11/09/2021

மாகவியைப் போற்றுவோம்

 


 #மாகவியைப்_போற்றுவோம்

மரபை உடைத்தெறிந்த மாகவியைப் போற்ற
மரபின் உடைநெய்தேன் நான்
(1)

முண்டாசு கட்டிய முற்போக்கு நற்கவியின்
கண்ணாடி கொண்டிங்கு காண்
(2)

நண்பனா காதலியா நற்குருவா பாரதி-யார்?!
கண்திறக்க வைக்கும் கவி
(3)

கவியாய்க் கவித்த கவியல்ல ஐயா
கவியென்றே வாழ்ந்த கவி
(4)

ஓடி விளையாட ஓதிய பாரதியைத்
தேடிப் படித்துத் தெளி
(5)

பாரதியின் பேரால் பலவர்ணச் சான்றிதழ்கள்
பாரதியம் உள்ளதா பார்
(6)

உயர்வென்றும் தாழ்வென்றும் உள்ளத்தில் எண்ணார்
உயர்ந்தோரில் உச்சம் உணர்
(7)

சாதியம் இல்லையென சத்தியம் செய்துவிட்டு
சாதிக்குள் பார்ப்பார் கிளை
(😎

முன்னிலும் இப்போதே மூட்டுகிறார் சாதியத்தீ
என்செய்வோம் பாரதி இன்று?!
(9)

ஒற்றைத் திரௌபதிக்காய் உன்குரல் ஓங்கியும்
கற்றைத் திரௌபதிகள் காண்
(10)

✍️செ. இராசா

10/09/2021

சொல்லுக்குள் சிக்குமா சொல்?!

 


 

போட்ட பதிவொன்றில்
.........புன்னகை சிந்தினால்
காட்டமாய் என்னவளும்
.........காரணம்- கேட்கின்றாள்
எல்லைக்குள் சிக்கா
.........எழில்மிகு பேரண்டம்
சொல்லுக்குள் சிக்குமா சொல்?!

எப்பூடி?!!

✍️செ. இராசா

09/09/2021

அருணகிரிநாதர் சந்தத்தில்----------- இது இராசாவின் பாட்டு

 


சக்திக்கொரு முத்துத் திருமகன்
முக்திக்கிறை சித்தப் பெருமகன்
சித்தம்தர நித்தம் மனமுற
..........................தொழுவோமே
 
கற்றோர்சபைக் கற்போர் குழுமிட
கற்கும்பலர் கற்றல் பரவிடக்
கற்கண்டெனக் கற்கும் கலையென
.........................வருவோனே
 
பற்றும்கரம் பற்றல் நிலைபெற
முற்றும்சிரம் முட்டித் தரைதொட
கற்றுக்கொடு சுற்றம் சுகம்பெற
........,..................கணநாதா
 
தட்டிக்கொழுக் கட்டைத் தருவதைக்
கட்டும்வரை கட்டிக் கழித்திட
பட்பட்டென பக்கம் சடுதியில்
......,....................வருவாயோ
 
✍️செ. இராசா
 
 
இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள்

இரண்டே வருசம்தான் கொஞ்சம் பொறுங்க




 #வெளிநாட்டுவாழ்_வாழ்வியல்

 (சிறு வேண்டுகோள்:🙏🙏🙏🙏🙏

இந்தப்படத்தால் (Memes) எழுந்த வரிகளே இவை. அனைவரும் படத்தை மட்டும் பார்த்துவிட்டு நகர்ந்து விடாமல் பாடலையும் படிக்க வேண்டுகிறேன்)
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

இரண்டே வருசம்தான் கொஞ்சம் பொறுங்க
இரண்டே வருசம்தான் கொஞ்சம் பொறுங்க

ஒன்ன முடிச்சாக்க ஒன்னு வருகுது
என்ன செஞ்சாலும் எல்லை மீறுது
வச்ச நகையெல்லாம் வட்டி கேட்குது
சொச்ச கடன்வந்து சுருட்டிப் போடுது

இரண்டே வருசம்தான் கொஞ்சம் பொறுங்க
இரண்டே வருசம்தான் கொஞ்சம் பொறுங்க

++++++++++++++++++++++++++++++

நாளை(ய) நினைக்காமல் நாளைத் தள்ளநான்
நாயாப் பொறக்கலையே என்னசெய்ய நான்?!
காசே வேணாம்னு காலம் தள்ளநான்
ஆசை கிடையாத புத்தனில்லை நான்!!

