08/03/2021

அனுபவப் பதிவு-10---நீச்சல் தொட்டி---Swimming pool----கட்டுரை

 #அஸ்ஸாம்_மேகாலயா


 

தொழிற்சாலைகள் கட்டுவதற்காக நியமித்த என்னிடம் தனக்கான அனைத்து வேலைகளையும் வாங்கிக்கொண்டார் என் முதலாளி. அப்படி வாங்கிய வேலைகளில் ஒன்றுதான் நீச்சல்குளம் அமைக்கும் பணியும். தொழிற்சாலைப் பணிகள் முடியும் தருவாயில் திடீரென்று ஒருநாள் என்னை முதலாளி தலைமை அலுவலகம் வருமாறு அழைத்திருந்தார். அங்கே ஏற்கனவே டில்லியில் இருந்து வந்த ஒரு நபர் அமர்ந்திருக்க ஒரு பெரிய Swimming pool மற்றும் அதனோடு இணைந்த ஒரு Baby pool வரைபடத்தை என்னிடம் காண்பித்தார்கள். அதைச் சுத்தம் செய்ய ஒரு கீழ்நிலைத்தொட்டி மற்றும் வடிகட்டும் இயந்திரம் (Filter tank) அடங்கிய அமைப்பு, இதுபோக நீச்சல் தொட்டியில் குளித்தவுடன் மீண்டும் குளிக்க ஒரு குளியலறை, அதையொட்டி விருந்தினர் அறை மற்றும் Billiards என்னும் பந்து விளையாட்டறை.. இவையெல்லாம் வெளியே தெரியாமல் இருக்க கேண்டிலீவர் அமைப்பில் பீம் கொண்ட தூணமைத்து அதன்மேலே ஒளி ஊடுருவும் கூரை அமைக்க வேண்டும்.....இப்படி அனைத்தையும் விரிவாகச்சொன்னார்கள்.

இதையெல்லாம் கேட்டபிறகு, நான் முதலாளியிடம் எனக்குத் தனியாக 50,000 ரூபாய் இப்பணிக்காக வேண்டுமென்று கேட்டேன். (அப்போதெல்லாம் எவ்வளவு கேட்க வேண்டுமென்றுகூட தெரியாது...அட இப்போதும்தான்) உடனே சம்மதம் தெரிவித்தார். ச்சும்மா சொல்லக்கூடாது, நான் அஸ்ஸாமைவிட்டு வரும்போது கேட்டதைவிட அதிகமாகவே கொடுத்தார். ஆம்... அந்த வேலைகளைச் செய்ய வந்த டில்லிக்காரர் மொத்த வேலையையும் தானே செய்வதாக நினைத்துதான் வந்திருந்தார்போலும். பாவம்...மெக்கானிக்கல் வேலை மட்டும் அவரிடம் கொடுத்துவிட்டு மற்ற அனைத்து வேலைகளையும் என்னிடம் கொடுத்துவிட்டார் என் முதலாளி. வந்தவர் எத்தனை மாதங்கள் சிவில் வேலைகளுக்கு எடுத்துக் கொள்வீர்கள் என்று நக்கலாகக் கேட்டார்?! உடனே முதலாளி என்னைக் காண்பித்து... இவர் யார் தெரியுமா?!....எங்க சிவில் இஞ்சினியர்... இவருக்கு ஒரு மாதம் போதும் என்று... அவரிடம் பெருமையாகவும் சற்றே செருக்கோடும் பேசினார். நமக்கு உள்ளூர சந்தோசம் என்றாலும் கூடவே ஒருவித அச்சம் கலந்த பயமும் இருந்தது. அவர் ஆச்சரியமாகப் பார்த்தார்.....நான் இதற்கு முன்பு Swimming pool செய்திருக்கவில்லைதான் ஆனால். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தைரியம் எங்கிருந்தோ வந்துவிடும். இரவு பகல் பாராமல் தொடர்ந்து வேலை செய்து வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தேன். சென்னையில் Consultantஆக உள்ள என் நண்பன் APS AP Senthil Kumar ) யிடம்தான் அவ்வப்போது சந்தேகங்களைக் கேட்டுக்கொள்வேன். இப்போதுவரை அவன்தான் என்னிடம் பணம் வாங்காத personal consultant என்றால் அது மிகையல்ல. நன்றிடா நண்பா...

அது ஒரு நல்ல அனுபவம். இத்தாலியன் டைல்ஸ், unter water lighting, வயதானவர்கள் நீர் தொட்டிக்குள் அமர்ந்திருக்கும் போது அவர்களின் முதுகில் மஸாஜ் செய்வதுபோன்ற அமைப்பு, வெளியே டெரகோட்டா டைல்ஸ்....என் பார்த்துப் பார்த்து செய்து அதில் தண்ணீர் நிரப்பி விட்டார்கள். முதன் முதலில் சோதித்துப் பார்க்க நான் குளிக்கவா என்று மேனேஜரிடம் கேட்டபோது... இல்லை இல்லை முதலில் முதலாளியம்மா தான் குளிக்க வேண்டுமென்று எனக்கான அனுமதி மறுக்கப்பட்ட ஒரு சம்பவம்தான் என்னால் இப்போதுவரை மறக்கவே முடியாத சம்பவம். நானும் அண்ணாமலை படத்தில் ரஜினி பாணியில் எழுதிவச்சுக்க...இந்த நாள்.. என்றெல்லாம் பேசிவிட்டு.. பிற்காலத்தில் நாமும் ஒரு Swimming pool கட்டவேண்டும் என்றெல்லாம் நினைத்தேன். அப்புறமென்ன?!.. அதை ஏன் கேட்குறீங்க. சிரிப்புதான் வருகிறது. அதெல்லாம் உலகியல் சம்பந்தப்பட்டதென்று என் நினைவில் இருந்தே அகன்றுவிட்டது. (ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும்).

