கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முதுகலைப் பட்டம் (MSc) பெற்று மருந்து ஆலையில் பணிபுரியும் அருண்குமார் எனும் தம்பியை, கத்தார் தேசிய நூலகத்திற்குக் கூட்டிச் செல்வதற்காக அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றிருந்தேன். சொன்ன நேரத்திற்கு வராமல் அவர் சற்றுத் தாமதித்தார். பிறகு, பதற்றத்துடன் ஓடிவந்து வாகனத்தில் அமர்ந்தவர், தாமதத்திற்கு மன்னிப்புக் கோரி ஒரு விளக்கத்தையும் அளித்தார்.
அவர் மொட்டைமாடிக்குத் துணிகளை எடுக்கச் சென்றபோது, அங்கே ஒரு தமிழ்ப் பையன் இவருடைய போர்வையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தானாம். "என்ன தம்பி... அப்படிப் பார்க்கிறாய்?" என்று இவர் கேட்க, அந்தப் பையன், "இல்லை அண்ணா, இதே போன்ற போர்வைதான் என்னுடையது; அது காணாமல் போய்விட்டது. அதைப் பார்த்தேன்" என்று கூறியுள்ளான். உடனே இவர், "அப்படியா தம்பி... உனக்கு அந்தப் போர்வை வேண்டுமா? தாராளமாக எடுத்துக்கொள், நான் வேறு வாங்கிக்கொள்கிறேன்" என்று கொடுத்துவிட்டார். அந்தப் பையனும் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் நன்றி கூறிச் சென்றுள்ளான்.
இந்த நிகழ்வை அவர் என்னிடம் பகிர்ந்தபோது, பல சிந்தனைகள் என் மனதில் ஓடின. அந்தப் பையனின் ஏழ்மையா? அவன் சொன்னது உண்மையா? அல்லது இந்தப் பையனின் பெருந்தன்மையா? இல்லை, இவன் ஏமாற்றப்படுகிறானா? எனப் பல கேள்விகள் எழுந்தன.
இதற்கான தீர்வு அல்லது தெளிவு, அதே நாளில் மாலை நான் வாசித்த நாகூர் ரூமி அவர்களின் "இந்த விநாடி" என்ற நூலில் கிடைத்தது. "உங்கள் சட்டையை ஒருவர் எடுத்துக்கொண்டால், அவருக்கு உங்கள் கோட்டையும் சேர்த்துக் கொடுத்துவிடுங்கள்" என்ற இயேசுவின் போதனையை அந்த நூல் சுட்டிக்காட்டியிருந்தது. ஆகா..ஆகா..
அந்தத் தம்பியின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
இப்படியான மனிதநேயம் மிக்க செயல்கள் தொடரட்டும். அருமை தம்பி!

