25/08/2026

அங்கீகாரம்

 



விளையாட்டாய் ஆரம்பித்து
கலையோட்டமாய்ப் பரிணமித்து
தலைகாட்டவே போராடி
நிலைநாட்ட படும் பாடுள்ளதே;அது
பட்டவர்களுக்கேத் தெரியும்; அடி
பட்டவர்களுக்கேப் புரியும்!

எத்தனை உழைப்பு?
எத்தனை இழப்பு?
எத்தனை விரயம்?
எத்தனை வினையம்?

எவ்வளவு காலம்?
எவ்வளவு தூரம்?
எவ்வளவு தடைகள்?
எவ்வளவு கதைகள்?

மூச்சு முட்டுகிறது; நினைத்தாலே
வேர்த்துக் கொட்டுகிறது!

நுனி இலையில்
தவறவிட்டவனே அறிவான்!
சிறிது என்பது
சிறிதல்லவென்று...

இதோ இதோவென்று
இழுபட்டவனே அறிவான்!
இதுவும் கடந்து போகும்
இதோவென்று..

அங்கீகாரம்...
அந்த ஒன்றுக்காகத்தானே எல்லாம்
ஆனால்;
அது யாருக்குக் கிடைக்கிறது?

பசியில் உழல்வோனுக்கு
உணவு தானே அங்கீகாரம்?!
பார்வை இல்லாதவனுக்குக்
கண்கள் தானே அங்கீகாரம்?

அதேபோல்...
காலத்தில் கிடைப்பது தானே
உண்மையான அங்கீகாரம்!

செவிடானபின்
செவியொலிப்பான் எதற்கு?!
பசிபோனபின்
அன்னதானம் எதற்கு?

ஆனாலும்
இறந்தபின் வரும்
பாரத ரத்னாபோல்
மரணித்த பின் வரும்
மகாகவி பட்டம்போல்
சில அங்கீகாரங்களும்
தேவைதான் போல...

இதோ; எம்
அரும் முயற்சிக்கு வந்த
வெறும் 100 டாலர் காசோலைபோல‌..

✍️செ. இராசா

எல்லாம்வல்ல இறைவன் அருளால் ....

இந்த வெற்றிக்காகப் பெரிதும் உதவிய
இறையருளுக்கும் அனைத்து உறவுகளுக்கும் இரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 💐 ❤️

நன்றி நன்றி உறவுகளே...🙏🙏🙏


தெய்வமுன்னைப் பற்றுகின்ற

 


தெய்வமுன்னைப் பற்றுகின்ற
.......பாவிநெஞ்சம் வீழுமோ?!
செய்வமென்று சோர்ந்திடாமல்
.......செய்யமேலும் தோன்றுமோ?!

பொய்யையெண்ணிப் போற்றுகின்ற
......பொய்மையென்ன வாழுமோ?!
மெய்யிலூறி மாறிடாத
....மேன்மையெண்ணிப் போற்றுமோ?!

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய (2)

✍️செ. இராசா

23/08/2026

சிறிய வழிகாட்டலில் பெரியமாற்றம்


​2001, மே மாதம்... பொறியியல் படிப்பை முடித்த உடனேயே, என் தந்தை என்னை ஒரு பொறியாளரிடம் உதவியாளராகச் சேர்த்துவிட்டார். சொந்த ஊரான அம்மன்பட்டியில், எங்கள் மனோகரன் மாமா அவர்களின் தோட்டத்தில் நெற்களம், பாலம் மற்றும் நுழைவு வாயில்கள் அமைக்கும் பணியே எனது முதல் களப்பணியாகும்.

​அப்போது ஏரியூரிலிருந்து 'தேவா' என்னும் பையன் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தான். அவனிடம், "தம்பி, எதுவரை படித்துள்ளீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவன், பன்னிரெண்டாம் வகுப்பில் கிட்டத்தட்ட 1000 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாகக் கூறினான். "அப்படியானால் நீங்கள் மேற்படிப்பு படிக்கலாமே!" என்றேன்.
​அதற்கு அவன், "இல்லை அண்ணா... எங்கள் குடும்பத்தின் சூழ்நிலை அப்படி. நான் சம்பாதித்தால்தான் வீட்டில் அனைவரும் சாப்பிட முடியும்; அதுபோக தங்கைகளும் இருக்கிறார்கள்" என்று தனது குடும்பச் சுமையை வருத்தத்துடன் கூறினான்.