அவ்வப்போது அந்த நீச்சல் குளத்தில் சினிமா ஒளிப்பதிவு நடப்பதாகச் சொல்லும்போது எனக்கும் மிக மகிழ்ச்சியாகவே இருக்கும்.

அஸ்ஸாமில் அந்த நேரத்தில் இணையதள வசதி வேண்டுமென்றால் ஒரு 50 கிமீ தாண்டி கோல்பாரா போக வேண்டும். பிறகு மன்மோகன் சிங் தயவால் கிராமப் பஞ்சாயத்துக்களில் அங்கே அந்த வசதி வந்தது‌. உண்மையில் அந்த ஊர்களில் அதைப் பயன்படுத்திய ஒரே ஆள் நானாகத்தான் இருக்கும். துத்னையில் இருந்து மட்டியாவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு முன்கூட்டியே நான் வருவதாகப் போன்செய்துவிட்டுச் சென்றால் அவர்கள் ஜெனரேட்டரில் டீசல் போட்டுத் தயாராக இருப்பார்கள். பிறகு எனக்காக இணையவசதி செய்து தருவார்கள். அங்கிருந்த போதுதான் என் யாகூ கூகுள் மின்னஞ்சல் முகவரி எல்லாம் உருவாக்கினேன் என்பதால் இன்னும் civilrajaassam என்றே என் முகவரிகள் இருக்கின்றன. இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இவ்வளவு கஷ்டங்களுக்கிடையேதான் நான் வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சி செய்தேன் என்பதைச் சொல்வதற்காகவே.

அஸ்ஸாமில்தான் நன்றாகப் போகிறதே....பிறகு ஏன் வெளிநாடு போகவேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மைதான்.. ஆனால் கொடுக்கும் சம்பளம் மிகக்குறைவாயிற்றே.. மேலும், எவ்வளவு அடைத்தாலும் அப்பாவின் கடன் அடைய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறதே....அட நாமும் ஒரு வீடாவது கட்ட வேண்டாமா....?! இப்படில்லாம் கனவு வந்துகொண்டே இருந்ததால் மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். மலேசியாவில் உள்ள சோமய்யா அவர்களின் உதவியால் ஒரு வேலை கிடைப்பதாக இருந்தது. சரி இங்கிருந்தால் சரிவராது...முதலாளியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்றால் அவர் விடுவதாக இல்லை. எவ்வளவோ தடுத்துப்பார்த்தார். ஒரு கட்டத்தில் வலுக்கட்டாயமாக கூறிவிட்டு கிளம்பி சொந்த ஊர் வந்து விட்டேன்.

ஆனால்....மூன்று மாதங்களாக முயற்சி செய்கிறேன். மலேசியா வேலையும் கிடைக்கவில்லை, எந்த வேலையும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் மீண்டும் முதலாளியிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர் தென்னிந்தியா வருவதாகவும் என்னைக் கேரளாவில் வடக்கம் பரவூரில் உள்ள சாந்திமடம் வந்து பார்க்கும்படியும் கேட்டுக் கொண்டார். நானும் நண்பன் சிவாவை Siva Thamilappan அழைத்துக்கொண்டு பழனி வழியாக கேரளா சென்றேன்.

✍️செ.இராசா

மகளிர் தினநன்நாள் வாழ்த்து

மகளாய்ப் பிறந்து மருமகளாய் மாறி
மகளையோ நல்ல மகனையோ பெற்று
மகத்தான வாழ்வுவாழும் மங்கையர்க்(கு) எந்தன்
மகளிர் தினநன்நாள் வாழ்த்து

✍️செ.இராசா

06/03/2021

அனுபவப் பதிவு-9------------------------படிக்காத மேதை சம்சாத்கான்-------கட்டுரை

 


 #அஸ்ஸாம்_மேகாலயா


இளம்வயதில் கொடுக்கும் வேலைகள் எதுவாக இருந்தாலும் தவறில்லாமல் செய்பவன் என்ற மிடுக்கும் செருக்கும் பொதுவாக பலருக்கும் இருப்பதுபோல் எனக்கும் நிறையவே இருந்தது. ஆனால் அவைகளையும் உடைத்தெறியும் சம்பவங்கள் இரண்டு நடந்தேறின.

ஒன்று மிகப்பெரும் வெள்ளத்தில் சிம்சாங் என்ற ஆற்றங்கரை அருகே தொழிற்சாலைக்காக நான் கட்டிய தடுப்புச் சுவர்கள் எல்லாம் உடைந்து ஆற்றோடு ஆறாக போனபோது ஏற்பட்டது. உண்மையில் இவையெல்லாம் மெருவெள்ளத்தில் சகஜமான ஒன்றுதான் என்றே முதலாளி கூறினாலும் நான் கட்டிய ஒரு கட்டுமானம் உடைந்ததை என்னால் மட்டும் ஏனோ ஏற்க முடியவில்லை. அன்று முதலாளியைவிட நானே மிகவும் வருத்தப்பட்டேன். அதற்கெல்லாம் காப்பீடு மற்றும் சலுகைகள் அரசாங்கம் கொடுத்தாலும் நம் மேற்பார்வையில் கட்டிய ஒன்று காணாமல்போய்விட்டதே என்ற வருத்தம்தான் எனக்கிருந்தது. ஆக நமக்கும்மேல் ஒரு ஆண்டவன் இயற்கையின் சக்தியாய் இருக்கிறான் என்பதை மறக்கும்போதெல்லாம் அவன் ஒரு குட்டு குட்டத்தான் செய்கிறான்.

ஆனால், அடுத்த சம்பவம் டில்லி சாகாரன்பூரைச் சேர்ந்த சம்சாத்கான் என்னும் ஒரு படிக்காத மேதையால் உணர்த்தப்பட்டது. அவர்விட்ட சவாலில் தோற்று என்னை அழுஅழுவென்று அழுக வைத்தது. அது என்ன தெரியுமா?!

