31/10/2025

அறம் வலியுறுத்தல்

 

#அறம்_வலியுறுத்தல்

1. #நூல்கள்
போனது போக
......புவியினில் மிஞ்சியதே
ஞானத் தருவென்றால்
........நன்குணர்வீர்- மோனத்தில்
நல்வழி காட்டி
.......நலமுடன் சென்றிட
நல்லற நூல்பயின்றால்
.......நன்று!

2. #திருக்குறள்
அத்தனை நூல்களையும்
........ஆய்ந்தறிந்து கற்றுணர
பத்துமோ ஓராயுள்?
.......பத்தாதே- சத்தியமாய்
உள்ளத்தை மாற்றி
.......உலகத்தை உய்விக்க
வள்ளுவநூல் ஒன்றே
........வழி

3. #கண்ணகி
மன்னவன் தீர்ப்பால்
........மணவாளன் மாய்ந்தசெய்தி
தன்னை வதைத்தும்
........தளராமல் - நின்றொருத்தி
மன்றத்தில் போராடி
.........வாதாடி வென்றதுவே
மண்ணில் அறம்காத்த
.........மாண்பு

4. #கண்ணன்
மாமனாய்த் தூதுசென்று
.......மைத்துனனாய்க் கூடநின்று
கோமகனாய் நாடாண்ட
.......கோபாலன்- மாமதியோன்
பெண்ணின் துகிலுரித்த
........பேய்களை சாய்த்தன்று
மண்ணறம் காத்ததவன்
.........மாண்பு!

5. #கர்ணன்
மானத்தைக் காத்தவனின்
......மானத்தைக் காத்திட
ஈனரெனக் கண்டும்
.....இணங்கினான்- ஞானவான்
கர்ணனின் அச்செய்கைக்
.....கட்டாயம் தப்பில்லை
அர்ப்பணிப்பில் செய்யும்
.....அறம்?

6. #விகர்ணன்
அண்ணன்கள் செய்கை
...அறமில்லை என்றொருவன்
உண்மையைச் சொன்னான்
....ஓங்கியன்று- மண்டபத்தில்
வேகமாய்ச் சொன்ன
.....விகர்ணனின் செய்கையும்
ஆகியது நல்ல அறம்!

7. #கும்பகர்ணன்
தப்பென்று சுட்டியும்
.....தன்குற்றம் காணானின்
தப்புக்காய்த் தானும்
....தயாராகி- ஒப்பியே
அன்னமிட்ட அண்ணனுக்காய்
...அன்றுகும்ப கர்ணனும்
சென்றறம் காத்துநின்றான்
....செத்து!

8. #தர்மன்
எந்த இடரிலும்
.......எள்ளளவும் மாறாத
விந்தை மனிதரின்
........நேர்மையை- சிந்தித்தால்
தர்மனைப்போல் இல்லைத்
........தரணியிலே வேறொருவர்
தர்மனே தர்மத்தின்
.........தாய்!

9. #அரவான்
தன்னுயிர் தந்தேனும்
.....தாய்மண்ணைக் காப்பாற்றி
தன்னறம் காப்போரின்
.....சால்பறிவோம்- என்றாலும்
தன்னைப் பலியிட
......தானாக முன்வந்தோன்
அன்பின் அரவானே
.....அன்று!

10. #அறம்வலியுறுத்தல்
அறத்தை வலியுறுத்தும்
......அத்தனையும் உண்மை
மறவாமல் பின்பற்றி
.......வாழ்வோம்- சிறப்பாய்
அகத்தில் அழுக்கின்றி
.......ஆனவரை ஈந்தால்
சகமே உறவாகும்
.........சார்ந்து!

Dr. ஐயப்பன் MPT, அப்பல்லோ

 


அனைவருக்கும் வணக்கம் உறவுகளே!