​நான் அவனிடம், "இல்லை தம்பி, நீங்கள் படித்தால் உங்கள் வாழ்க்கையே மாறும். என்னை நம்புங்கள்!" என்றேன். உடனே அவன், "படிப்பதற்குப் பணம் வேண்டுமே அண்ணா?" என்றான்.
​நான், "கவலைப்படாதீர்கள்... நான் எங்கள் அப்பாவிடம் பேசி ஏதாவது செய்கிறேன். சனி, ஞாயிறு மற்றும் உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் வேலை பார்க்கவும், உங்கள் வருமானத்திற்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்" என்று வாக்குறுதி அளித்தேன்.

அந்தச் சமயத்தில்தான் என் தம்பியும் டிப்ளமோ படிக்கக் கல்லூரி தேடிக்கொண்டிருந்தான். சிவகங்கை அருகே மானாமதுரையில், நான் சார்ந்த சமுதாய மாணவர்களுக்குக் கொஞ்சம் சலுகை வழங்கும் அடிப்படையில் கல்வி கற்கும் வசதி இருந்தது. தேவா வேறு சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், என் தந்தை மூலமாக அங்கு முயற்சி செய்யச் சொன்னேன். அவனும் தனது குடும்ப நிலையை அங்கு விளக்கிக் கூறினான். அவனது தீராத கல்வி ஆர்வத்தையும் முயற்சியையும் பார்த்த கல்லூரியினர், அவனுக்கு இலவசமாகவே சீட்டு வழங்கினர்.

​இடைஇடையே வேலை பார்த்துக் கொண்டும், படிப்பில் முழு கவனம் செலுத்தியும் அவன் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான். அதன் பிறகு அவனுக்கு B.E (இளங்கலை பொறியியல்) படிக்கவும் சீட் கிடைத்தது; படிப்பையும் வெற்றிகரமாக முடித்தான்.

​பின்னர் பெங்களுரில் டாட்டா குழுமத்தில் பணிபுரிந்து, சவுதி, ஓமன் போன்ற வெளிநாடுகளிலும் வேலை பார்த்து, தற்போது தன் சொந்த ஊரில் ஒரு கட்டிட நிறுவனத்தைத் தொடங்கி தனது புதிய பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் தம்பி தேவேந்திரன் அவர்களை மனமார வாழ்த்தி மகிழ்கிறேன்! ஒருவேளை நான் வழிகாட்டாவிட்டாலும், அவருடைய விதிப்படி வேறு யாரேனும் அவருக்கு வழிகாட்டியிருக்கலாம். ஆனாலும், அவரே எடுத்த தொடர் முயற்சிதான் அவரை இன்று இந்த உயர்ந்த இடத்திற்குக் கொண்டுவந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

​இதன் மூலம் நான் கூற வருவது என்னவென்றால்:
​நாம் எப்போதும் நம்மால் முடிந்ததை பணமாகவோ, உழைப்பாகவோ, நல்ல ஊக்கமான வார்த்தைகளாகவோ அல்லது மனமார்ந்த வாழ்த்துகளாகவோ வழங்குவது இந்தப் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ​ஆகவே, நம்மால் முடிந்தவரையிலும் நல்ல எண்ணங்களை விதைப்போம்; நேர்மறையான சூழலை உருவாக்குவோமாக...!!!

வாழ்க வளமுடன்
வாழ்த்துகள் தம்பி!