வருசம் ஒரு வருசம் உழைச்ச பின்னால
மாசம் ஒரு மாசம் லீவு கிடைக்குது
ஒருக்கா வருவோன்னு ஊரு வந்தாக்கா
இருக்கும் டவுசர்கூட கிழிஞ்சு போகுது

வாப்பா வாப்பான்னு தூக்கிக் கொஞ்சுனா
பாப்பா மாமான்னு சொல்லும் பாருங்க
ஏன்பா ஏன்பான்னு மனசுக் குள்ளாற
ஆப்கான் பாப்கானா வெடிக்கும் பாருங்க...

என்ன செய்யுறது ஒன்னும் புரியல
ஏறும் விலைவாசி தாங்க முடியல
ஒன்ன இழந்தால்தான் ஒன்னு கிடைக்குது
என்ன வாழ்க்கையிது இன்னும் விளங்கல...

✍️செ. இராசா

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

08/09/2021

கேக் வெட்டும் கூத்துகள்


 

நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்கள் நம் மண்ணை விட்டுச் சென்றாலும், அவர்கள் விதைத்த அனைத்தையும் விருட்சமாக்கி நம் கலாச்சாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்து வருகிறோம். ஆம் அப்படி அவர்கள் விதைத்துச் சென்ற ஒன்றுதான் இந்த கேக் வெட்டும் நிகழ்வு. முன்பெல்லாம் பெரிய பெரிய நடிகர்கள் அல்லது அரசியல் தலைவர்கள்தான் தங்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். நாமெல்லாம் அதிகபட்சம் கோவில்தான் சென்று வந்து சாக்லட் அல்லது மிட்டாய் இனிப்புகள் கொடுப்போம். அவ்வளவே.....ஆனால், இப்போது அப்படியா உள்ளது? கிராமம் முதல் நகரம் வரை இந்த பிறந்தநாள் கலாச்சாரம் வெவ்வேறு வடிவங்களில் சென்றுவிட்டது. சிலர் பிரியாணியென்றும், சிலர் டிபனென்றும், சிலர் மதிய வேலையிலும் , சிலர் மாலை வேலையிலும்..பட்டிதொட்டியெங்கும் புட்டி இடித்தும் இடிக்காமலும் இந்த நிகழ்வு சீமைக் கருவேலமரமாய் எங்கெங்கும் பரவியுள்ளது. வசதிக்கேற்றாற்போல் இந்நிகழ்வை எப்படிக் கொண்டாடினாலும், இந்த கேக் வெட்டும் நிகழ்வு மட்டும் இல்லாமல் யாரும் கொண்டாடுவதாக இல்லை.

ஆமாம், இந்த கேக் வெட்டும் கலாச்சாரத்தில் நாம் செய்வது என்ன? மெழுகுவர்த்தி ஏற்றி, அதை வாய்வைத்து ஊதி அணைத்து, அப்புறம் தலையில் எதையெல்லாம் போடணுமா போட்டு, அந்த கிரீம் பூசிய, அதிகக் கலோரி நிறைந்த, உடலுக்கு கேடான மற்ற இத்யாதி இத்யாதி என அனைத்தும் நிரம்பிய கேக்கை ஒரு வெட்டு வெட்டுகிறோம். இதெல்லாம் தேவையா என்கிற கேள்வியே....நம்மை இங்கே அந்நிய படுத்திவிடுவதால், இதற்கு மாற்று உண்டா என்கிற யோசனை எனக்குள்ளே பல நாட்களாக ஓடுகிறது.

