#கடவுள்_வாழ்த்து
#இதழகல்_வெண்பாக்கள்
#உதடுகள்_குவியாது_ஒட்டாது
#ம_ப_வ_உ_ஊ_ஒ_ஓ_ஔ_இனங்கள்_வராது
இயற்கையை ஆயார் இறையினைக் காணார்!
இயற்கையை ஆழத்தில் ஆய்!
(1)
அறத்தை நினையார் அகநிறை ஆகார்!
அறத்தால் அகத்தை நிறை!
(2)
அரனே அரியாய் அறியாச் சிலரே
சிரத்தில் சிறியார் தெளி
(3)
கற்றிடக் கற்றிடக் கற்றிடல் யாதெனில்
கற்றிடல் தீராக் கடல்!
(4)
#இதழகல் செய்தேன் இறையால் இனிதே
இதற்கினி சாட்சி இல!
(5)
அடியால் அளந்த அரியை நினைந்தேன்!
அடியாய் அளந்தான்! அறி!
(6)
எண்ணிய எண்ணத்தை எட்டிட எண்ணத்தால்
கண்ணனைக் கண்ணாறக் காண்
(7)
செ.இராசா
தொல்காப்பியம்
பற்றிய "பயப்படாதீர்கள்" என்கிற கி.வா.ஜெகந்நாதன் ஐயா அவர்களின்
நூலைப்படித்தபோது அதில் உதடுகள் ஒட்டாத மற்றும் குவியாத எழுத்துக்களைப்
பற்றியும் அதில் சாதித்த பலரைப் பற்றியும் எழுதியிருந்தார்கள். அதாவது, ம ப
வ உ ஊ ஒ ஓ ஔ வகை எழுத்துக்களை பயன்படுத்தாமல் படைக்க வேண்டும். எனில்
மொத்தம் 119 எழுத்துக்கள் அடிபடுகிறது. அப்படி உதடுகள் ஒட்டாமல் மற்றும்
குவியாமல் வைப்பதை நிரோட்டகம் அல்லது இதழகல் என்கிறார்கள். இதில் பலரும்
அந்தாதிகளே படைத்துள்ளார்கள (நிரோட்டக யமக அந்தாதிகள்) இவற்றை இணையத்தில்
படித்து அசந்துபோனேன். யமக என்றால் திரும்ப திரும்ப ஒரே வார்த்தை வெவ்வேறு
பொருளில் அடிதோறும் வருவது.
சரி நாமும் குறள் வெண்பாக்கள்
எழுதுவோமே என்று முயன்றபோதே உணர்ந்தேன். ஆகா... எவ்வளவு கடினமான
முயற்சியென்று. ஆம்... பெரும்பாலான வார்த்தைகள் பமவ வில்தான் வருகிறது.
(சிலர் பமவ மட்டும் தவிர்ப்பார்கள் உ ஊ ஒ ஓ ஔ பற்றி கவலைப்படுவதில்லை. அது
தவறென்றே நினைக்கிறேன்) வெண்பாவில் உகரமும் இல்லாமல் படைப்பது அடுத்த
சவால்?...அப்புறம் கருத்தும் வரவேண்டும் எளிமையாகவும் இருக்க வேண்டும்.
எப்படியோ... மிகவும் கடினமான முயற்சியாலும் தமிழன்னையின் உதவியாலும் இதோ
ஏழு குறள் வெண்பாக்கள் படைத்துள்ளேன்.
உண்மையில்...தமிழ் சாதாரண மொழியல்ல!!!
வாழ்க தமிழ்!
#வள்ளுவர்_திங்கள்_151
15/03/2021
இதழகல் வெண்பாக்கள் உதடுகள் குவியாது ஒட்டாது
14/03/2021
அரேபிய மண்ணில் அனாதைபோல் நிற்கும்
மண்டையைப் பிளக்கும் வெயில்
சுருள வைக்கும் உஷ்ணக்காற்று
அலற வைக்கும் மணற்புயல்
அத்தனைக்கும் இடையில்
அரேபிய மண்ணில்
அனாதைபோல் நிற்கும்
அவனுக்குத்தான் தெரியும்....
மனதின் வலியென்பது
அதையெல்லாம் விடப்பெரிதென்று...