✍️செ. இராசா

(தாங்கள் பிறருக்கு ஓர் முன்னுதாரணம்)

தொடர்புக்கு:

Devendran, DS Builders,
9150424423
7871424424
See less

19/08/2026

மாண்புமிகு மனிதநேயம் MKP

 



கடந்த சனிக்கிழமை (15.08.2026) அன்று அதிகாலையில், தம்பி தினேஷ் வீட்டின் உள்நுழைந்தபோது, அங்குள்ள ஒரு இளம் தம்பதியினர் வீட்டின் வெளியே ஏதோ ஒரு புரியாத குழப்பத்துடன் பதற்றமாகக் காணப்பட்டனர். என்னவென்று விசாரிப்பதற்கு முன்பாகவே, என்னைத் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் தம்பி தினேஷ் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினர். காரணம் விசாரித்தபோது, தங்கள் ஊரைச் சேர்ந்த உறவினரான 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கத்திலேயே மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும், அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் கூறினர். "பதட்டப்பட வேண்டாம்... முதலில் அமைதியாக இருங்க... பார்த்துக்கலாம்" என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்.
இதற்கான நடைமுறைகளை விளக்கி, சரியான முறையில் வழிநடத்தக்கூடிய ஒரு அமைப்பு உள்ளதைச் சொல்லி, 'மனிதநேய கலாச்சாரப் பேரவை' நண்பர் திரு. ஹுசைன் அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் மட்டும் அனுப்பினேன். சனிக்கிழமை காலை நேரம் என்பதால் நேரடியாக அழைக்கத் தயங்கினேன். ஆனால், தகவல் பார்த்த உடனேயே அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர். "கைப்பேசிஎண் கொடுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று உடனடியாக ஆறுதலாகக் கூறினார்கள். நானும் கைப்பேசி எண்ணைக் கொடுத்துவிட்டு, முதல் கட்ட காவல்துறை மற்றும் மருத்துவ நடைமுறைகள் முடிக்கக் கால தாமதமாகும் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால், ஐயா அவர்களும் அந்த அமைப்பும் உடனடியாக ஒரு புலனக்குழுவை (WhatsApp Group) அமைத்து, ஊரில் உள்ள முக்கியமான நபர்கள் முதல் உறவினர்கள் வரை அனைவரையும் இணைத்து அனைத்து நடைமுறைச் சிக்கல்களையும் சரிசெய்தனர். இதோ, இன்று (19.08.2026) புதன்கிழமை, இறந்தவரின் உடலை ஊருக்கு அனுப்பி வைக்க வண்டியும் வந்துவிட்டது.

இவர்கள் இப்படிச் செய்வது முதல் முறையல்ல. வெளியே தெரியாமலும், எந்த விளம்பரமும் இல்லாமலும் தொடர்ந்து இதுபோன்ற பல சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
இறந்தவரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பை நம்மால் ஈடுசெய்ய முடியாவிட்டாலும், அவர்களின் உடலை உறவினர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் இந்த நல்ல காரியத்தைச் செய்த 'மாண்புமிகு #மனிதநேய #கலாச்சாரப்_பேரவை'யின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, நன்றி!
MKP & ஹுசைன் சார்.

✍️ நன்றியுடன்,

செ. இராசமாணிக்கம்

#அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், இராமனாதிச்சன்புதூரைச் சேர்ந்த எட்வின் அவர்கள், கடந்த 15ஆம் தேதி கத்தாரில் காலமானார். அவரது உடல் இன்று தாயகம் அனுப்பி வைக்கப்படுகிறது.

🤲 எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு நற்பேற்றை வழங்குவானாக.

மனிதநேய கலாச்சார பேரவை (MKP) – கத்தார்
Indian Community Benevolent Forum (ICBF) – Qatar-ன் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு 

பணம் என்ன மரத்துலயா காய்க்குது?

 


