22/04/2017

குரு வணக்கம்



அருள்பசியால் இரை(ற)தேடி
அலைந்தேதான் திரிந்தேனே!
அருள்மழையே பொழிந்தாலும்
அடியேன்நான் நனையலையே!

வந்தவழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்னேனே!
போனயிடம் அத்தனையும்
பாவிப்பசி தீரலையே!

முக்திவழி காட்டிடவே
முத்து ஐயா வந்தாரே!
அருட்தந்தை கருத்துக்களை
அமுதம்போல தந்தாரே!

எம்குருவின் ஆசியாலே
என்பிணிகள் ஓடியதே!
அகத்தவத்தின் அற்புதத்தால்
அருள்பசியும் அடங்கியதே!

ஆதியையாம் அடைந்திடவே
ஆனதவம் சொன்னாரே!
விழிப்புநிலை சாவியாலே
விதிப்பூட்டைத் திறந்தாரே!

துயர்துடைத்த எம்குருவை
துரியத்திலே வாழ்த்துகிறேன்!
மனமாலே மொழியாலே
மகிழ்ந்ததேநான் வணங்குகிறேன்!

வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன் ஐயா

18/04/2017

வள்ளுவம் போற்றுவோம்







அறத்தை உயிராய்க் காத்து
பொருளை உடலுக்காய் சேர்த்து
இன்பத்தை மனதினில் கொள்வோம்

கடவுளைப் பாயிரம் பாடி
இல்லறம் நல்லறம் செய்து
துறவறம் பொதுநலம் பயில்வோம்

மூன்று பால்களும் பயின்றால்
நான்காம் பாலாம் வீட்டை
ஐங்கரன் அருளால் பெறலாம்

ஊழ்வினை ஆற்றும் செயலால்
உயர்வும் தாழ்வும் வரலாம்
உண்மை தவறிட வேண்டாம்

நட்பியல் அறிந்தோர் வாழ்வில்
நாளும் இன்பம் அடைவார்
நட்பால் உயர்வைப் பெறுவார்

கர்மம் செய்திடும் முன்னே
காலம் கணித்திட வேண்டும்
கடமை ஆற்றிட வேண்டும்

அரசர் அமைச்சர் எல்லாம்
அறத்தை அரணாய் காக்க
அளித்த குறள்கள் பயில்வீர்

கல்லாமை இருளை அகற்றி
கல்வியை அறிவாய் மாற்றி
அன்பை அருளாய் ஆக்குவோம்

ஊடல் கூடல் காமம்
ஊறுகள் களைத்திடும் பாடம்
உயர்மறை திருக்குறள் ஒதும்

குறளால் தமிழுக்குப் பெருமை
தமிழால் தமிழர்க்குப் பெருமை
தமிழரால் தரணிக்கேப் பெருமை

வாழ்க தமிழ்!
வாழ்க குறள்!
வாழ்க வள்ளுவன்!

மகளே செல்ல மலரே




மகளே செல்ல மலரே!
மாரில் தவழும் மயிலே!
மழலை கொஞ்சம் மொழியால்
மனதில் மின்னும் நிலவே!

வித்தில் விளைந்த முத்தே!
விருப்பில் பிறந்த சொத்தே!
விவேகம் கலந்த குறும்பால்
விடியல் கொள்ளுது மனமே!

கவிதா கருவழி உறவே!
கடவுள் அருள்வழி வரவே!
கதைக்கும் அழகைக் கண்டால்
களிப்பில் கவிதை வருதே!

தங்கை இல்லா நிலையே!
தந்தது எம்முள் குறையே!
தங்கை மகளாய் வந்ததால்
தந்தையும் தமையனும் ஒன்றே!

அப்பா என்ற சொல்லே!
அனுதினம் அமுதைத் தருதே!
அணுவின் ஒலியைக் கேட்டால்
அகிலமே மறந்து விடுமே!

28/03/2017

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா



வாழ்க்கைப் பயணத்திலே
தன்னலத்தை மறந்தவனே-நீ
வாழ்க்கை அனைத்தையுமே
அர்ப்பணிப்பில் கரைத்தவனே!

வாடியவர் முகம்பார்த்தால்
வதங்குமடா உம்மனமே-அவர்
வாசல்வரை ஓடிவந்து
உதவுமடா உம்கரமே!