சொல்கிறேன்.... நானோ BE படித்து முறையாக சிலபேரிடம் வேலைகளைக் கற்றுக்கொண்டு படித்ததன் அடிப்படையில் வேலை பார்க்கிறவன். ஆனால் நண்பர் சாம்சத்கானோ கைநாட்டு, ஆனால் இரும்புத் தூண்கள் மற்றும் சிமெண்ட் ஆலைக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களையும் தூக்கி வைக்கும் வேலையை பரம்பரை பரம்பரையாக செய்பவர்கள். இதைப்பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. Steel Design மட்டும் தான் பொறியாளர்கள் செய்வார்கள். அதைவைத்து fabrication அறிந்த யாரும் செய்துவிடலாம். ஆனால் Erection என்று சொல்லப்படும் வேலை அனைவராலும் முடியாது. அதற்கு வெறும் பட்டறிவு பயன்படாது. அனுபவ அறிவே பயன்படும். அது தெரியாமல் நானும் அவரும் பேசும்போது என்னிடம் ஒரு சவால் வந்தது. அதாவது நான் கட்டிய அனைத்துத் தூண்களின் மேல் மட்டமும் மிகச்சரியான உயரத்தில் உள்ளதென்றேன். அவர் முதல் தூணிற்கும் கடைசி தூணிற்கும் இடையே பெரிய அளவில் உயர வித்தியாசம் உள்ளதென்றார். நான் இல்லவே இல்லை என்றேன். நிருபித்து காட்டி என்னைத் தலை குனிய வைத்தார். அறையில் சென்று தேம்பி தேம்பி அழுதேன். என்னை ஓடோடிவந்து தேற்றினார். இதெல்லாம் வேலையில் சகஜமென்று கூறி அதை அவ்வளவு எளிதாகச் சரிசெய்தார். அதைச் சரி செய்யாவிட்டால் தூணிற்கு மேலே ரயிலில் ஓடும் கிரேனை இயக்க முடியாது. அதைச் சில Steel plates கொடுத்து packing செய்து சரி செய்துவிட்டார். அன்று முதல் என் அன்பு நண்பராகவும் மாறிவிட்டார். அவரின் திறமையைப் பல கட்டங்களில் கண்டு வியந்துள்ளேன்.

ஒரு முறை சிமெண்ட் மில்லைத் தூக்கி வைக்கும் சவால் ஒன்று அவரிடம் வந்தது. ஏன் சவால் என்கிறேன் என்றால், மிகப்பெரிய கிரேன் வந்தால்தான் தூக்கி வைக்க முடியும். ஆனால் மேலே கூரையெல்லாம் போட்டாகிவிட்டது. மீண்டும் கூரைகளைப் பிரிக்க முடியாது. கிரேனும் வர முடியாது. தூரத்தில் இருக்கும் சிமெண்ட் மில்லை (40-50மீ நீளம் 2-3மீ விட்டம்) நகர்த்தி பவுண்டேசன் மேல் தூக்கி வைக்க வேண்டும். எப்படி முடியும்?!. முடியும் சாம்சத்கானால் முடியும். மூன்றே நாட்களில் வெறும் chain block மற்றும் சில ஜுகார்டுகள் செய்து முடித்துவிட்டார். ஆக..BE பொறியியலில் படிக்கா பாடத்தை நான் சாம்சத்கானிடம் படித்தேன் என்றால் அது மிகையல்ல. அதுமட்டுமா.... ஹிந்திப்படமே பார்க்காத என்னைக் கட்டாயப்படுத்தி கே.பாலச்சந்தர் இயக்கிய கமல்ஹாசன் நடித்த "ஏக் துஜே கேலியே" காண வைத்தார். அன்றுமுதல் ஹிந்திப் படங்களும் காண ஆரம்பித்தேன்.

அஸ்ஸாம் வந்து பலநாட்கள் ஆகிவிட்டதால், ஊருக்குப் போகும் ஆசை வந்தது. முதலாளியிடம் தெரியப்படுத்தியபோது, தன் வீட்டில் ஒரு Swimming pool with Billiards வசதியுடன் செய்துதரச் சொன்னார். அப்போதுதான் முதன்முறையாக அதற்கெல்லாம் தனியாக பணம் தரவேண்டும் என்று கூறினேன். கூறியதும் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?!

05/03/2021

வாராயோ.....நீ...வாராயோ

 


இசையைப் பருகிட இதயம் ஏங்குது
திசைகள் எட்டிலும் தினமும் தேடுது
தசைக்குள் தீம்தனா தாளம் போடுது
பசைபோல் ராகம் பற்றிக் கொண்டது
 
வாராயோ.....நீ...வாராயோ
பாராயோ.....நீ....பாராயோ
 
✍️செ. இராசா
 
(இப்படி மரத்தில் அமர்ந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது. ஆம்.. சிறுவயதில் என் சொந்த ஊரான அம்மன் பட்டியில் இப்படி மாமரத்தில் உள்ளக் கிளைகளில் எத்தனையோமுறை அமர்ந்துள்ளேன். பல நாட்களுக்குப்பிறகு இன்று கத்தாரில் அப்படி ஒரு கிளையில் அமர்ந்தபோது என் சொந்த ஊர் ஞாபகமே வந்தது)

அனுபவப் பதிவு-8-------------நேர்மையின் சோதனை----கட்டுரை

 


