23/04/2019

இரண்டு மூச்சுகளுக்கு இடையே

இரண்டு மூச்சுகளுக்கு
இடையே இளைப்பாறும் தருணமும்
உன்னையே நினைக்கிறேன் என் சகியே!
என் கவியே!

22/04/2019

ஐவகைக் கடமைகள்


உயிருடல் மனமென மூன்றினையும்
ஒழுங்காய்க் காக்கும் வழியறிந்து
முதலில் தன்கடன் செய்வதையே
முதலாம் கடமை என்றறிவோம்

இயல்புடை மூவரைக் காப்பதினை
இல்லறப் பண்பென நன்குணர்ந்து
இல்லறம் இனிதென வாழ்வதையே
இரண்டாம் கடமை என்றறிவோம்!

சுற்றமும் சூழலும் விலகாமல்
பற்றிய நட்பினை வெறுக்காமல்
ஊன்றிய கோலாய் நிற்பதையே
மூன்றாம் கடமை என்றறிவோம்!

ஊறின்றி அனைவரும் உய்வடைய
ஊருக்கு உதவுதல் நான்கென்றால்
வையகம் தழைக்க முயலுவதே
ஐந்தாம் கடமை என்றறிவோம்!

ஐவகைக் கடமையை நன்குணர்ந்து
ஐந்தையும் சரிவரச் செய்பவனை
அறத்தின் சான்றென அறிந்திடுவோம்!
அவனே சான்றோன் வணங்கிடுவோம்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

#ஐவகைக்_கடமைகள்

21/04/2019

கணினி--வாட்சப்-விக்கி நீ



கணினியின் மென் பொருள்போல்- என்
கவிதையின் கருப் பொருளே...

ஆண்டிராய்டின் செயலியைப்போல்- என்
ஆன்மாவின் உட் பொருளே..

வாட்சப்பின் புதுக் குழுபோல்- என்
வார்த்தையின் பொதுப் பொருளே..

முகநூலின் மாயையைப்போல்- என்
அகநூலின் மறை பொருளே!

கூகுளாய் நீ வந்தால்- உன்
கோகுலாய் நானாவேன்!

விக்கியாய் நீ வந்தால்- நீ
சொக்கிடும் கவியாவேன்!

#வருவாயா...?!!!

✍️செ. இராசா

20/04/2019

பாற்கடலில்




பாற்கடலில் படுத்துறங்க ஆசைதான்
பாற்கடலைப் பாழாக்க மனமில்லை!
கவிக்கடலில் கண்ணுறங்க ஆசைதான்
கவிதையிலே வயிற்றுக்கு வரவில்லை!
தமிழ்க்கடலில் முத்தெடுக்க ஆசைதான்
தனிநீச்சல் கற்றாலும் முடியவில்லை!

இருந்தும் முயல்கின்றேன்...

சாதீ


சாதிய நாக்கினைச் சுழலவிட்டு-தீ
ஊதியம் தேடிடும் மூடர்களே!
பாதியில் புகுந்த சாதிகொண்டு-நீர்
ஆதியின் மைந்தனை பகைப்பீரோ?

மனிதன் படைத்தது சாதியமா- இல்லை
மனிதனைப் படைத்தது சாதியமா?!
மதத்தின் உள்ளே சாதியமா?- இல்லை
மதமே ஒருவகை சாதியமா?!

சாதியை இன்னும் வைத்திடவே- அரசு
சாதியச் சான்றிதழ் தருகிறதா?!
சாதிய அரசியல் செய்திடவே- இங்கு
சாதியம் இன்னும் தொடர்கிறதா?!

மதத்தை உடனே மாற்றுதல்போல்- இந்த
சாதியை மாற்றிட வழியுண்டா?!
சாக்கடைக் கொசுவை கொல்வதுபோல்-இந்த
சாதியைப் பொசுக்கிட வழியுண்டா?!

✍️செ. இராசா

19/04/2019

உலகப் பெருங்கடலில் ஓட்டியுள்ள மணற் துகளாய்


உலகப் பெருங்கடலில்
ஓட்டியுள்ள மணற் துகளாய்
பிரபஞ்சப் பெருங்காட்டில்
பிரசவித்த சிறு புழுவாய்
முகநூல் பெரு ஏட்டில்
முடங்கிடவா எழுதுகின்றேன்?!!