சிவாவென்ற நாமத்தினை
சுற்றத்தினர் அழைத்தவுடன்
சிலநொடியில் மின்னலென
சீவனாக நிற்பவனே!

சிந்தையிலே தெய்வமில்லா
நாத்திகத்தை கொண்டாலும்- நீ
சிறப்பான குணத்தாலே
ஆத்திகனை வென்றவனே!

இடைவேளை இல்லாமல்
எக்கணமும் உழைப்பவனே-நீ
இளைப்பாறும் வேலையிலும்
பிறர்நலனை நினைப்பவனே!

இடிபோன்ற துயரங்களை
புன்னகையால் வெல்பவனே! நீ
இறுமாப்பு கொள்ளாத
இதயத்தால் சிரிப்பவனே!

கடுகளவும் சேர்க்காதும்
மலையளவு அளிப்பதாலே- நீ
கர்மயோகி வள்ளலாகி
கர்ணனையும் வென்றவனே!

வாழ்க நண்பா...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா

இரண்டு இதிகாசங்கள்



பாசமும் நேசமும் பற்றாய் மாறினால்
பாவமும் நாசமும் பூமியில் நிச்சயம்!
பாரதம் போற்றிய காவியம் இரண்டிலும்
பாதகப் பற்றினில் வீழ்ந்தவர் பாரீர்! 
 


தங்கையின் கண்கள் இருண்டிடக் கண்டதும்
தர்மத்தை கிள்ளி அழித்திட எண்ணியே!
தம்கரம் இரண்டிலும் பகடை உருட்டியே!
தம்சதி வீழ்ச்சியால் மாண்டவன் சகுனியே!

தங்கையின் முகத்தில் குருதியைக் கண்டதும்
தர்மத்தை மறந்து நாசத்தை எண்ணியே!
தசரதன் குலத்திடம் வீண்பகை
க் கொண்டதால்
தன்தலை பத்தும் இழந்தவன் இராவணன்!

சாத்திரம் கற்றவர் குலகுரு ஆனவர்!
கோத்திரப் பற்றினில் கர்ணனை தவிர்த்தவர்!
மித்திர துரோகத்தை ஐவரால் வென்றவர்!
புத்திரப் பற்றால் தோற்றவர் துரோணரே!

கலைமகள் அழகை வடிவமாய் கொண்டவள்
கருவில் வந்தவன் அரசாள வேண்டியே!
கள்நெஞ்சுக் கூனியின் வஞ்சகம் கேட்டவள்
கணவனைக் கொன்றவள் பாதகி கைகேயி!

பற்றினில் வீழ்ந்தவர் நால்வரைச் சொன்னேனே?!
பற்றினால் வென்றவர் யாரென்று சொல்வேனோ?!
பற்றினை விட்டவர் உத்தமர் ஆவார்!
பற்றினை கொண்டவர் பாழாய் போவார்!

ஒவ்வொரு கணங்களிலும் இன்பம்/ சுகமான நினைவுகள்


பிஞ்சுக் குழந்தையின் மெய்களிலே
கொஞ்சிப் பழகிடும் கணங்களிலே
நெஞ்சில் துளிர்த்திடும் இன்பங்களை
விஞ்சும் தருணங்கள் வேறுண்டோ?!

வெற்றிப் படிகளை மிதிக்கையிலே
தூற்றிய பலரது வாய்களிலே
போற்றிடும் வார்த்தைகள் வருங்கணமே
காற்றினில் வலிகள் பறக்காதோ?!

இசையை இரவில் கேட்கையிலே
இளமை பழமை நினைவினிலே
இதயம் கடந்து போகையிலே
இனிமை இதுவெனத் தோன்றாதோ?!

நண்பனை மீண்டும் பார்க்கையிலே
நட்பில் கலந்து லயிக்கையிலே
நதிநீர் வெள்ளம் போல்மனதும்
நளினம் ஆடியே ஓடாதோ?!

காதலி கரங்களில் விழுகையிலே
காதல் கடலில் குளிக்கையிலே
காலையும் மாலையும் தெரியாமல்
காட்சிகள் கண்களில் மறையாதோ?!


12/03/2017

பொருள் ஈட்டும் வழி:




பொருளை உலகில் தேடித்தான்
பொழுதும் நாளும் தேய்கிறது....

