10/11/2022

பாய்கின்ற நேரத்தில்

 


பாய்கின்ற நேரத்தில்
........பாய்ந்தோடிச் சென்றால்தான்
வாய்மூடி கைபொத்தி
........வந்தவழி- போய்விடுவர்
பாய்கின்றன நேரத்தில்
........பாயாமல் நின்றுவிட்டால்
நாய்பொழப்பே நம்பொழப்பு
.......நம்பு!

முறுக்கு மீசைக் காரா

 

முறுக்கு மீசைக் காரா- உன்
முடிவை சொல்லிப் போடா..
நறுக்குத் தெறிக்க நீயும்- நல்ல
நாளைக் குறிக்க வாடா..
 
முட்டை முழியக்காட்டி- எனை
முடிஞ்சு வச்ச சகியே...
பந்தல் கொடியநாட்டி- நான்
பந்தி வைப்பேன் முறையே...
 
நீ என்னத்த சொன்னாலும்
அதை உன்-அத்தை கேட்கலையே
 
நம் எண்ணத்த மெய்யாக்க
நீ கன்னத்தைக் காட்டடியே..
 
ஏய்....சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு- நான்
சீக்கிரம் வருகிற மெய்லு...
நீ....சூப்பரு டூப்பரு ஃபிகரு- உனைத்
தொட்டதும் உயருது சுகரு..
 
ஏய்...இடக்கர டக்கலு ஸ்டைலு- ஏன்
இடையில வருகுது சொல்லு?
நீ......சட்டுனு சடக்குனு நில்லு- சுய
சரிதையில் பகுதியை மெல்லு!
 
✍️செ. இராசா

ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல்

 



[எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். இன்னும் பதில்தான் வரவில்லை. அந்தக் கேள்வி இதுதான்]
 
ஐயா வணக்கம்!
எனக்கு, நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம்! இதுபற்றி எவ்வளவோ தேடினாலும் விடைதான் கிடைக்கவில்லை. கண்டிப்பாக தங்களால் (மட்டுமே) முடியுமென்றே, இந்த மின்னஞ்சலை எழுதுகின்றேன்.
 
இந்த சாதி, இந்தப் பிரிவுக்குள்தான் வருகிறது என்பதை நம் சுதந்திர இந்தியாவில், ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவந்தவர்கள் யார் யார்? எப்போது? அந்த அமைப்பில் எத்தனை பேர் இருந்தார்கள்? அவர்களுக்கெப்படி இந்த புள்ளி விபரங்கள் அனைத்தும் தெரியும்? உதாரணமாக, வெள்ளாளர் இனத்தில், சைவ வெள்ளாளர்கள் OC என்றும், வீரகொடி வெள்ளாளர் BC என்றும், இசை வெள்ளாளர் MBC என்றெல்லாம் வகுத்தது யார்? இப்படி ஒவ்வொரு சாதிக்குள்ளும் எத்தனையோ பிரிவுகள் உள்ளது. இதையெல்லாம் யார் வகுத்தார்கள்? எப்படி வகுத்தார்கள்? அவர்கள் வகுத்தவைகள் எல்லாம் சரியா?
 
இன்னும் இந்த சாதியக்கட்டுகள் இருப்பதை எப்படி மாற்றலாம் என்னும் திட்டங்கள் எல்லாம் நம் அரசியல் அமைப்பில் உள்ளதா? அப்படி இருந்தால், ஏன் கட்சிப் படிவங்களில் சாதிய ஓட்டுக்கள் பற்றியெல்லாம் கேட்கும்படியான கேள்விகள் உள்ளன? இன்னும் சாதி பார்த்தே வேட்பாளர்கள் நிறுத்தும் போக்கைத் தாங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்? உண்மையில் நம் இந்தியா அல்லது தமிழகம் சாதியத்தில் இருந்து வெளிவரும் சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா? இந்நிலை மாற வாய்ப்புள்ளதா?
தயவுகூர்ந்து விளக்க வேண்டுகிறேன்!
 
இப்படிக்கு,
செ. இராசமாணிக்கம்.
[விடைதேடும் கேள்விகள்...விடை இருந்தால் கூறுங்கள்]

08/11/2022

பல்

 



பல் மருத்துவக் கல்லூரியின் ஆண்டுப் புத்தகத்தில் நான் எழுதிய பல் கவிதை வெளிவந்துள்ளது. நிறைய வரிகளை நீக்கி, அங்கும் இங்கும் மாற்றி போட்டுள்ளார்கள். இருந்தாலும் பரவாயில்லை.
முழுக்கவிதையும் கீழே 
 


பல்வகைத் தகவல்களை
பலவாறு பேசம்முன்
பல்-வகைத் தகவல்களை
பல் நோக்கில் பார்ப்போமா...?!!

