30/04/2023

வெள்ளியங்கிரி ---------- சிவனே போற்றி

 

அவனாயிவன் இவனாஅவன்
அடயாரென என்றே..
சிவனேமகன் சிரமோங்கிட
தருவாய்வரம் நன்றே...
 
அவரோகணம் இனியாவிலும்
ஆரோகணம் ஆகும்
சிவனேயெனுள் வருவானெனில் 
தீராவினை தீரும்!
 
தவறானவை சரியாகிடத்
தவமாய்தவம் செய்யும்
சிவனேயெனைத் தெளிவாக்கிட 
தமிழாளுமை தாரும்!
 
அவமானமும் அநியாயமும்
அணுகாதினி என்றே..
சிவனேசனாய் உருவானயென் 
திறம்கூட்டுவாய் இன்றே..
 
✍️செ. இராசா

29/04/2023

பறையும் எதிர்ப்பும்




என்னதான் நம் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி #பறை என்று பறை சாற்றினாலும், அனைத்துத் தமிழ் கலாச்சார நிகழ்வுகளிலும் அதைத் தொடர்ந்து வாசித்தாலும் இன்னும் பறைமேல் உள்ள எதிர்மறைக் கருத்துகள் மறைந்தபாடில்லை என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம் உறவுகளே....

தற்சமயம் #பறையை சாவுக்கு வாசிப்பதில்லை என்றே சபதம் எடுத்துத்தான் அனைவரிடத்திலும் சொல்லிக் கொடுக்கின்றார்கள் என்றாலும் அக்கருவியையும் அந்த இசையையும் தவறாகக் கருதும் மனப்போக்கு இன்னும் இருப்பதை மாற்றும் விதமாகத்தான் நான் அதைப் முடிந்தவரை பயன்படுத்த முயல்கிறேன் உறவுகளே....

#தப்பு #கொட்டு என்று எதிர்மறைச் சொற்களால் அழைக்கப்படும் இப்பறையானது மாட்டுத்தோலால் செய்யப்பட்டுள்ளது என்று வாதம் வைக்கும் அன்புச் சகோதரர்களே, மத்தளம், மிருதங்கம், தபேலா......எல்லாம் மனிதரின் தோலிலா செய்யப்படுகிறது? அதுவும் மாட்டுத்தோலில்தான் செய்யப்படுகிறது. பிறகு அவைகள்மட்டும் எப்படி கோவிலுக்குள் செல்கிறது?! (யோசியுங்கள்)

அட... எனக்கு நேற்று ஒரு நண்பர் நரம்புக் கருவி பற்றி பாடம் எடுக்கிறார் பாருங்கள்.... அப்பப்பா வியந்து போனேன் போங்க. அதெல்லாம் ஏன்?...பறையைத் தூக்கி வைத்துவிட்டு அதைப்போய் படிக்கவாம். உறவுகளில்கூட சிலர் இதை இன்னும் அமங்கலக் கருவியாகப் பார்ப்பதையும் அறிவேன். ஆகா.... இதெல்லாம் எப்படி இவ்வளவு ஆழமாகப் பதிந்தது?!!

ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்வைப் பகிர்கிறேன் உறவுகளே... கத்தாரில் ஓர் தமிழ் நிகழ்வின்போது பறை வாசித்துக் கொண்டிருந்தார்கள்‌. அச்சமயம் ஊரில் இருந்துவந்த ஒரு பையனை அந்நிகழ்விற்கு அழைத்துச் சென்றிருந்தேன். பறையிசை கேட்ட அந்த நிமிடமே அவன் உள்ளே வரத்தயங்கினான். என்னவென்று விசாரித்தபோது, அது என்னவோ ஒரு அருவருப்பாக உள்ளதென்றான். புரிகிறதா?!..

ஆதித்தமிழன் வாசித்த பறையை ஒரு சாதியக் கருவியாக மாற்றியதால் ஏற்பட்ட விளைவும் அதன் தாக்கமும் இன்னமும் மாறவில்லை என்பதை நாம் எப்போது உணரப்போகின்றோம்?!

நான் பறையிசை பற்றி எழுதிய ஓர் பாடலில் பறையின் வகைகளை இப்படி அடுக்கியிருப்பேன்...

குறிஞ்சிப்பறை முல்லைப்பறை
மருதப்பறை நெய்தல்பறை பாலைப்பறை
அரிப்பறை ஆறெறிப்பறை
வெற்றிப்பறை வெறியாட்டுப்பறை
வெருப்பறை வெட்டியான்பறை
குரும்பறை குறவைப்பறை
கோட்பறை கொடுகொட்டிப்பறை
சாப்பறை சாக்காட்டுப்பறை
தலைப்பறை தமுக்குப்பறை
தொண்டகப்பறை சூசிகப்பறை
பம்பைப்பறை பன்றிப்பறை

திடும் திண்டிமம் தண்ணம் தம்பட்டம்
தக்கை தப்பட்டை திமிலை படலை
முரசம் நசாளம் பண்டார மேளம்
தக்களி மத்தளி கரடிகை தாளம் காகளம் வீராணம்‌........

இத்தனை வகைப் பறைகள் ஏன் வாசித்தனர் என்று தெரியுமா?!... அதற்குப் பின்னணியில் உள்ள ஜீவகாருண்யம்/ இசை ரகசியங்கள்/ மருத்துவ குறிப்புகளைப் படித்துப் பாருங்கள். பிறகு சொல்லுங்கள்....நாம் இழந்த பறையிசையை இன்னும் ஒதுக்கி வைக்க வேண்டுமா இல்லை ஒவ்வொரு வீட்டிலும் வைத்துப் போற்ற வேண்டுமா என்று.....