செ. இராசா
ஐயோ.... எப்படித் தெரிந்திருக்கும்?!
ஐயோ....
எப்படித் தெரிந்திருக்கும்?!
அண்ணன் போட்டுக் கொடுத்திருப்பானோ
........
அம்மா திட்டுவாளோ...?
அப்பா என்ன சொல்லுவார்...?
யோசித்தவாறே சென்றாள்..
அந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் பாப்பா
தன் மதிப்பெண் அட்டையைச் சுமந்தவாறே..
13/03/2021
ஆற்று மணலள்ளி ஆற்றையே காணடித்தீர்
ஆற்று மணலள்ளி ஆற்றையே காணடித்தீர்
ஊற்றுப் புனலள்ளி ஊரூராய் விற்றுவிட்டீர்
கூற்றன் அரசென்றே கொன்றிட எண்ணாமல்
மாற்றம் தருவோர்யார் வந்து
செ. இராசா
12/03/2021
வாலி வதம்-------வாலி வாதம்--------இராமன் பதில்----குறள்---வெண்பாக்களாய்
#வாலி_வதம்
#வாலி_வாதம்
#இராமன்_பதில்
#குறள்_வெண்பாக்களாய்
#வாலியின்_கேள்விகள்
மறைந்திருந்து தாக்குவதா மன்னவரின் மாண்பு
குறையுள்ளோன் யாரெனக் கூறு?!
(1)
சகோதரச் சண்டையில் சம்பந்தம் இன்றி
தகாதசெயல் செய்ததேன் சொல்?!
(2)
இராவணனின் செய்கைதான் இவ்வுலகில் தீதா?!
இராமனேவுன் செய்கை இயம்பு?!
(3)
மனைவி இழந்தால் மதிபோய் விடுமோ
எனையேன் பகைத்தாய் இயம்பு?
(4)
உன்தம்பி நாடாள உன்நாட்டைத் தந்ததுபோல்
என்தம்பி ஆளனுமா இங்கு?
(5)
என்மனைவி தாரைசொல் இப்போதே நானுணர்ந்தேன்
உன்நோக்கம் எந்தன் உயிர்!
(6)
பிறர்மனை கொண்டதாய்ப் பேசிடும் முன்னே
மறவாதே நாங்கள் விலங்கு
(7)
மனித மனத்தில்தான் மன்னிப்பும் ஏற்பும்
கனிவெல்லாம் இல்லைக் கவிக்கு
(8)
மனுகுல நீதியெல்லாம் மானிடர்க் காகும்
உணர்ச்சியால் எங்கள் உறவு
(9)
என்னோடு வந்திருந்தால் என்றைக்கோ தீர்த்திருப்பேன்
உன்செய்கை ஏனோ உரை?
(10)
#இராமனின்_பதில்கள்
இறந்துவிட்டாய் என்றேதான் ஏற்றான் முடியை
மறந்தும் தவறிழையான் மைந்து
(11)
வந்தவுடன் தந்தவனை வம்பனாய் எண்ணியே
நொந்தவனை நோகடித்தாய் நீ
(12)
கொலைசெய்யும் எண்ணத்தில் கோபமாய்த் தாக்கி
மலையொன்றில் விட்டாயே நீ
(13)
நம்பிக்கை வைத்துன்னை நம்பிய தம்பியை
நம்பாமல் பொய்த்தாயே நீ
(14)
தம்பி மனைவியை தன்மனைவி போலெண்ணி
நம்பிக்கை பொய்த்தாயே நீ
(15)
செய்யாச் செயலெல்லாம் செய்திட்ட பின்னாலே
செய்யலாம் என்கிறாய் நீ
(16)
விலங்கென்று சொல்லி விளக்கங்கள் தந்து
விலகுமா என்றும் விலங்கு
(17)
பிறப்பாலே இல்லைப் பெரியோர் சிறியோர்
மறந்தாயோ இன்றைக்கு நீ
(18)
என்றைக்கு சுக்ரீவன் என்னிடம் வந்தானோ
அன்றைக்கே ஒன்றானோம்! ஆம்!
(19)
பிறர்மனை நோக்கியப் பேடியை கொல்ல
அறத்தையும் மீறினேன் ஆம்!