தொடர்ந்து வந்த கடத்தல் அச்சுறுத்தலை நினைந்து முதலாளி எனக்காக ஒரு முக்கிய முடிவெடுத்தார். அவருக்கு எப்போதும் ஒரு துப்பாக்கி ஏந்திய காவலாளி உள்ளதுபோல் எனக்கும் ஒரு பாதுகாவலரை துப்பாக்கி இல்லாமல் நியமித்தார். அந்த நபர் கும்ஃபு கராத்தேபோல் டைகாண்டு என்ற தென்கொரியத் தற்காப்புக் கலை சொல்லிக்கொடுக்கும் மாஸ்டராவார். அவரின் கீழ் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றார்கள். அவருக்கு 3000 ரூபாய்ச் சம்பளம் (2004ல்) கொடுத்து எனக்காகக் கூட்டிவந்தார். அவருடைய வேலை என்னவென்றால் காலை முதல் மாலை வரை என்னுடன் கூடவே இருந்து என்னை யாரும் அடித்துவிடாமல் கண்காணிப்பது மட்டுமே. இங்கே நான் அவர் என்று சொன்னாலும் அவர் 23 வயதுள்ள சின்னப் பையன் தான். ஆனால் திடகாத்திரமான உயரமான பையன். ஆரம்பத்தில் என்னோடு தொடர்ந்து பயணித்த அந்தப் பையன் சில காலங்களுக்குப்பின் அவனையும் அங்கிருந்தவர்கள் மாற்றிவிட்டனர். என்னோடு பணிபுரிந்த சில சூப்பர்வைசர்கள் அவனுக்கும் பண ஆசை காட்டி எனக்குத் தெரியாமல் சில வேலைகளில் ஈடுபடுத்தினர். பொதுவாக நமக்கு எதிரிகள் வெளியில் இருப்பது கிடையாது. உடன் சகோதரன் போல் பேசி பணிபுரிபவர்களே. அவர்கள் கொள்ளையடிக்க நாம் இடையூறாக இருப்பதால் அவர்களே அடியாட்களையும் அனுப்பி மிரட்டியுள்ளார்கள். அந்த உண்மையையும் சற்று தாமதமாகவே கண்டுபிடித்தேன்.
 
ஒரு முறை எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது. பத்து நாட்கள் வேலைக்கே வரவில்லை. அந்த நேரத்தில்தான் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முதலாளியின் காதுக்கு அவர்கள் செய்த ஊழல் தெரிந்தது‌. இருப்பினும் முதலாளி அவர்கள்மேல் மிகப்பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம்.... அவரைப் பொறுத்தவரை அங்கே உள்ளவர்கள் அனைவரும் பணம் அடிப்பவர்களே. அதில் குறைவாக அடிப்பவர்கள் சற்றே நல்லவர்கள். அதில் என் நேர்மை அவரை மிகவும் வியக்க வைத்துள்ளது.
 
அஸ்ஸாம் மேகாலயாவில் தொழிற்சாலைகள் நடத்த வேண்டுமென்றால் நிறைய பணத்தை வாரி இறைக்க வேண்டும். யார் யாருக்குத் தெரியுமா ?!...அங்கே உள்ள அனைத்து இரவுடிகளுக்கும், பெரிய மற்றும் சிறிய குழுக்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் மற்றும் அவ்வப்போது பொதுமக்களுக்கும் கொடுக்க வேண்டும். அவரின் வீட்டிற்கு எதிர்புறம் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அதில் முதலாளியின் அலுவலகத்தில் கூப்பன் வாங்கி அங்கே உள்ள அனைவரும் இலவசமாகத்தான் பெட்ரோல் டீசல் போடுவார்கள். இப்படிப் பாவம் அவரும் நிறைய கொடுத்துத் கொடுத்துதான் அனலத்து நிறுவனங்களும் நடத்துகிறார் என்றால் சற்றே யோசியுங்கள்...அங்கே வாழ்வது எவ்வளவு கடினமான விடயம் என்று. 
 
அவரும் சிலபல கோக்குமாக்கு விடயங்கள் செய்யத்தான் வேண்டும். அப்போதுதான் அவராலும் அள்ளிவிட முடியும். அவர் அங்கே செய்தவற்றையெல்லாம் நான் இங்கே சொன்னால் நன்றாக இருக்காது என்பதால் அதை மட்டும் தவிர்த்துவிடுகிறேன். அது முதலாளி விஸ்வாசமும் ஆகாது. (இந்த இடத்தில் நான் விபீஷணன் அல்ல. கும்பகர்ணன்)
எனக்கான எதிர்ப்பு வலுப்பெறும்போதெல்லாம் அவர் என்னிடமே சொல்லுவார்.."இராஜா நீ ரொம்ப நேர்மையாய் இருக்காதே... கொஞ்சம் அப்படி இப்படி இருக்க பழகிக்க....உனக்கும் வேண்டுமென்றால் எடுத்துக் கொள்" என்பார். உண்மையில் இப்படி எந்த முதலாளிதான் சொல்வார்? நீங்களே சொல்லுங்கள்.
 
இப்படியெல்லாம் முதலாளியே சொன்னதால், எனக்கும் ஒரு முறை பண விடயத்தில் சின்ன சபலம் வந்தது...ஆம்..ஒருமுறை தீபாவளியை முன்னிட்டு காவல் நிலையத்தில் இனாம் கொடுக்கச் சொன்னார்கள். 10000 ரூ எடுத்துக் கொண்டு 2 காவல் நிலையங்களில் தீபாவளி இனாமாக 5000 ரூ ரூபாய் கொடுக்கச் சொன்றேன். அப்போது அருகில் இருந்த சூப்பர்வைசர் சொன்னான். சார்...‌ நீங்கள் 3000+ 3000 கொடுத்துவிட்டு 4000ரூ ஐ வைத்துக்கொண்டால் யார் கேட்கப்போகிறார்கள். நானும் அவன் கூறியதை சிறு சபலத்தில் சம்மதித்து ரூ 6000 ரூ கொடுத்துவிட்டு 10000 ரூ என்று கணக்கெழுதிவிட்டேன். ஆனால்...அங்கிருந்து அலுவலகம் போகும் வழியில் என் கை கால் எல்லாம் ஆடியது. உடல் நடுங்கியது. அலுவலகம் போனமாத்திரத்தில் முதல் வேலையாக அந்தக் காகிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டு உண்மையான கணக்கை எழுதிக் கொடுத்துவிட்டு நிம்மதி பெருமூச்சோடு ஒரு நடை நடந்தேன் பாருங்கள்....ஆகா...ஆகா அது..அதுதான் நேர்மையின் சுகம் என்பதை நன்றாக உணர்ந்தேன்.
 