ஒன்று அந்த கேக்கை எப்படி ஆரோக்கியமான பதார்த்தமாக மாற்ற முடியும் என்பதே அது. . (எனக்கு சமையல் பற்றிய அறிவுக்குறை உள்ளதால் அதை யாரேனும் கண்டுபிடித்தால் நல்லது). மற்றொன்று இந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பது .. இதை என் வீட்டில் நான் எப்போதோ மாற்றிவிட்டேன். அதாவது ஊதி அணைப்பதற்குப் பதிலாக, ஒரு விளக்கை ஏற்றுவது. ஏன் நல்ல நாளில் அணைக்க வேண்டும். விளக்கை ஏற்றிவிட்டு, சிறிது நேரம் கழித்து பூஜை அறையில் வைத்தால் ஏதாவது தப்பா என்ன?!அதெப்படி மரபை உடைக்கலாமா? புதிதாய்ப் புகுந்த ஒரு பண்பாடு மரபாய் மாறியதென்றால், அந்த மரபை உடைத்து நாம் ஏன் புதிய மரபை உருவாக்கக்கூடாது? உலகம் சிரிக்காதா? ஹா ஹா....இந்த நாகரீக சமுதாயத்தில் தவறெல்லாம் சரியென்றானால் நாம் அம்மரபை துணிந்து உடைப்போமாக.........

செ. இராசா

06/09/2021

பழுகும்முன் யோசி ----- வள்ளுவர் திங்கள் 175

  


#வள்ளுவர்_திங்கள்_175
#பழுகும்முன்_யோசி

படகில் துளையிருக்கப் பாராமல் விட்டால்
படகின் நிலையெண்ணிப் பார்
(1)

இருக்கையில் தூற்றி இறந்தபின் போற்றும்
ஒருகுணம் ஏனோ உணர்
(2)

உடனேப் பழகி உடனேப் பிரிவோர்
விடமே அவரை விடு
(3)

முறைசொல்லி முன்னே முறையாகப் பேசி
குறைசொல்லல் தீயோர் குணம்
(4)

பற்றுபோல் காட்டிப் பகடாய்ப் பழகுவோர்
புற்றுநோய் என்றாகும் போக்கு
(5)

சிறுஞ்செய்கை செய்யும் சிறியோரைக் கண்டால்
வெறுப்பின்றி நீயும் விலகு
(6)

தான்தான் எனச்சொல்லும் தற்குறிகள் எந்நாளும்
வீண்தான் எனயெண்ணி வெட்டு
(7)

பணம்பணம் என்றேப் பழகும் உறவு
மணம்மனம் இல்லா மயிர்
(8.)

பொறாமை குணத்தோடு பொய்சொல்லும் நட்பைப்
பெறாமை இருந்தாலே பேறு
(9)

நயமாய் உறவாடி நஞ்சினைக் கக்கும்
கயமை நிலைக்காது காண்
(10)

✍️செ. இராசா

யாருக்குத் தெரியும்?

 

காலம் கடந்த கவிதையொன்று
காதல் இரசம் சொட்டியது....
கவிப்பொருள் யாரென்றேன்?
"யாருக்குத் தெரியும்?!
ஆனால்...கவிதை ஒன்றே" என்கிறான்

05/09/2021

நீண்ட விடுமுறையே நில்

 


கொள்ளைக் கிருமிகளின்
.......கொட்டம் அடங்கியதால்
பள்ளிக் கதவெல்லாம்
.......பையத் திறந்ததினால்
வேண்டிய தெய்வமெல்லாம்
.......மீள்வரம் தந்ததினால்
நீண்ட விடுமுறையே நில்

#நீண்ட_விடுதலையே_வா

இணையப் படம்காட்டி ஏய்க்கின்ற கல்வி
இனியில்லை என்றால் இனிது

✍️செ. இராசா

#ஆசிரியர்_தின_வாழ்த்துகள்

04/09/2021

 

பெரிய கடலெனப்
பீற்றிக் கொள்கிறது
கிணற்றுத் தவளை 🐸 ✍️