இப்படிக்கு,

✍️செ. இராசா

28/04/2023

இரவை இரவிக் கலவி செய்ய

 


இரவை இரவிக் கலவி செய்ய
ஒளியின் வெள்ளோடை ஓடிவர
காகங்கள் எல்லாம் கானம்பாட
குயில்களும் கூடித் தாளம் போட
வரிசையாய் மரங்கள் மலர்தூவ
விழுந்த மலர்கள் விரிப்பாக...
சாலையில் நடந்துபார்
சொர்க்கம் உன் காலடியில்...
 
✍️செ. இராசா

26/04/2023

மைனரு வேட்டிகட்டி

 


மைனரு வேட்டிகட்டி
........மச்சிநீ வந்தீனா
பைனலு மேட்சாட்டம்
.........பத்திக்கும்- டைனமைட்டா
அத்தனைப் பொண்ணுகளும்
.........ஆர்ப்பாட்டம் செய்யுதுன்னா
எத்தனைப் பேருனக்(கு)?
..........இங்கு!
 
✍️செ. இராசா

24/04/2023

குளு குளு ஏசி கூலிங் பீரு ஓசி

 


 #பல்லவி
குளு குளு ஏசி
கூலிங் பீரு ஓசி
இங்கே வந்தா....எல்லாமே ஈஸி..
அடி தூளு ஹாட்டு
அல்ட்ரா மாடர்ன் டேஸ்டு
கொஞ்சம் வந்தா...போடலாம் டான்சு..

#சரணம்
வொர்க்கிங் ஹவர்ஸ் நீண்டதால செம ஜாலி..
வைஃபுக்கிட்ட சொல்லிடலாம் ஐயம் இன் ஜோலி...
ட்வல் ஹவர்ஸும் பத்தலைன்னா இன்னும் கூட்டு...
ஒன்டே டெஸ்டு மேட்சைப்போல வேணும் டேஸ்டு....

போரடிச்சா வந்திடலாம் மேரேஜ் ஹாலு
போக வேணாம் மாமா இனி ஈஸிஆரு

✍️செ. இராசா

23/04/2023

நானும்பல புத்தகங்கள் ........எழுதி யுள்ளேங்க

 


நானும்பல புத்தகங்கள்
........எழுதி யுள்ளேங்க
நாளைக்கென நம்மிடத்தில்
.........என்ன சொல்லுங்க?!
 
நாணும்படி ஏதுமின்றி
...........செஞ்சு வச்சேங்க!
வாழும்வரை நல்லதையே
...........செய்ய வேணுங்க!
 
காணும்பல காட்சியையே
...........கவிதை செஞ்சேங்க!
காலம்பல நின்றிடவே
...........கோர்த்து வச்சேங்க!
 
வேணும்பல வேணுமென
...........கேட்ப தாருங்க?
மின்னும்வரை செய்வதென்ற
...........முயற்சி தானுங்க!
 
✍️செ. இராசா 
 

22/04/2023

வந்தவுயிர் அத்தனையும்

 

வந்தவுயிர் அத்தனையும்
....... வாழ்ந்துவிட்டுப் போகும்முன்
நொந்துவுயிர் வாடிடவா
.......நோகின்றோம்- சிந்திப்பீர்
புன்னகையே காட்டாமல்
.......போகுமுயிர் போய்ச்சேரும்
என்றுவந்தால் என்ன
......இறப்பு?
 
✍️செ. இராசா

எட்டு மணிநேரம் என்பதே ரி




கூட்டணிக் கட்சிகளே கூப்பாடு போடுகையில்
ஏட்டிக்குப் போட்டியாய் ஏன்?!
(1)

உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் சட்டம்
இழைக்கும் விளைவென்ன எண்ணு?
(2)

விடியல் விடியலென வேண்டிவந்த பின்னர்
முடிவைத் தொடங்குவதா மாண்பு?
(3)

நேரத்தைக் கூட்ட நிறைவேற்றும் தீர்மானம்
யாருக்காய் இங்கே இயம்பு?!
(4)

திராவிட மாடலென செப்பியதன் பின்னர்
திராவகம் வீசலாமா செப்பு?!
(5)

உணவகத்தில் உள்ளோர் உழைக்கின்ற நேரம்
மணியெட்டைத் தாண்டும் தினம்
(6)

அங்காடி ஊழியர்கள் அத்தனை பேருக்கும்
எங்கய்யா எட்டுமணி இங்கு?
(7)

ஏற்கனவே நம்நாட்டில் எத்தனையோ மீறல்கள்...
ஏற்றாதீர் பாவம் இணைந்து!
(8)

அடித்துப் பிழைப்போரை ஆதரிப்பீர் என்றால்
வெடிக்கும் விளைவு விரைந்து!
(9)

உழைப்போர் சிலைவைத்த உன்னத நாட்டில்
பிழைப்போர் நிலையெண்ணிப் பேசு!
(10)

✍️செ. இராசா

21/04/2023

 ஊக்கமது கைவிடேல் என்றார் ஔவை
ஆம்...
ஊக்க-மது கைவிடேன் என்கிறார் குடிமகன்

இந்தியனை வெல்லயினி

 


முந்திமுந்திச் சென்றவனை
......மூக்கிலே குத்திய
இந்தியனை வெல்லயினி
......யாருள்ளார்?!- பந்தயத்தில்
வல்லரசாம் வல்லரசு
......வாய்கிழியப் பேசாதீர்!
வல்லசெயல் பேர்-அரசே
.....நாம்!
 
✍️செ. இராசா