இளம்வயதில் கொடுக்கும் வேலைகள் எதுவாக இருந்தாலும் தவறில்லாமல் செய்பவன் என்ற மிடுக்கும் எனக்கு நிறையவே இருந்தது. ஆனால் அவைகளையும் உடைத்தெறியும் சம்பவங்கள் இரண்டு நடந்தேறின. 
 
....தொடரும்

03/03/2021

சின்னம்மா

 


 

சின்னம்மா செய்த சிறப்பான சம்பவத்தால்
என்னம்மா செய்வீர் இனி?

#சபாஷ்_சரியான_போட்டி

#அரசியலைவிட்டே_விலகுகிறார்
முதன்முறையாக மனமார வாழ்த்துகிறேன்

✍️செ.இராசா

02/03/2021

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி--தினேஷ்

  


 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

வெள்ளை மனசோட
...........வெள்ளந்திப் பேச்சோட
கொள்ளை அடிச்சாயே
.............கூடிநீ- உள்ளத்தைக்
கள்ளம் கபடமின்றி
.............கண்ணில் பிழையுமின்றி
கொள்ளும் கலைபற்றிக் கூறு!

இத்தனைநாள் ஆனபோதும்
..............இன்னமும் மாறவில்லை
எத்தனைநாள் ஆனபோதும்
..............இப்படியே- சத்தியமாய்
உத்தமனாய் வாழ்கின்ற
..............உண்மைக் கலைபற்றி
அத்தனையும் எனக்காய் அளி!

சீறும் சிறப்போடும் செந்தமிழ்ப் பண்போடும்
மாறும் குணமின்றி வாழ்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி

அனுபவப் பதிவு-7-----------கடத்தல் திட்டங்கள்---கட்டுரை

 



நடிகர் விஷால்போல் ஒல்லியாக உயரமாக நல்ல கருப்பாக இருந்த நம்ம ஊரு இராணுவ கேப்டன் மந்திப்பத்தரில் இருந்த எங்கள் ஆலைகளுக்குள் நுழைந்ததுமே கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?!... நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? மற்றும் ஏன் வந்தீர்கள்? என்றுதான். எங்கள் முதலாளி அங்கே உள்ளக் குழுவினருக்கு பணம் கொடுப்பதால் கண்பாணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் மேலும் ஃபேக்டரிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தடுப்புச்சுவரில் இருந்து 5 மீட்டரில் எந்தப் புதிய பொருட்கள் கிடந்தாலும் தொடவேண்டாம் என்றும் அப்படி ஏதேனும் கண்டால் உடனே தெரியப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
அவர் அப்படிக் கூறிச்சென்ற சில நாட்களிலேயே எனக்கு அங்கே உள்ள காவல் நிலையத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. உடனே என்னை நேரில் வாருங்கள் பேசவேண்டும் என்றார்கள்.
காவல்நிலையத்தின் வெளியே மூன்று நபர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டு கிடந்தார்கள். ஒரே கூட்டமாக இருந்தது. ஒருவித பயத்துடன் காவல்துறை உயர் அதிகாரியைச் சந்தித்தேன். அவர் கூறிய விடயம்தான் என் வாழ் நாளில் இன்று வரை மறக்க முடியாத விடயம்.
அதாவது அவர்கள் மேகாயாவின் காரோ பகுதியைச் சேர்ந்த ஒரு சிறு குழுவாம். காட்டில் மறைந்திருந்து ஒவ்வொரு முக்கிய புள்ளிகளாக்க கடத்தி அவர்களைச் சார்ந்தவர்களிடமிருந்து பணம் பறிப்பதே அவர்களின் நோக்கமாம்‌. வேறு எந்த பொதுநல நோக்கமும் கிடையாது. அப்படி அவர்களைச் சுட்டபோது அவர்களின் சட்டைப்பையில் இருந்த பெயர் வரிசையில் என் பெயர் முதலிடத்தில் இருந்ததாம். என்னைக் கடத்தும் சில மணித்துளிகளின் முன்னர்தான் சுடப்பட்டுள்ளார்கள் என்றும் கவனமாக இருக்கவும் கூறினார்கள்.
இப்படிச்சொன்னால் எப்படி இருக்கும் உறவுகளே..... கேட்டவுடனேயே தலை சுற்றியது. என்னதான் வீட்டில் இருந்து கோபமாக மற்றவர்களுக்காக சாவதே மேல் என்று இங்கே வந்து நான் வேலை பார்த்தாலும், அதற்காக இப்படியா?! ஒன்றும் புரியவில்லை...உடனே முதலாளியிடம் தகவலைத் தெரிவித்தேன். அவருக்கு உள்ளதுபோல் எனக்கும் பாதுகாப்பு வழங்கினால் வேலை பார்ப்பேன் இல்லையேல் என்னை விட்டுவிடுங்கள் என்றேன். ஆம்... அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலாளி ஒருவர் எப்போதும் இருப்பார். எனக்கும் அதுபோல் வேண்டுமென்றேன்.
மேலும், இந்த வகை மிரட்டல்கள் வருவது அங்கே புதிதல்ல என்றாலும் இப்படிக் காகிதத்தில் பெயருள்ளதைக் கேள்விப்பட்ட போது கொஞ்சம் பயந்துதான் போனேன்.
இப்படித்தான் முன்னர் ஒருமுறை மேகாலயாவில் தொடர் பந்த் நடந்தபோது சும்மா இல்லாமல் ஏதாவது ஒரு வேலை கொடுக்க என்று நினைத்த முதலாளி, அஸ்ஸாமில் உள்ள அவருடைய தேக்கு தோட்டத்தை சர்வே செய்து கணிப்பொறியில் ஒரு வரைபடமாக சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்படித்தான் எனக்கு வரும் வேலையெல்லாம் புதுமையானதாக முன் அனுபவம் இல்லாதவையாகவே இருக்கும். இருந்தாலும் எப்படியாவது யோசித்து செய்துதருகிறேன் என்று சம்மதித்து ஒரு 20 பேர்கள் கொண்ட குழுவோடு 15 நாட்கள் சர்வே செய்தோம். 50000 தேக்கு மரங்கள் உள்ள இடத்தில் 15000 மரங்களைக் காணவில்லை. 35000 மரங்கள் தான் இருந்தது. அவைகளை எப்படி பாதுகாப்பது அவை ஒவ்வொன்றிற்கும் எப்படி எண் வழங்குவது. அவைகளை எப்படி கணிப்பொறி கோப்பாக்குவது என்பதே சர்வேயின் பிரதானமாக வைத்து மிகவும் சிறப்பான முறையில் செய்துகொடுத்தேன். முதலாளி மெய்சிலிர்த்துக் கட்டித் தழுவினார். அந்த சர்வேயின் போது நான்கு மாடி உயரத்தில் தேக்கினால் செய்த ஒரு டவரில் அமர்ந்து ஜொங்கா என்று சொல்லும். அவர்களின் சுண்டக்கஞ்சியும்
(Rice bear) அங்கேயே ஆற்றில் ஓடுகின்ற கெலுத்தி மீன்போன்ற ஒருவகை மீன்கள் சாப்பிட்டதும் மறக்க முடியாத ஒன்றே....
அடுத்து ஒரு சம்பவம் நடக்க இருந்தது. அதுதான் அங்கே ஹைலைட். அதாவது 16ஆம் நாள் சுதந்திர தினம், அன்று யாரையாவது கடத்தி தங்களை நிரூபிக்க காத்திருந்த உல்பாப் படை எங்களைத் தூக்குவதாக இருந்தனராம். 16ஆம் நாள் வந்து தேடியும் உள்ளனர். நாங்கள்தான் 15ஆம் நாளோடு வேலையை முடித்துவிட்டோமே...அதனால் சிக்கவில்லை.
இப்படி முதலிலேயே ஒரு அனுபவம் எனக்கு நேரடியாக இருந்தததாலும் மேகாலயா அனுபவம் மிகவும் மோசமாக இருந்ததாலும் முதலாளியும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒரு முக்கிய முடிவெடுத்தார்.
....தொடரும்