உனக்கென்னப்பா நீ வெளிநாட்டுல இருக்க...
பணம் என்ன மரத்துலயா காய்க்குது?!- சில
சனம் எங்கள வேறமாரி பார்க்குது? ஆமாம்.
பணம் என்ன மரத்துலயா காய்க்குது?!- சில..
சனம் ஏங்க வேறமாரி பார்க்குது?
சொந்த பந்தம் எல்லாம் விட்டு
சொந்த ஊர விட்டுப்புட்டு
கடன அடைக்கக் கடலுதாண்டி வருகுறோம்- வந்து
வட்டியக் கட்டும் வாழ்க்கையில முழுகுறோம்!
வருஷம்பூரா கஷ்டப் பட்டு
போகும்போது இஷ்டப்பட்டு
நகைய நட்ட சேர்த்த காசில் வாங்குறோம்- வாங்கி
வந்தது முடிஞ்சா அடகுக் கடைக்கி ஓடுறோம்...
ஏய் மச்சான் கொஞ்சம் நில்லு
எங்க...இப்ப நீயும் சொல்லு?
எந்த வாழ்க்கை சொர்க்கம்?!- அது
நினைக்கும்போதே இனிக்கும்
எங்க வாழ்க்கை கஷ்டம்?! - அது
எங்களோட இருக்கும்..‌.
பணம் என்ன மரத்துலயா காய்க்குது?!- சில
சனம் எங்கள வேறமாரி பார்க்குது? ஆமாம்.
பணம் என்ன மரத்துலயா காய்க்குது?!- சில..
சனம் ஏங்க வேறமாரி பார்க்குது?
வயசுபூரா தொலைஞ்சிபோச்சு
மசுருபூரா கொட்டிப்போச்சு
போதும் இனிமே போகனும் தான் நினைக்கிறோம்- ஆனால்
போனபின்னே வழியில்லாம திரும்புறோம்!
நினைச்சவேலை கிடைச்சிடாது
கிடைச்சவேலை நிலைச்சிடாது
அப்படி இப்படி சமாளிச்சே கடக்குறோம்- எல்லாம்
உறவுக்காக மெழுகுவர்த்தியா உருகுறோம்!
ஏய் மச்சான் கொஞ்சம் நில்லு
எங்க...இப்ப நீயும் சொல்லு?
எந்த வாழ்க்கை சொர்க்கம்?!- அது
நினைக்கும்போதே இனிக்கும்
எங்க வாழ்க்கை கஷ்டம்?! - அது
எங்களோட இருக்கும்..‌.
✍️செ. இராசா

18/08/2026

பாசத்துல மழையைப்போல

 

பாசத்துல மழையைப்போல
கோபத்துல வெயிலைப்போல
வேகத்துல புயலைப்போல
ஆபத்துல கர்ணன்போல
அப்படியே மாறுவதில்
அவளைப்போல யாருமில்லை(2)
ஏ....காரைக்குடிக்காரி-ஏன்
முறைக்கிற ஒருமாரி (2)
அப்பல்லாம் சண்டை போட்டா
.....சட்டி முட்டி பறபறக்கும்
அப்பப்ப குத்திக்காட்டி
......பூகம்பமாய் வெடி வெடிக்கும்
இப்பவும் சண்டை போட்டா
....போனுக்குள்ள பொறிபறக்கும்
ஆனாலும் பேசலைன்னா
....இருதயமே பதைபதைக்கும்...
அவ
பேசும் அந்த பேச்சு- என்
உசுரில் கலந்து போச்சு
ஓடும் அந்த மூச்சு- நான்
எழுதும் கவிதை ஆச்சு...
ஏ....காரைக்குடிக்காரி-ஏன்
முறைக்கிற ஒருமாரி (2)
கட்டிக்கிட்ட புருஷன்பத்தி
....கண்டபடி கதைகதைச்சா
கண்ணகிபோல் மாறிடுவா
...கண்ணாலேயேப் பொசுக்கிடுவா
அண்ணனென்ன தம்பியென்ன
....சொந்தமென்ன பந்தமென்ன
உள்ளவச்சு பேசமாட்டா
...உண்மையைத்தான் பேசிடுவா
அவ
பேசும் அந்த பேச்சு- என்
உசுரில் கலந்து போச்சு
ஓடும் அந்த மூச்சு- நான்
எழுதும் கவிதை ஆச்சு...
ஏ....காரைக்குடிக்காரி-ஏன்
முறைக்கிற ஒருமாரி (2)
✍️செ. இராசா

16/08/2026

நேரமில்லை நேரமில்லை

 

