
அவர்களாகவே எழுப்பும் ஓசை...
கிரிக்கெட் விளையாட்டில்; சில
கிறுக்கர்கள் செய்வதுபோல்
போட்டி முடிவே
இவர்களையும் முடித்துவிடும்...
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!
சுய தம்பட்டங்கள் எல்லாம்
சுய தம்...பட்டங்கள் ஆகா..
அது...சுயமாய் தம் புட்டங்களில்
அவர்களே வைக்கும் சூடு..
அவ்வளவே...
செய்யுங்கள் விளம்பரம்
செய்ததைச் சொல்லி...அல்லது
செய்வதைச் சொல்லி
செய்யாதீர் விளம்பரம்
செய்யாததைச் சொல்லி...அல்லது
செய்ய முடியாததைச் சொல்லி!

15/02/2026

கிணற்றுத் தவளை போலிருந்து

 

கிணற்றுத் தவளை போலிருந்து
...கேட்கும் உந்தன் கேள்வியை
உணர்வு நோக்கில் மேலெழும்பி
‌...உற்று நோக்கிக் கேளுமே?!
பணத்தை மட்டும் எண்ணியெண்ணி
... பார்க்கும் உந்தன் பார்வையை
சணத்தில் நீங்கும் உயிரையெண்ணி
...தன்னுள் நோக்கிப் பாருமே!

பிண்ட முள்ளே ஓடிபின்னே
....பிரிந்து போவ தெங்ஙனே?
அண்ட மெங்கும் தேடினாலும்
....அறிந்து கொள்வ தெங்ஙனே?!
பண்ட மாற்றுச் சந்தைபோல
....பதிவை மாற்றும் விந்தையை
விண்ணை உற்று நோக்கியுண்மை
....விளங்க வைப்பீர் சிந்தையை!

தாகம் தீர்க்கும் சொர்க்கம்

 


 
அதுவே ரய்யான் ரய்யான்...
ஏகன் செய்த அற்புதம்
அதுவே ரய்யான் ரய்யான்
ரய்யான் ரய்யான் ரய்யான் ரய்யான்
ரமலான் நோன்பின் புண்ணிய
பலனே ரய்யான் ரய்யான்...
பொறுமை நேர்மை அன்பின் வரமே ரய்யான் ரய்யான்
ரய்யான் ரய்யான் ரய்யான் ரய்யான்
பசியை உணர வேண்டுமென்றே
படைத்த இறைவன் நினைத்தானே..
வருடக் கணக்கில் மாதமொன்றை
நோன்பு நோற்க விதித்தானே...
புலன்கள் அடக்கும் போதனை முறையை
புரிந்து நடக்க வகுத்தானே
இம்மை வாழ்வின் சோதனை முறையை
மறுமைக்காகவே கொடுத்தானே..
( பாங்கு ஒலிக்க வேண்டும்)
கொடுக்கும் உள்ளம் வேண்டுமென்றே
சகாத் கொடுக்க பணித்தானே..
ரமலான் நோன்பு நோற்றபின்னே
பித்ரா கொடுக்க பணித்தானே..
உஷ்ரு சதக்கா என்றேஅவரும்
கருணை புரிய விதித்தானே
கருணைக் கடலாய் இருப்பவன் அன்றோ
துளியில் கடலைக் காண்பீரோ.....
(பாங்கு ஒலிக்க வேண்டும்)
தாகம் தீர்க்கும் சொர்க்கம்
அதுவே ரய்யான் ரய்யான்...
ஏகன் செய்த அற்புதம்
அதுவே ரய்யான் ரய்யான்
ரய்யான் ரய்யான்