01/03/2021

பூரியாய் வந்தவுன்

 


பூரியாய் வந்தவுன் பூரிப்பைக் கண்டவுடன்
மாரியாய் ஆனதென் வாய்

அனுபவப் பதிவு-6-------பில்லிணியம் சிமெண்ட்ஸ் அனுபவம்---கட்டுரை

 



புதிய வேலை தொடங்குகிறார்கள் என்ற செய்தி கேட்டவுடனே ஊரே திரண்டு கூட்டமாக வந்துவிட்டனர். மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் வசிக்கும் அவர்களின்மேல் எந்தக்குற்றமும் இல்லை. இந்திய அரசாங்கம் இதுவும் தன் நாட்டின் ஒரு பகுதிதான் என்று எண்ணாமல் விட்டுவிட்டதோ என்று எண்ணத்தோன்றும் அளவில்தான் அம்மாநிலங்கள் இன்றும் இருக்கின்றன. விளைவு வேலை இல்லாத் திண்டாட்டம்தான் எல்லாப் பக்கமும். ஆனால் இயற்கை அன்னை அவர்களுக்கு மிகவும் கொட்டித்தான் கொடுத்துள்ளாள். அவர்களுக்குத்தான் அதைப் பயன்படுத்தும் அளவிற்கு முறையான கல்வி இல்லை. ஆம்... என்ன இல்லை அங்கே?! நம்ம ஊரில் சீமைக்கருவைபோல் அங்கே தெருவெங்கும் தேக்கு மரம் இருக்கிறது. எங்கும் பசுமைதரக்கூடிய நீர்வளம் இருக்கிறது. ஆனால் வறுமையும் கூடவே இருக்கிறது காரணம் யாராக இருக்க முடியும்?! கண்டிப்பாக முறையான ஆட்சியாளர்கள் இல்லாமையே காரணம் என்பேன்.
 
ஆகவேதான் எங்களிடம் வேலை தேடி அத்தனைபேரும் வந்துவிட்டார்கள். நாங்களும் 100 நாள் வேலைத்திட்டம்போல் ஒரு திட்டம் தீட்டினோம். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை அதுவும் சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒருநாள். இப்படியெல்லாம் பார்த்துதான் வேலை கொடுப்போம்.
இதில் ரபா என்ற இனத்தைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் கரடுமுரடான வேலைகளை சர்வ சாதாரணமாக செய்யக்கூடியவர்கள். அதாவது ஒரு மூங்கில் குச்சிபோட்டு மேலே ஏறி விடுவார்கள். தண்ணிக்குள் மூழ்கிச்சென்று பவுண்டேசன் போட்ட மோல்டுகளை கழட்டி வருவார்கள். ஒரு கயிற்றைப்பிடித்தே மூன்று மாடி உயரத்தில் இருந்து இறங்கி விடுவார்கள். இவர்கள்தான் என் பலம் என்பேன். இவர்களைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டேன். பெரும்பாலும் அஸ்ஸாமிய பெங்காலிகளே கொத்தனார் மேஸ்திரி வேலைபார்க்க வந்தார்கள். அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே. அதிலிருந்த அன்வர் மற்றும் அப்ஜலூர் என்ற இருவரை மேற்பார்வையாளராக நியமித்தேன். என் இரு கரங்களாக இருவரும் இருந்து பல ஆலைகள் அமைய உதவி செய்தார்கள். அதில் அப்ஜலூர் அன்வரைவிட நல்ல பொறுப்பாக வேலை பார்ப்பான். அன்வர் பல மொழிகள் பேசும் திறமைசாலி. என்னோடுப்பேசிப்பேசி தமிழும் பேசுவான். நான்கு முறைக்குமேல் தமிழ்நாடு வந்துள்ளான். என் மேல் இந்த இருவரும் அவ்வளவு அன்பு வைத்திருந்தனர். இதுவே அங்கே உள்ள மற்றவர்களுக்கு உறுத்தியது. குறிப்பாக விர்கோ சிமெண்ட் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கு உறுத்தியது. அவர்கள் என் அலுவலகத்தில் வந்து என் முன்னால் உட்கார்ந்து பேசக்கூடாது என்று என் முன்னாலேயே அப்ஜலூரை அடிக்க வந்தார்கள். காரணம் அங்கே உள்ள இஸ்லாமியர்கள் பங்களாதேசத்தில் இருந்து வந்தவர்களாம், அவர்களை அஸ்ஸாமிய இந்துக்கள் மதிப்பதே இல்லை. ஆனால் இதை என் அலுவலகத்தில் நான் அனுமதிக்கவில்லை. பெரிய அளவில் எதிர்த்தேன். இதனால் எனக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் பிரச்சினை உருவானது. இரபிஜெயின் தலையிட்டு அவர்களிடம் பேசியுள்ளார்.
 