அருவ மனதிற்குள்
அடங்காத உணர்வுகளை
உருவ உடை கொடுத்து
உலவிடவே எழுதுகின்றேன்

உலகியல் புரியாமல்
உளருகின்ற பைத்தியம்போல்
சில நேரம் சில வரிகள்
சிரமிறங்கிக் கரம் வரலாம்..
நானென்ன செய்திடுவேன்?!!
நானாவா எழுதுகின்றேன்?!!
நான் என்னைக் கொன்ற பின்னே
நானெங்கே இருக்கின்றேன்?!

தமிழோடு தனியாக
தமிழாடும் போதெல்லாம்
முக்தியை அடைந்ததுபோல்
மூழ்கியேக் கரைகின்றேன்...

(சுயம்)

5_வடிவங்களில்_வள்ளுவம்<<<<<<<<<<<<,(வெண்பா-10)


****************************
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
மரபுக்கவிதை-வெண்பா
************************
எத்தனையோ நூல்களிங்கு ஏராளம் என்றாலும்
அத்தனையும் ஆகிடுமா ஆகாது-சத்தியத்தை
எத்திக்கும் எங்கேயும் எல்லோர்க்கும் செப்புவதில்
சத்தியமாய் வள்ளுவமே சான்று!

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
குறள் வெண்பா
**************
எழுஎழு சீரில் எழிலாய் அமைத்து
எழுதி(ய)டும் வெண்பா குறள்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
புதுக்கவிதை
***********^
பள்ளியில் கசந்தாய் நீ
பருவ வயதில் புளித்தாய் நீ
இப்போது மட்டும் இனிக்கிறாய்

உண்மையில்..
நீ...நீயாகத்தான் இருக்கிறாய்
நான்தான் மாறிவிட்டேன்..
உன் குற(ர)ளின் வலிமையால்...

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
குறுங்கவிதை
*************
இரண்டே அடியில்
அகிலம் அளக்கப்பட்டது
திருக்குறளில்

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
சந்தப்பாடல்
*************
(முத்தைத்திரு- மெட்டு)

சந்தத் தமிழ் வந்துத் துள்ளிட
சங்கத் தமிழ் நன்றே போற்றிட
எந்தைக் குறள் எந்தன் குரல்
திருக்குறளே...

அறத்தின் பால் அழுத்திச் சொல்லிட
பொருளின் பால் பகுத்துச் சொல்லிட
இன்பப் பால் என்றும் இனித்திடும்
திருக்குறளே....

கற்கும் குறள் கற்றிட கற்றிட
பற்றும் குறள் பற்றிட பற்றிட
ஏற்றம் பல மாற்றம் தருவதும்
திருக்குறளே...

✍️செ.இராசா

18/04/2019

உங்கள் ஓட்டு உங்கள் உரிமை...



திராவிடக் கட்சியோ?
தீரா-விடக் கட்சியோ?!

பொய்கை மலர் கட்சியோ?!
பொய்-கை யூட்டுக் கட்சியோ?!

இரட்டை மங்குனிக் கட்சியோ?!
பரட்டை சப்பானிக் கட்சியோ?!

நாம் புலிகள் கட்சியோ?!
நீங்க எலிகள் கட்சியோ?!

ஏதோ ஒன்றில்..
மறக்காமல் போட்டுடுங்க
மத்தவுங்க போடுறதுக்குள்ள

உங்கள் ஓட்டு
உங்கள் உரிமை...

செரா_குறள்_10_வாங்கிய காசுக்கு

வாங்கிய காசுக்கு வாக்கினை விற்றவனை
ஓங்கி அடிப்பான் இனி!

18 அவ்வளவு சிறப்பு வாய்ந்தது!




18 நாட்கள் பாரதப்போர் நடந்தது
18 அத்தியாயங்கள் உடையது கீதை
18 மகா புராணங்கள் உள்ளன
18 படிகள் மகத்துவம் வாய்ந்தது
18 மேல் கணக்கு நூல்கள் உள்ளன
18 கீழ் கணக்கு நூல்கள் உள்ளன
18 தமிழ்ச்சித்தர்கள் முக்கியமானவர்கள்
........
18 அவ்வளவு சிறப்பு வாய்ந்தது!

நாளை....
18 ஏப்ரல் 2019.....
தமிழர்களுக்கான தேர்தல் நாள்

அனைவருக்கும் தேர்தல் திருவிழா வாழ்த்துகள்💐💐💐💐💐