(20)
செ.இராசா
11/03/2021
ஒரு அரபி மெட்டுக்கு தமிழில் எழுதிய பாடல்----HABIBI A NOUR EL AIN
(ஒரு அரபி மெட்டுக்கு தமிழில் எழுதிய பாடல்)
HABIBI A NOUR EL AIN
யாருமே இல்லையென்று -நீ
நோகக் கூடாது
ஏனடா வாழ்க்கையென்று நீ
பேசக் கூடாது
போடா டேய் போடா டேய் நம்மிடம் என்ன இல்லை
வாடா டேய் வாடா டேய் நம்பினால் தோல்வி இல்லை
ஏற்றமும் இறக்கமும் எல்லாமும் எல்லோர்க்கும்
என்றுமே எப்போதும் மாற்றமாய் வந்திடும் (2)
என்றும் என்றும் நம்பு
என்றும் உன்னை நம்பு (2)
எண்ணம் போலே வாழ்வு
போடா டேய் போடா டேய் நம்மிடம் என்ன இல்லை
வாடா டேய் வாடா டேய் நம்பினால் தோல்வி இல்லை
எண்ணம் போலே வாழ்வு
செ.இராசா
10/03/2021
படைப்பாளர் பாடுபெரும் பாடு
அனுபவப் பதிவு-11--------அஸ்ஸாம் மேகாலயா இறுதிப்பகுதி--கட்டுரை


என்னப் பெத்த தாயே நீ எங்கே
(இசையமைப்பாளர் இலங்கை சுதாகரன் அவர்கள் வழங்கிய அருமையான ஒரு மெட்டுக்கு. எழுதிய பாடல்)
என்னப் பெத்த தாயே நீ எங்கே?
விண்ணை விட்டு வாராயோ நீ இங்கே
கண்ணீராலேதானே நனைந்தேனே
கானலான உனையும் நனைத்தேனே
விழிகளின்றி பார்வையா?!
வெளிச்சமின்றி காட்சியா?!
இரண்டுமின்றி பார் என்றால்
அநியாயம் இல்லையா?!
இறைவனின்றி கோவிலா?!
இரக்கமின்றி மார்க்கமா?
இதயமின்றி வாழ் என்றால்
அநியாயம் இல்லையா?!
.....என்னப் பெத்த
இருக்கிற பொழுதில் ஏனோ
புரியமறுக்குது மனசு
புரிகிற பொழுதினில் ஏனோ
இருக்கமறுக்குது உசுரு
அட போடா போடா விதி தானே வேறென்னடா
அட ஆமாம் போடா நம் தாயே தெய்வமடா
காற்றோடும் மூச்சோடும் நீதான் எங்கும் தாயே
ஊனோடும் உயிரோடும் நீதான் என்னுள் நீயே
உன்னால் தானே இங்கே நானும் தாயே....
செ.இராசா
09/03/2021
தீ நட்பு
முப்பாலில் வைத்துள்ள முன்னிரெண்டைக் காணாமல்
எப்போதும் தப்பாமல் ஏற்றுகின்றார் மூன்றாம்பால்!
தப்பென்று யாரேனும் தப்பினைச் சுட்டிவிட்டால்
தப்பொன்றும் இல்லையென தற்குறிபோல் பேசுகின்றார்!
பிள்ளைகள் பார்ப்பரென பெற்றோராய்ச் சொன்னாலும்
பிள்ளைகள் அத்தனையும் பிஞ்சல்ல என்கின்றார்!
நட்பின் உரிமையிலே நல்லறம் சொல்வோரின்
நட்பை மதியாமல் நாக்கூச வைகின்றார்!
எப்பாலும் தப்பில்லை ஏற்றிடலாம் என்போரே..
எப்போதும் நேரடியாய் ஏற்றிடுதல் தப்பன்றோ?
செப்பும் முறையறிந்து செப்பிடுங்கள் தப்பில்லை.
தப்பென்று சொல்வோரைத் தப்பென்றல் தப்பென்றோ?
ஒப்பாத காரியத்தை ஓவியமாய்ச் செய்வோரும்
தப்பான காரியத்தை தப்பில்லை என்போரும்
செப்பிடும் நல்லோரைச் சீயென்று சொல்வோரும்
எப்போதும் வேண்டாம் எமக்கு!