பணமும் காசும் சேர்த்திடவே
பயணம் தினமும் தொடர்கிறது....

களவும் பொய்யும் தவிர்த்தோர்க்கும்
கடனும் வறுமையும் வதைக்கிறது...

உயர்வின் உச்சியை அடைந்திடவே
உழைக்கா வர்க்கமும் துடிக்கிறது...

உண்மை நேர்மை கொண்டவர்க்கே
உலகில் சோதனை தொடர்கிறது...

உயர்வும் தாழ்வும் வந்தாலும்
உள்ளம் வளைந்திடக் கூடாது...

தேவைகள் நம்மில் குறையாமல்
தேடிடும் இன்பம் கிடைக்காது...

தேடிய யாவும் கிடைத்தாலும்
தெய்வம் மறந்தால் நிலைக்காது....

தர்மத்தின் வழியில் வாழ்ந்தேநாம்
தரணியில் பொருளை ஈட்டிடுவோம்....

28/02/2017



அம்மாச்சி என்றாலே! என்
அகக்காட்சி விரியுதம்மா!
அவர்காட்சி தெரியுதம்மா!
அன்புமாட்சி மலருதம்மா!

நீர்வீழ்ச்சி போல்அன்பை
நேர்பாய்ச்சி எம்நெஞ்சில்
அரசாட்சி புரிகின்றார்!
அதன்சாட்சி என்னெஞ்சே!

இருள்காட்சி வந்துவிட்டால்
இடர்வீழ்ச்சி ஆகவேண்டி
அம்மாச்சி குரல்கேட்பேன்
அகமகிழ்ச்சி ஆகிடுவேன்

மனத்தளர்ச்சி போகவச்ச
மதிகுளிர்ச்சி ஆகவச்ச
இறைஆச்சி இவர்தான்னு!
மனசாட்சி பேசுதம்மா!

27/02/2017

எண்ணுக்கும் இறைக்கும் எல்லையில்லை

மெய்வழி அறிதல் ஞானமாகும்
மெய்யாய் உணர்தல் பக்தியாகும்
மெய்யை சரியாய் உணராதோர்
மெய்யை பொய்யென உரைப்பாரே!

பாதை தெளிவாய்த் தெரிந்தாலும்
படித்தது நன்றாய் புரிந்தாலும்
பயணம் தன்னுள் தொடங்காமல்
பக்தியை உணர்ந்தவர் உள்ளனரோ?

ஆயிரம் விடயங்கள் அறிந்தாலும்
ஆயிரம் ஆலயம் சென்றாலும்
ஆண்டவன் அருளை அடையாமல்
ஆதியும் அந்தமும் விளங்கிடுமோ?

அறிவியல் அடிப்படை கணிதமாகும்
அவற்றின் அடிப்படை எண்களாகும்
இறுதிஎண் என்பதே இல்லாமல்
இறைவனும் எண்போல் முடிவிலியே!!


✍️செ. இராசமாணிக்கம்

23/02/2017

கள்ளும் சினமும்


கள்ளும் சினமும் குணத்தால் ஒன்றே!
சொல்லும் நாக்கும் பிரளும் நன்றே!
வெறியும் வேகமும் சங்கமம் கொண்டே!
ஏறிடும் இரண்டிலும் போதை ஒன்றே!

கண்ணும் நெஞ்சும் பார்வை மங்கும்!
கல்வியும் அறிவும் காற்றில் பறக்கும்!
காலும் கையும் நடனம் ஆடும்!
காதலும் தேனும் கசந்தே போகும்!

மூக்கும் முழியும் கோணல் ஆகும்!
மூளையும் செல்லும் முடிவை நோக்கும்!
குணமும் குலமும் குறைவால் மங்கும்!
குருதியில் நஞ்சும் குன்றாய்ச் சேரும்!

நாயும் பேயும் நாவினில் வாழும்!
நோயும் பிணியும் உறவாய் கூடும்!
நட்பும் தமரும் விலகிட நேரும்!
நாடியும் நரம்பும் தளர்ந்தே போகும்!

கள்ளும் சினமும் நீக்கிட வேண்டும்!
எள்ளும் உலகம் வென்றிட வேண்டும்!
அன்பும் அறமும் போற்றிட வேண்டும்!
அறிவும் தெளிவும் அடைந்திட வேண்டும்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!