31/12/2017

உழைப்பே உயர்வென்று




உயரத்தில் நின்றுகொண்டு
முகநூலில் எழுதுகின்றான்
"உழைப்பே உயர்வென்று...."

Thank you PC: Mr. Arjun Shukla

28/12/2017

அந்த வரிசையில் நானும்---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (85) பங்குபெற்ற கவிதை


அந்த வரிசையில் நானும் நின்றேன்!
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன்!
அந்த வரிசையில் நானும் நிற்பேன்!
எந்த வரிசையில் என்றா கேட்கின்றீர்?!


சொந்த நாட்டில் வேலையும் இன்றி
சொந்த பந்தத் துணையும் இன்றி
நொந்து நின்ற இளைஞர்கள் பலர்!
அந்த வரிசையில் நானும் நின்றேன்!

சொந்த பந்தம் சுகமாய் வாழ்ந்திட
நொந்த வலிகளைப் படிப்பினை ஆக்கியே
சொந்தக் காலில் வென்றோர் பலர்!
அந்த வரிசையில் நானும் நின்றேன்!

வெந்தது எதையோ வயிற்றில் நிறைத்து
வந்ததை சேமித்து செலவைக் குறைத்து
வந்ததில் ஈகைகள் செய்வோர் பலர்!
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன்!

வந்த சோதனை யாவும் பொறுத்து
எந்த நிலையிலும் கடன் வாங்காது
சிந்தையில் சிறப்பாய் வாழ்வோர் பலர்!
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன்!

தந்தை தாயை என்றும் மதித்து
வந்த மனைவியைக் கலங்க விடாது
நிந்தை செய்யாமல் வாழ்வோர் பலர்!
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன்!

இந்த நிலையிலே நின்று விடாது
இந்தப் பிறவியில் முழுமை பெறாது
அந்தம் காணாத சான்றோர் சிலர்!
அந்த வரிசையில் நானும் நிற்பேன்!

——செ. இராசா——-

27/12/2017

மலாலா


பயங்கரவாதம் ஒரு பக்கம்
படித்திடும் ஆசை மறுபக்கம்
இரண்டிற்கும் இடையில் போராட்டம்
இருந்தது மலாலா வாழ்வோட்டம்


ஜின்னா வழியினில் சென்றவருள்
இன்னா வழியினில் சென்றசிலர்
எல்லா சிறுமியும் பள்ளிசெல்ல
பொல்லா மனிதராய் தடுத்தனரே....

கல்லா குழந்தைகள் எல்லோரும்
நல்லா படித்திட வேண்டுமென்று
அல்லா துணைவர வேண்டிக்கொண்டு
பொல்லா கூட்டத்தை எதிர்த்தாளே....

மதியில்லா அரக்கரின் தீச்செயல்கள்
மலாலா அடைந்த வேதனைகள்
இரண்டையும் இணையத்தில் பதிவிட்டு
இறுதியில் தனியாய் வென்றாளே....

படித்திட முடியா சூழலிலும்
படித்திட எண்ணிய மலாலாவை
மனதால் ஒருமுறை வாழ்த்திடுவோம்!
மதியால் உலகை வென்றிடுவோம்!

—-செ. இராசா——

யார் அவர்?




"பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை
பூமியில் விஜயம் செய்தேன் நான்......"
அந்த "நான்" என்பது யாதென்று
அழகாய்ச் சொன்னார் ஒரு மனிதர்!

"காமத்திலிருந்து கடவுளென்று"
"நான்" வெல்லவும் வழி சொன்னார்!
"இந்த நிலையும் மாறிவிடும்......"
இதையும் சொன்னவர் அதே மனிதர்!

யார் அவர்?
............................
.............................
..............................
............................
...........................
............................
.............................
.............................
.............................

(சொன்னவர் யாரெனப் பார்க்காமல்
சொன்னதன் பொருளை ஆராய்வோம்)

------செ. இராசா------

பொறியாளர்

வங்கிக்கடன் வாங்கி
படித்த அவ்விளைஞன்
வாங்கிய கடன் அடைக்க
வங்கியில் வேலை பார்த்தான்
#பொறியாளர்_பட்டத்துடன்

இரு வரிக்கவிதை





அந்தரத்தில் தொங்கினாலும்
அன்புக்கு பஞ்சமில்லை
=======================
அம்மாவின் இலைவீட்டில் ஒரே சத்தம்...
வாரிசு போட்டியோ?
========================

25/12/2017

மனசாட்சியோடு நான்


நீ எதற்காக எழுதுகிறாய்?
.........
நான் எனக்காக எழுதுகிறேன்
.........
எனில்..... நீ சுய நலவாதியா?
........
இல்லை.. இல்லை..
நான் பிறருக்காகவும் எழுதுகிறேன்
......
எனில்...நீ புதியதை விதைக்கிறாயா?
.......
இல்லை... இல்லை
நான் புரிந்ததை எழுதுகிறேன்
..........
நீ யார் இதையெல்லாம் எழுத?
நீ என்ன எல்லாம் அறிந்தவனா?
......
அப்படி நினைக்கவில்லை......:
நான் அறிந்ததை எழுதுகிறேன்
........
அதைத்தான் அனைவரும் செய்கின்றனரே?
நீ ஏன் எழுதுகிறாய்?!
........
.......
ஆமாம்...நான் ஏன் எழுதுகிறேன்?!
.....

