30/05/2023

 

சூழலுக் கேற்ப துணிவோடு செல்பவனே
வேழம்போல் நிற்கின்றான் வென்று!

29/05/2023

மௌனம் பேசியதே...

 #மௌனம்_பேசியதே

மௌனம் பேசுமா?
ஏன் பேசாது...

காதலில் பூக்கும்
மெளனப் புன்னகையில் தான்
எத்தனை வார்த்தைகள்?!!

ஊடலில் தூற்றும்
மௌனப் பார்வையில் தான்
எத்தனை மிரட்டல்கள்?!

கூடலில் கோர்க்கும்
மௌனக் கைகலப்பில்தான்
எத்தனை நேசங்கள்?!!

மழலையாய் மாறும்
மௌனக் கொஞ்சலில்தான்
எத்தனை துள்ளல்கள்?!

மகிழ்ச்சியில் உதிரும்
மௌனக் கண்ணீரில்தான்
எத்தனை அர்த்தங்கள்?

இப்படி...
ஒவ்வொரு மௌனத்திலும்தான்
எத்தனை இன்பங்கள்?!
எனில் மௌனம் பேசும் தானே...?!!

✍️செ. இராசா

26/05/2023

கத்தாரில் உள்ள இந்தக் கடைக்கும் எனக்குமான பந்தமென்பது

  


வந்த காலம் தொட்டு நானும்
.....வந்து வந்து போகிறேன்
அந்தக் காலம் போல இன்னும்
....ஆர்வம் மட்டும் தீரலை...
வெந்த சோறத் திண்ணு திண்ணு
.....நொந்து போகும் வாழ்வுல
இங்க வந்து பூரி திண்ணா
......எந்தன் சோகம் காத்துல....

✍️செ. இராசா

கத்தாரில் உள்ள இந்தக் கடைக்கும் எனக்குமான பந்தமென்பது கிட்டத்தட்ட 17+ வருடங்கள் உறவுகளே. ஆம் ....முதன் முதலாக இங்கே வரும்போது தெரியவில்லை, நான் இப்படி பந்தப்படுவேனென்று. சிறு இடைவெளிக்குப் பிறகு இன்று கத்தார் மனவளக்கலை போய்விட்டு, இந்த அல்சர்க்கா உணவகம் வந்தேன். என்னே வரவேற்பு......ப்பா... இது மலையாளி உணவகம்தான். ஆனால், இங்கே அனைத்து நாட்டினரும் வருகிறார்கள். குறிப்பாக அரபிகள் விரும்பும் இந்திய உணவகம் இது. உடனே....விலை அதிகம் என்று எண்ண வேண்டாம். 2006 முதல் இன்று வரை ஒரு பூரி ஒரு ரியால் (22 ரூ) மட்டுமே.

நல்ல மனிதர்கள்.
நல்ல உபசரிப்பு

நல்லா இருக்கனும்...
வாழ்க வளமுடன்!

✍️செ. இராசா

24/05/2023

வாழ்க்கையெனும் விளையாட்டு



அடிக்கின்ற பந்தெல்லாம் ஆறுக்குப் போகா
முடிந்தவரை வேகமாய் ஆடு
(1)

பறந்துவரும் பந்தைப் பருந்துபோல் நோக்கித்
திறமோடு தொட்டால் சிறப்பு
(2)

பதட்டம் அடையாமல் பக்குவமாய் ஆடப்
பதக்கமாய்க் கிட்டும் பலன்
(3)

உணர்ச்சி வசமின்றி ஓர்மையில் நின்று
கணத்தைக் கணித்துக் களி
(4)

குழுவாய் இணைந்து கொடுக்கின்ற போதே
முழுவெற்றி யாகும் முடிவு
(5)

கணித்தது பொய்த்தால் கவலையுற வேண்டாம்
துணிவோடு செய்வாய் தொடர்ந்து
(6)

இயல்பான ஆட்டம் எழிலாய் இருக்கும்
முயன்றவரை ஆட முயல்
(7)

அணித்தலைவர் சொல்லை அவமதியா பேரே
அணித்தலைவர் ஆவர் அடுத்து
(8)

கடைசி கணமும் கணிப்புகள் மாறும்
கடைசிவரை ஆட்டத்தைக் காட்டு
(9)

ஒவ்வொரு நாளுமே ஒவ்வோர் அனுபவமே
எவ்வளவு ஆகுமோ செய்!
(10)

✍️செ. இராசா

20/05/2023

சென்னை_விமான_நிலையம்

 




பொதுவாக வெளிநாட்டைப் பார்த்தே வியந்த நான் முதன் முதலாக நம் தமிழ் நாட்டைப் பார்த்து வியந்தேன் என்றால் அது மிகையல்ல உறவுகளே...
அதாவது சென்னை அண்ணா நகரில் இருந்து திருமங்கலம் மெட்ரோ சென்று அங்கிருந்து சென்னை விமான நிலையம் சென்றோம். தரையில் கால் படாமல் அங்கிருந்த படியே சென்னை விமான நிலையம் சென்றது வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது.
 
நம் சென்னை மெட்ரோவால் இது சாத்தியமானது என்றால் நம்புவீர்களா?!!
மெட்ரோ நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு தரையில் கால் படாமல் அப்படியே பன்னாட்டு விமான நிலையத்திற்கு போகும் வழியெங்கும் உலகத்தரம் வாய்ந்த ஒன்று. நகரும் தானியங்கி இயந்திரங்கள் அமைத்து மிகவும்
அருமையாக
செய்துள்ளார்கள்.
 
