சென்னை விமான நிலையத்தில் நம்ம தமிழ்நாட்டு கைவினைப் பொருட்கள் விற்கும் கடையில் நுழைந்தபோது இம்முறை நான் வாங்கிய பொருட்கள் மரத்தால் செய்த புத்தர் சிலையும் (500₹) காகிதத்தில் உருவான வள்ளுவர் சிலையும்தான் (250₹). பொதுவாக வெளியே விற்பனை செய்யும் பொருட்கள் விமான நிலையத்தில் பல மடங்கு கூடுதலாக இருக்கும். ஆனால் இது தமிழ் நாட்டு அரசின் அங்காடி என்பதால் வெளியே என்ன விலையோ அதையே வைத்திருந்தார்கள் (வாடகை தமிழ் நாட்டு அரசாங்கம் கொடுக்கிறது). தற்போது எப்படி வியாபாரம் போகிறது என்று கேட்டபோது வளைகுடா நாட்டில் நடக்கும் போரின் விளைவாக வியாபாரமே இல்லையென்று மிகவும் வருத்தப்பட்டார் விற்பனையாளர். அதாவது தினமும் 1 இலட்சம் வியாபாரம் போகுமிடத்தில் வெறும் 3000/- போவதே பெரிய விடயமாகக் கூறினார். உண்மைதான் உறவுகளே....ஒரு காஃபி 300/- ரூபாய் விற்பனையாகும் இடத்தில் அரசு விற்பனை நிலையம் என்பதால் மிகவும் குறைவாகக் கிடைக்கும் இதுபோன்ற கடைகள்கூட வியாபாரம் இல்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு போரின் தாக்கம் எந்த அளவு உள்ளதென்று புரிந்து கொள்ள முடியும்.
உண்மையில் இந்தப்போரின் உண்மையான தாக்கம் என்பது இப்போது வரையிலும் நம் நாட்டில் அதிகமாகப் பிரதிபலிக்காமல் இருப்பதற்குக் காரணம் தேர்தல் மட்டுமே. தேர்தல் முடிந்த பிறகே தெரியும் உண்மையான தாக்கம்.
கூடிய விரைவில் போர் முடிவுக்குவர அனைவரும் வேண்டுவோமாக.
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!