வெட்டுப் பல் வெட்டுமாம்..
வேட்டைப்பல் கிழிக்குமாம்..
முன்கடவாய் நொறுக்குமாம்..
பின்கடவாய் அரைக்குமாம்..
ஆமாம்...என்ன இதெல்லாம்?
பல்லைப் பற்றிய
பல்-வகைத் தகவல்கள்தானே?

பல்லைத் தட்டிக் கையில் கொடுப்பேன்
பல்லைப் புடுங்கிடுவேன் என்றால் பதறாதீர்
பல்லைச் சொத்தாய்ப் பாராமல்
பல்லைச் சொத்தை ஆக்கினால்
இப்படித்தான்
பல் மருத்துவர்
பல்லைத் தட்டவா எனப்
பரிந்துரை செய்வார்...
சரி...சரி...
பல்லை நறநறவென்று கடிக்காதீர்.

பல் போனால் சொல் போச்சாம்; இது
பல்லைப் பற்றிய பழமொழி
சொல் போனால் எல்லாம் போச்சாம்; இது
சொல்லாமல் விட்டப் புதுமொழி

இங்கே....
கால்மேல் கால்போட்டு பேசினால்
தப்பில்லை! ஆனால்
நாக்குமேல் பல்போட்டு பேசினால்
தப்புதான்!

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்?

நாளெல்லாம் பல் முளைக்க
நாமொன்றும் சுறாமீன் இல்லை...
ஆறுமுறையேனும் பல் முளைக்க
நாமொன்றும் யானையும் இல்லை...
பால்பல் விழுந்துவிட்டால்
புதிய பல் முளைக்கும்
இந்த வாய்ப்பும் ஒரு முறைதான்
மறவாதீர்
அது வெறும் வாய்ப்பு அல்ல
அதுவே நம் வாய்ப்பூ....!!!
அங்கே புன்னகை மட்டும் பூக்கட்டும்
அமிலங்கள் வேண்டாமே....!!!

✍️செ. இராசா

(நான்காம் வருடம் படிக்கும் பல் மருத்துவ மாணவி மேடையில் பேசுவதற்காக எழுதிய கவிதை)

07/11/2022

ஔவைத் திங்கள் 15 --- தலைப்பு: அப்பா (தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை)

 




அப்பாவின் பின்சென்றால் அப்பாவின் அப்பாவாய்
அப்பப்பா எத்தனைபேர் ஆய்?
(1)

ஆதியப்பா யாரப்பா? ஆராய்ந்து காணப்பா..
போதியப்பா... பின்னே புகழ்ந்து!
(2)

தந்தையின் தந்தையார் தந்தநல் விந்தைத்தான்
வந்தபின் தூவுகிறோம் வாழ்ந்து!
(3)

தொடரோட்டம் போலே தொடர்கின்ற பந்தம்
கடந்துவந்தத் தூரத்தைக் காண்!
(4)

உயிரணுவின் உள்ளே உறைந்திருக்கும் ஜீனால்
உயிர்ப்பிக்கும் ஆதி உரு!
(5)

தாயுறவு சத்தியம்! தந்தையுறவு நம்பிக்கை!
ஆயுளை நீட்டிக்கும் அன்பு!
(6)

அப்பாசொல் மந்திரமா? ஆராய வேண்டாமா?!
தப்பென்றால் மட்டும் தவிர்!
(7)

தப்பாகத் தோன்றுவது தப்பில்லை என்றானால்
அப்பாசொல் குத்தும் அறி!
(8.)

அப்பாவாய் அம்மாவாய் ஆனால்தான் நன்கறிவார்
அப்பா-யார்? அம்மா-யார்? என்று!
(9)

அப்பா குரலொன்றே ஆத்மபலம் என்றறிந்தோர்
அப்பாவைப் போற்றுகின்றார் ஆழ்ந்து!
(10)

✍️செ. இராசா

06/11/2022

கஷ்டப் பட்டுக் கவலைப் பட்டு

 

கஷ்டப் பட்டுக் கவலைப் பட்டு
காசைக் கொட்டி பீஸைக் கட்டி
படிக்க வச்சு பார்க்க எண்ணும் அப்பா..
நாலு பேரைச் சேர்த்துக்கிட்டு
ஊரைப் பூராம் சுத்திக்கிட்டு
குடிக்க எண்ணிக் கூடும் பிள்ளை தப்பா..
 
நல்ல பிள்ளை நம்ம பிள்ளை
நாலும் மூனும் கண்ட பிள்ளை
என்று நெஞ்சில் எண்ணிக் கொள்ளும் அம்மா
என்ன பிள்ளை இந்தப் பிள்ளை
யாரு பெத்த திந்தப் பிள்ளை
என்னும் பேரை வாங்கும் பிள்ளை சும்மா..
 