நேரமில்லை நேரமில்லை
நேரமில்லை என்கிறீர்
......தூரமிங்கே போனதெங்கே
......சேர்த்தநேரம் இல்லையோ?!
யாருமென்னைப் பார்ப்பதில்லை என்னவாழ்க்கை என்கிறீர்
.......நீருமிங்கே போனதெங்கே
.......பார்க்கநேரம் இல்லையோ?!
காரமில்லை உப்புமில்லை
என்றுவம்பு செய்கிறீர்
.......காதலோடு பேசமட்டும்
.......கொஞ்சநேரம் இல்லையோ?!
தீரவில்லை ஆசையென்றுத் தேடியெங்கும் போகிறீர்
......தீர்க்கமான இன்பமெங்கே
......தேடநேரம் இல்லையோ?!
✍️செ. இராசா

13/08/2026

ஆரம்பம் அதிரடியாய் இருந்தாலும்

 


ஆரம்பம் அதிரடியாய் இருந்தாலும்
சமீபத்திய சம்பவங்கள்
சங்கடத்தையேத் தருகின்றன...

மாற்று அரசியலுக்காய்
தூற்றும் அரசியலைத்
தூர வைத்தோம்...

துதி பாடியே
தொப்பை வளர்த்தோரை
வீட்டுக்கு அனுப்பினோம்...

கலப்படம் கூடாதென்று
அரசியலையும் ஆன்மீகத்தையும்
தனித்து வைத்தோம்...

ஆனால்...
வில்சன் போன்றோரின்
வில்லதனமான ஆக்ரோஷமும்
விஷமத்தனமான பேச்சும்
இரசிக்க முடியவில்லை....

உண்மையில்
பலரும் கலக்குகிறார்கள்
சிலர்தான் அச்சுறுத்துகிறார்கள்...

மீண்டும் அந்த...
ஒன்றிய அரசென்ற சொல்லாடல்தான்
ஒன்றை யோசிக்க வைக்கிறது?!

மாண்புமிகு முதல்வரே
அவைக் குறிப்பிலிருந்து மட்டுமல்ல
அவையிலுருந்தே ஒதுக்கி வைப்பீர்...
அதிகப் பிரசங்கிகளை
அதிகப் பிரசங்கங்களை....

✍️செ. இராசா 

11/08/2026

புடிச்சாப் பழகு- நீ

 

புடிச்சாப் பழகு- நீ
புடிக்கலைன்னா விலகு
நடிச்சா உறவு-அதில்
நடக்குதிந்த உலகு...
பிடிச்ச முயலுக்கு மூனுகாலுன்றான்...
அதுதான் உண்மையின்னு இவனும் சொல்லுறான்
கிடைச்ச வாய்ப்பில் அவன் கிடா வெட்டுறான்- இவன்
கருத்தைப் பதியுமுன்னே கமெண்டப் போடுறான்...
காலம் ரொம்ப கெட்டிடுச்சுன்னு
.....கதறுறாங்க மக்கா!
நாளும் சோம பானத்தில
....மிதக்குறாங்க கிக்கா!
நீயும் நானும் ஒன்னுதான்னு
....முழங்குவாங்க பக்கா!
வாயும் வயிறும் வேறதான்னு
....பதலளிப்பான்..................சோ....க்கா!

07/08/2026

யாருக்கு யாரும் சளைச்சவன் இல்லை

 

யாருக்கு யாரும் சளைச்சவன் இல்லை
ஆறுக்கு நூறா விரிஞ்சிடும் எல்லை
நேருக்கு நேரா வருகுறான் பாரு
ஊருக்கு புதுசா ஆயிரம் பேரு
✍️செ.‌இராசா

06/08/2026

சபலமென்ற ஒன்றுவந்து

 

சபலமென்ற ஒன்றுவந்து
......சண்டைபோடும் வேளையில்
அபயமென்று கூடிடாமல்
.......அஞ்சியோட வேண்டுமே!
சபதமொன்று போட்டபின்னர்
.......சஞ்சலங்கள் தோன்றயில்
அபலமென்று நெஞ்சிலேற்றி
......ஆசைதூர்க்க வேண்டுமே!
✍️செ. இராசா
(அபயம்- அடைக்கலம், தஞ்சம், Chance)
(அபலம்- பயனற்ற, Useless)