——-செ. இராசா——-

74வது கவிச்சரம்--இயேசு பாலன் பிறப்பு



தமிழ்த்தாய் வணக்கம்:
********************************
எத்தனை கோடித் தமிழர்களை
எழிலுடன் தமிழ்த்தாய் பெற்றெடுத்தாள்!
அத்தனைத் தமிழரைப் பெற்றெடுத்தும்
அற்புத இளைமையில் மின்னுகின்றாள்!
அடையாளம் தந்தத் தமிழ்த்தாயை
அனைவரின் சார்பாக வணங்குகின்றேன்.

கவிச்சரத் தலைமை_வணக்கம்
*******************************
உள் மூச்சில் தமிழ் இழுத்து
வெளி மூச்சில் கவி படைக்கும்
கவிஞர் மற்றும் கவிச்சரத் தலைவர்
சகோதரி ஜோ. குமாரி எலிசபெத் அவர்களையும்
அன்போடு வணங்குகின்றேன்!

அவை வணக்கம்!
****************
தூரத்தில் பார்த்து வியப்பு கொண்டேன்!
தூரத்தை குறைத்து இணைத்துக் கொண்டேன்!
இருப்பினும் வியப்பு குறையவில்லை!
இதயத்தின் பிடிப்பும் மாறவில்லை!

தமிழ்ப்பட்டறைச் சிறப்பினை என்சொல்வேன்?
தமிழின் சிறப்பே அதுவென்பேன்!
ஆன்றோர் சான்றோர் இருக்கின்ற
அற்புத சபையை வணங்குகின்றேன்!

இயேசு பாலன் பிறப்பு
*********************
இன்பத்தை அனைவரும் அனுபவிக்க -நம்
இறைவன் இயேசு மனம் வைத்தார்!

அன்னை மேரிக்கு மகனாக- நம்
ஆண்டவர் இயேசு இறங்கி வந்தார்!

ஏழைத் தச்சரின் பிள்ளையாக- நம்
ஏக இறைவன் இயேசு வந்தார்!

அன்பினை உலகிற்கு எடுத்துச்சொல்ல- நம்
அன்பின் இயேசு பிறந்து வந்தார்!

உறவுகள் சந்திப்பு
*****************
அன்புள்ள உறவினர் வருகையிலே
அகத்தினில் இன்பம் ஊற்றெடுக்கும்!
அகிலமே உறவினர் ஆகையிலே
அகத்தினில் இறைநிலை பெருக்கெடுக்கும்!

அன்புள்ள உறவினை அன்பு செய்தால்
அதிலுள்ள மகிழ்வே தனியாகும்!
அன்பில்லா உறவையும் அன்பு செய்தால்
அதுதான் ஆண்டவர் குணமாகும்!

நன்றி நவில்தல்
****************
இனிய கிறுஸ்துமஸ் மற்றும்
இனிய புத்தாண்டு வாழ்த்தினைக்கூறி
வாய்ப்பளித்த அனைவருக்கும்
நன்றிகூறி விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்!
வாழ்க வளமுடன்!

——செ. இராசா——-

https://www.facebook.com/groups/1535309520121292/search/?query=74 

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்



அறிவுரை சொல்வது எவருக்கும் எளிது!
அறிவுரை போலவே நடப்பவர் அரிது!
எதிரியை நேசிக்கச் சொன்னவர் இயேசு!
என்றும் அதுபோல் வாழ்ந்தவர் இயேசு!

ஈகையைப் போதித்தல் எவருக்கும் எளிது!
ஈதலே அறமென வாழ்பவர் அரிது!
ஈந்தே தன்னுயிர் துறந்தவர் இயேசு!
ஈடில்லா அன்பினைப் பொழிபவர் இயேசு!

அன்பும் சிவமும் ஒன்றென அறிவோம்!
அன்பும் இயேசுவும் அதுவென உணர்வோம்!
அன்புள்ள இதயத்தில் வாழ்பவர் இயேசு!
அன்பினால் அகிலத்தை ஆள்பவர் இயேசு!

மதங்கள் சொல்லிடும் இறைநிலை அறிவோம்!
மறைபொருள் உண்மையை அன்பென உணர்வோம்!
மதத்தைத் தாண்டிய மனிதராய் வாழ்வோம்!
மறைந்துள்ள எதிரியை அன்பால் வெல்வோம்!

அன்பே இயேசு! அன்பே சிவம்!
அன்பே இயேசு! அன்பே எல்லாம்!

——இனிய கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துகள்-----

அன்புடன்,
செ. இராசா.

24/12/2017

சினம்

சினம் தவிர்க்கும் வகுப்பில்
சூடாகிப்போனார் ஆசிரியர்......
அடிக்கடிவந்த அலைபேசியில்
அழைத்தது அவரின் மனைவியாம்...