சொந்த பந்தம் எல்லாத்தையும்
சொந்தக் காசில் கூட்டிப் போயி
காது குத்து வச்சு தந்தக் காலம்...
சொந்த பந்தம் ஏதுமின்றி
பந்தக் காலு யாதுமின்றி
கம்பி நீட்டித் தாவும் எல்லாம் நேரம்...

05/11/2022

இல்லாள்

 


இல்லாள் எனச்சொன்னால்
......இல்லத்தின் ஓராளா? (இல்: ஆள்)
இல்லாள் எனச்சொன்னால்
.....இல்லத்தை ஆள்பவரா? (இல்: ஆள்)
இல்லாள் எனச்சொன்னால்
....இல்லாமை இல்லாரா? (இல்லா: ல்)
எல்லாம் இருந்தால்தான்
....இல்!
 
✍️செ. இராசா
 
(நேற்றைய தினம் கத்தாரில் நடைபெற்ற
#மனைவி_நல_வேட்பு நிகழ்வின்போது எந்தன் #வரவேற்புரை யில் கூறப்பட்ட #வெண்பா இது)
வாழ்க வளமுடன் 💐🙏💐

03/11/2022

காசுகாசு காசு;என்று

 


காசுகாசு காசு;என்று
........காசுதேடும் கூட்டமே
காசுகோடி கிட்டினாலும்
.......காசினாசை தீருமோ?
தூசுதூசு காசு;என்று
.......தூற்றுகின்ற கூட்டமே
தூசுகாசு தந்திடாமல்
........சூழ்ந்தநோயும் தீருமோ?!
 
கோக்குமாக்கு செஞ்சுசெஞ்சு
.......கொண்டுபோகும் கூட்டமே
நாக்குநீண்டு செத்தபின்னே
........வந்தசெல்வம் போகுமோ?!
சாக்குபோக்கு சொல்லிசொல்லி
........சாடுகின்ற கூட்டமே
வாக்குமாற காசுவாங்கும்
........நாடு;என்று மாறுமோ?
 
(புணர்ச்சி விதிப்படி காசு என்று- காசென்று வந்தாலும், இசைப்பாடலாக மாறும்போது காசு;என்று பாடவேண்டும் என்பதற்காகவே ; குறியீடு வைத்துள்ளேன்)

02/11/2022

அம்பை பெயர்கொண்ட அம்மணியே.

 


சால்வனைக் காதலித்து
சாமர்த்தியமாய் மறைத்துவிட்டு
சுயம்வர மண்டபத்தில்
சூடிடு மாலையென்று
சுயநல யோசனை தந்த
சுந்தரியைக் கேட்கின்றேன்...

அம்பிகா அம்பாலிகாவின் அக்கையே..
#அம்பை பெயர்கொண்ட அம்மணியே..
கங்கை மைந்தன் வந்து
தம்-கையை வைத்தபோது
தங்கைகள் பேசவில்லை சரி...
உம்-கை உதறலையே ஏன்?!

வந்த இடம் வந்து
வம்பிழுத்து வாங்கியன்று
நொந்த காதலனும்; நீ
சொந்தமெனச் சொல்லலையே ஏன்?!

சேதி தெரிந்ததுமே
சென்றுவர அனுமதித்தும்
சேர்க்க மறுத்துவிட்டக்
காதலனைக் கேட்கலையே ஏன்?

உன்னவன் உதறிவிட்டால்
உன்னவனைக் கேட்காமல்
தன்னவனாய் மாறென்று
தூக்கியவனைக் கேட்டாயே ஏன்?

கைவிட்ட காதலனை
கை எடுக்க எண்ணாமல்
போமா எனச் சொன்னவனை
போட்டுத்தள்ள நினைத்தாயே ஏன்?

சரசம் செய்த சண்டாளனின்
சிரசினைக் கொய்யாமல்
பரசுராமைக் கூட்டிவந்து
பீஷ்மரோடு மோதினாயே ஏன்?

அம்பையாய்த் தோற்றபோதும்
அப்படியே போகாமல்
சிகண்டிகையாய்ப் பிறந்துவந்து
சீறி நின்றாயே ஏன்?

தவறிலும் தவறிழைத்த
தறுதலையை விட்டுவிட்டு
பிறவி விட்டு பிறவி வந்து
பெரும்பிழையைச் செய்தவளே...

கர்மவினை காரணமே
காரியமாய் ஆவதினால்
தர்மப்போர் காரணியாய்
காரிகை நீ வந்தனையோ?!!

✍️செ. இராசா

01/11/2022

ஈபில் டவரெல்லாம்

 


ஈபில் டவரெல்லாம்
.......என்ன அதிசயமோ?
பார்பி அழகியிவள்
.......பார்வைதான்- சூபிசமோ?
சூப்பர் விழியிரண்டும்
.......சுண்டி இழுக்கிறதே..!
ஆப்பர் கிடைக்குமா
.......அங்கு?!