அங்கே அலி என்ற ஒரு பொறியாளர் என்னை இரம்ஜான் பக்ரீத் என்றால் அன்வர் வீட்டிற்கு அழைத்துச்செல்வார். இரபிஜெயின்கூட அங்கே எல்லாம் நீ ஏன் போகிறாய். நீ இந்து அல்லவா...அங்கே மாடெல்லாம் சாப்பிடுவார்கள் என்றார். நான் சிதம்பரம் கல்லூரியில் படிக்கும்போதே ஃபீப் சாப்பிடுவேன் என்பதால் எனக்கு பிரச்சினை ஒன்றுமில்லை. மேலும்..நான் சென்னை ராமகிருஷ்ண மடத்து நூல்களை வாசித்து அதன்மூலம் பக்குவமடைந்தவன். ஆனால் அங்கே ஒரு இந்து பீப் சாப்பிட்டால் அது மிகப்பெரிய குற்றமாகிவிடும். நம்மை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் எனக்கு மட்டும் தனியாக அப்ஜலூர் பச்சைமிளகாய் வெங்காயம் தூக்கலாகப் போட்டு யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது செய்து கொடுப்பான்.
 
நான் அஸ்ஸாமில் இருந்த என் அறையை மாற்றி வேலை நடக்குமிடமான டமாஸிலேயே தங்க ஆரம்பித்தேன். இங்கே 24 மணிநேரமும் மின்சாரம் இருக்கும். மேகாலயாவில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டால் மின்சார வாரியத்தில் உள்ள பொறியாளர்களை அடி நிமித்திவிடுவார்கள். டமாஸில் ஒரே ஒரே மலையாளி RK. பிள்ளை மட்டும் விர்கோ சிமெண்டில் வேலை பார்த்து வந்தார். எனக்கு சமையல் கற்றுக்கொடுத்த குரு இவர். (பாவம்... சமீபத்தில் அங்கேயே தற்கொலை செய்து கொண்டாராம்)
 
நான் இதற்கு முன் சிமெண்ட் பேக்டரி போட்ட அனுபவமெல்லாம் கிடையாது. வரைபடத்தைப் பார்த்து பார்த்து அப்படியே அட்டையில் அதை மாடல் செய்து மேஜையில் வைத்துவிடுவேன். அதில் உள்ள அளவுகளைக் குறித்துக்கொண்டு அப்படியே செய்ய வேலையாட்களுக்குச் சொல்லித்தருவேன். பழைய சிமெண்ட் ஃபேக்டரியில் பேக்கிங் செய்யும்போது அதில் கீழேசிந்தும் சிமெண்டை JCB யில் அள்ளிக்கொண்டு வருவார்கள். இரும்புக் கம்புகள் வேறு ஒரு ஃபேக்டரியில் இருந்து உடைந்த நெளிந்த கம்பிகளாய் வரும். அதை நிமிர்த்திக்கொள்ள வேண்டும். மணல் பக்கத்திலேயே ஆற்றிலிருந்து எடுப்பார்கள். செங்கல் சூலையும் அவர்களுக்கு உண்டு. ஆக கட்டிடத்திற்குத் தேவையான அனைத்தும் அவர்களுடையதே. அதாவது கழிவுபோல் விழும் அனைத்தையும் வைத்துக் கட்டிடங்களாக்கட்ட எந்த நிறுவனம் ஒத்துக்கொள்ளும் சொல்லுங்கள். அதற்குத்தான் என் தலைமையில் இப்படி ஒரு செட்டப்.
நான் கட்டிடவியல் பொறியாளன் என்ற முறையில் அனைத்தும் எப்படி தயாராகிறது என்பதை நேரடியாக பார்க்கும் பாக்கியம் பெற்றவனாவேன்.
இங்கே கடைக்கால் தோண்டினால் 2 அடியிலேயே தண்ணீர் வரும். ஒரு பக்கம் குழி தோண்டி தொடர்ச்சியாக தண்ணீர் எடுத்துக் கொண்டே சாதாரண கலவை இயந்திரத்தில் காங்கிரீட் போட்டுத்தான் வேலைகளை முடித்தோம். (ready mix எல்லாம் கிடையாது) தொடர்ந்து மழை வேறு பெய்யும். குடை பிடித்துக்கொண்டு மூன்று நாட்கள் 24 மணி நேரம் தொடர்ந்து காங்கிரீட் போட்ட அனுபவமெல்லாம் மறக்கவே முடியாது. 8 மணிநேரம் ஒரு சிஃப்ட் என்ற ரீதியில் 3 குழுக்கள் உருவாக்கி, குழுத்தலைவருக்கு அரை நாள் கூடுதல் கூலி கொடுத்து வரவழைத்து காங்கிரீட் போட்டோம். 
 