விமான நிலையத்தில் 20ரூபாய்க்கும் தேநீர் கிடைக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம்..தண்ணீர் பாட்டிலும் 10 ரூபாய்க்குக் கிடைக்கும் அளவில் உலகத்தரத்தில் செய்துள்ளார்கள்‌. ப்பா செம்மல்ல.....
திமுகவோ அதிகமாகவோ இரண்டுபேரும் போட்டி போட்டு செய்துள்ளார்கள் (மத்திய அரசின் பங்களிப்பும் உள்ளது) உறவுகளே. நம் நாட்டில் ஒரு விமான நிலையம் இப்படியா என்பதுபோல் உள்ளது. இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஆட்சியாளர்களே....

19/05/2023

கிழங்கான் மீனுவச்சு


 

கிழங்கான் மீனுவச்சு
கேட்காமத் தந்தவளே...
ஆத்தாடி என்ன சொல்ல
அடிமனசும் துள்ளுதடி
........அடிமனசும் துள்ளுதடி!
 
நாட்டுக்கோழி நீ சமைச்சா
நாக்கடியில் வெள்ளமடி
காத்தாடி போல நெஞ்சு
கடபுடன்னு துடிக்குதடி
...........கடபுடன்னு துடிக்குதடி 
 
என்னாடி என்னவளே
எனக்காகப் பிறந்தவளே
உன்னைப்போல யாரு புள்ள?
உண்மையில யாருமில்லை‌..
 
✍️செ. இராசா

18/05/2023

இறுமாப்பு கொண்டசிலர்

 


வங்கக் கடல்காண
......வந்திருந்த போதன்று
பொங்கும் கடல்கண்டு
.......பொங்கியதால்- அங்கே
சிறுநீரைப் பாய்ச்சிய
.......சிந்தையில்லா நாய்போல்
இறுமாப்பு கொண்டசிலர்
.......இங்கு!
 
✍️செ. இராசா

16/05/2023

எல்லா மதுவும் மதுவல்ல டாஸ்மாக்கின் 

கொல்லா மதுவே மது

14/05/2023

மயிலையில் வாழுகின்ற .......கபாலீஸ்வரா

 

மயிலையில் வாழுகின்ற
.......கபாலீஸ்வரா
வந்துனை வணங்குகிறோம்
........வா...ஈஸ்வரா!
 
கயிலையை ஆளுகின்ற
........பரமேஸ்வரா
கண்டிட ஏங்குகிறோம்
.........பார்...ஈஸ்வரா!
 
உயிர்களின் நாயகனே
........சோமேஸ்வரா
உன்னருள் வேண்டுகிறோம்
......தா.. ஈஸ்வரா
 
ஜெயித்திட வைப்பவனே
.......ஜெகதீஸ்வரா
‌செய்பொருள் ஆ(க்)கிடவே
.......செய்..ஈஸ்வரா
 
✍️செ. இராசா

13/05/2023

கருத்த பெண்ணே

 

பல்லவி

 
கருத்த பெண்ணே- உன்னைக்
காணாமநான் நோகுறேன்- நீ
கிடைச்ச பின்னே - அந்திக்
கீழ்வானமா மாறுறேன்!‌...

கொஞ்சும் விழி
கூறும் மொழி
எந்தன் கவி
கண்ணே கவ்விடு கண்ணால

நெஞ்சின் வலி
நீங்கும் வழி
அன்பே சகி
பெண்ணே வந்திடு முன்னால

உன்னை நினைச்சு உருகி உருகி கரையுறன்டி
என்னை அணைச்சு உசுரு துடிக்க வழிசெய்யடி

கருத்த பெண்ணே...கருத்த பெண்ணே

(கருத்த பெண்ணே)

சரணம்-1

சாக்லெட் பெண்ணேவுன் தித்திக்கும் ஸ்மைலு
சுகரின் லெவல்கூட்டி எனைத் தூக்குதே
காஃபி பிரௌனேவுன் கண்ணாடி மேனி
சன்லைட் ரிஃப்லெக்டில் எனைத் தாக்குதே

என்ன அழகிதுவோ
என்னை வதைக்கிதடி...
கருப்புக் கலையிதுவோ
கண்ணப் பறிக்கிதடி..
ஒயினில் செஞ்சதுவோ
உதட்டில் தெரியுதடி..
பிரம்மன் கவியிதுவோ
பெண்ணே மயக்குதடி...

ஏய் கருத்தப் பெண்ணே....

Rap Portion

மல்லு வேட்டிக் கட்டிக்கிட்டு
மச்சினி உன்னைக் கூட்டிக்கிட்டு
புல்லட்டுல வச்சிக்கிட்டு
புடுபுடுன்னு ஒட்டிக்கிட்டு
அப்படி இப்படி சுத்தி வந்தா
எப்படி இருக்கும் சொல்லடி புள்ள..
கல்லடி பட்டாலும் தப்பில்லைடி
கண்ணடி பட்டாக்க என்னடி செய்ய
விட்டுடு விட்டுடு வேணாமடி
தப்புடி தப்புடி விட்டுடடி
இப்படி யாரேனும் சொல்லிவந்தா
உடனே கழட்டி விட்டுடடி
அப்படி உறவு ஏதுக்கடி
என்னைய மட்டும் வச்சுக்கடி....
என்னைய மட்டும் வச்சுக்கடி

சரணம்_2

ஓரக் கண்ணால நீபார்க்கும் பார்வை
உச்சம் தலைக்கேறி சூடேத்துதே
பேபி பேபின்னு நீகொஞ்சும் வார்த்தை
கூலிங் பியரைப்போல் மூடேத்துதே..

என்ன பவரிதுவோ?!!
சுண்டி இழுக்குதடி
எப்போ அடங்கிடுமோ?!!
கண்ணே வழிசொல்லடி...
பித்தம் குறையனுன்னா
முத்தம் மெடிசனடி...
சித்தம் தெளியனுன்னா
செய்வோம் தியானமடி

✍️செ. இராசா