தொழிற்சாலை கட்டிக்கொண்டிருந்த போதே முதலாளி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருடைய வீட்டில் வெளியே ஒரு போர்டிகோ கட்டும் வேலையும் கொடுத்தார். அவர் இருக்கும் வீடு துத்னையில் (Assam) ஆலை இருப்பது டமாஸில்(Meghalaya). போர்டிகோ காங்கிரீட் முடிய இரவு ஆனநிலையில் எனக்கு வாகனம் கொடுக்காமல் அங்கிருந்த சம்பூஜி என்ற மேலாளர் என்னை லாரியில் ஏற்றிவிட்டார் மிகுந்த மன வலியோடு பயணித்தேன். அதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை. முதலாளியிடம் எனக்கான மதிப்பு மரியாதை கூடியதால் பலரும் என்மேல் காழ்ப்புணர்ச்சியுடன் இருந்தனர். அதன் விளைவாக சம்பள விஷயமாக நான் சொன்ன வார்த்தையைத் திரித்து முதலாளியிடம் கூறியுள்ளார்கள். அவரும் என்னைத் தவறாக நினைத்துவிட்டார்போலும். ஊருக்குப் போவதாக இருந்தால் போய்விடச்சொன்னார். இருப்பினும் நேரில் வந்தவுடன் பேசலாம் என்று காத்திருந்தேன். தீவிரவாதிகளுக்குப் பணம் கொடுக்கிறார் என்று அரசாங்கம் சந்தேகப்பட்டு அவரைத் தேடியதுபோல...அவர் ஒரு மாதம் கழித்துதான் வந்தார். நான் ஒரு ஒரு மணி நேரம் என்னை எப்படி எப்படி அவமானப் படுத்தினார்கள் என்பதைக் டைரியில் குறித்து வைத்து ஆதாரத்துடன் விளக்கினேன். அவரும் புரிந்து கொண்டார். அன்றுமுதல் என் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. ஆம். அதுவரைக்கும் பில்லிணியம் சிமெண்ட ஃபேக்டரி மட்டும் பார்த்த நான் அன்றுமுதல் முதலாளியின் முக்கிய நபராக மாறினேன். பழைய இரும்புத் தொழிற்சாலைக்குச் சென்று பார்த்து வரச்சொன்னார். நான் எங்கு சென்றாலும் அங்கே எனக்கான அறை வைக்கச் சொன்னார். போகுமிடமெல்லாம் எனக்கான மரியாதையே தனிதான். என் முதலாளியோடு பிறந்தவர்கள் நான்குபேர். நான்கு பேரும் நான்கு வேலைகளாய் பகிர்ந்து பார்க்கிறார்கள். மூத்தவர் சில்லாங்கில் இருந்து கணக்கு வழக்கு, இரண்டாமவர் என் முதலாளி கள வேலை, மூன்றாமவர் கவுகாத்தி மற்றும் பங்களாதேஷ் பார்டரில் உள்ள டுப்ரி என்ற இடத்தில் வரி மற்றும் வியாபாரம், நான்காமவர்...பாவம் அவர் கொஞ்சம் அடாவடி என்பதால் பெங்களூரில் அவர் மாமனார் வீட்டில் இருந்து அகர்பத்தி கம்பெனி பார்க்கிறார். இந்த நால்வரில் என் முதலாளிக்கே மதிப்பதிகம் என்பதால் எனக்கும் அப்படியே. அவரின் மனைவியான பாபிஜியே என்னிடம்தான் முதலாளி எங்கேயென்று கேட்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 
 
டம்ராவில் இருந்து இன்னும் சற்று தள்ளி காரோ இன மக்கள் வாழும் மந்திபத்தர் என்ற இடத்தில் என் முதலாளி பழைய கைவிடப்பட்ட ரிப்ராக்டரி பிரிக்ஸ் என்ற ஆலை ஒன்றை விலைக்கு வாங்கி என்னை அங்கேயும் பார்க்க முடியுமா என்றார். கண்டிப்பாக பார்க்கிறேன்‌ என்றேன். அங்கே போய் ஒரே இடத்தில் மூன்று ஆலைகள் அமைத்துக்கொடுத்தேன். ஒன்று ஜல்லி அரைக்கும் கிரஷர், அடுத்து ரிப்ராக்டரி செங்கல் செய்யும் ஆலை மூன்றாவது சுண்ணாம்பு கற்களைச் சுட்டு பெட்டியில் அடைத்து விற்கும் பழைய ஆலையை புதுப்பித்தல். இதில் சுண்ணாம்பு தொழிற்சாலை மட்டும் தோல்வியடைந்துவிட்டது. இந்த ஆலைகளையெல்லாம் கட்ட மட்டும் செய்யவில்லை இயக்கவும் கற்றுக்கொண்டேன். காரணம் இங்கே வருபவர்கள் சில நாட்களில் ஓடிவிடுவார்கள் அல்லது தாதாகிரிகளின் தொந்ததரவால் ஓட்டிவிடப்படுவார்கள். என்னை வெளியில் போகும் இடங்களிளெல்லாம் மிரட்டல் விட்டார்கள். ஒருமுறை இராணுவத்தினர் உள்ளே வந்தனர். அதில் கேப்டனாக வந்தவர் நம்ம தமிழ் ஆள். நல்ல உயரமாக விஷால்போல் இருந்தார். என்னைப் பார்த்தவுடன் தமிழ் என்றவுடன் ஆச்சரியப்பட்டார். அதே சமயத்தில் அங்கே உள்ள நிலைமையறிந்து என் மேல் அனுதாபம் கொண்டார். அவர் என்ன சொன்னார் தெரியுமா?!
 
....தொடரும்
 
✍️செ.இராசா