எனக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு மிகப்பெரிய விபத்தில் என் நெஞ்சாங்கூட்டில் முன்னும் பின்னும் உள்ள சில விலா எலும்புகளும், மேலே உள்ள பெரிய எலும்பும் உடைந்துவிட்டது வலதுகை மூட்டும் இறங்கிவிட்டது. டைட்டானியம் தகடுவைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கைகளைத் தூக்க முடியாமலும் முதுகையே தூக்க முடியாமலும் மிகவும் சிரமப்பட்டேன்.

ஒரு வழியாக மருத்துவர்களின் வழி காட்டுதலில் சிகிச்சை செய்த இடம் சரியானாலும் கைகளைத் தூக்க முடியுமா என்கிற சந்தேகம் மட்டும் எனக்குள் இருந்தது. ஆனால் என்றைக்கு Dr. ஐயப்பன் MPT, அப்பல்லோ அவர்களைப் பார்த்தேனோ அவரளித்த பிசியோவில் ஐந்தே நாட்களில் ஏறக்குறைய அனைத்தையுமே சரிசெய்து என் பழைய வாழ்க்கையை மீட்டி விட்டார்கள். உண்மையில் பிசியோ தெரபி செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் தேவையென்ன என்பதை முழுவதுமாக உணர வைத்து விட்டார்கள். அவர்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது அவர்களின் சேவைக்கு ஈடாகாதுதான். இருப்பினும் யாம் என்ன செய்துவிடமுடியும்?!!..ஏதோ என்னால் முடிந்த ஒன்று இந்தப் பதிவு மட்டுமே என்று கூறி அவர்களின் சேவை மேலும் மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனையும் அவர்களுக்கு நிகரான மருத்துவர்களையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்!

அன்புடன்,

செ. இராசமாணிக்கம்.

நான் யார் என்பதைத் தெரிந்து கொண்டு ஆசிரியர் பெருமாள் நல்லமுத்து எழுதிய வேலி மற்றும் வரம் என்கிற நூல்களை எமக்கு மருத்துவர் ஐயப்பன் அவர்கள் பரிசாக வழங்கினார்கள் என்கிற கூடுதல் தகவலையும் வழங்கி மகிழ்கிறேன்.

(அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்)

29/10/2025

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகளே

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகளே
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அனுஸ்ரீ அனுஸ்ரீ அனுஸ்ரீ- என்
அன்பு மகளே அனுஸ்ரீ.....
அனுஸ்ரீ அனுஸ்ரீ அனுஸ்ரீ- என்
அணுவிலும் நீயே அனுஸ்ரீ
என்னருமைக் கவிமுகிலின்
இரண்டாம் மழையமுதே...
நின்னன்புச் சாரலிலே
இதயமும் சிலிர்க்குதம்மா!!!
யார்செய்த புண்ணியமோ?!!
இறையருள் புரிந்ததம்மா!
கோபத்தைக் கழித்து
கோபுரத்தைத் தொட்டிடு!
ஆபத்தை வகுத்து
ஆர்வத்தை வளர்த்திடு!
ஊக்கத்தைக் கூட்டி
ஏக்கத்தை களைந்திடு!
ஆக்கத்தைப் பெருக்கி
நோக்கத்தை அடைந்திடு!
புறப்படு மகளே புறப்படு
புதுமை படைத்திட புறப்படு!
துணிந்திடு மகளே துணிந்திடு
கடவுளின் துணையுடன் துணிந்திடு!
அனுஸ்ரீ அனுஸ்ரீ அனுஸ்ரீ- என்
அன்பு மகளே அனுஸ்ரீ.....
அனுஸ்ரீ அனுஸ்ரீ அனுஸ்ரீ- என்
அணுவிலும் நீயே அனுஸ்ரீ
✍️செ. இராசா

வாலி



வார்த்தைகளைத் தட்டித் தட்டி
வார்த்தெடுத்த சிற்பி!
வரிகளைக் கட்டிக் கட்டி
வரிகட்டிய^ பாவலன்!

இராமானுஜனைப் பாடிய
இரங்கராஜன்!

இரண்டு
இராமச்சந்திரன்களையும்*
எழுத்தால் உயர்த்திய
அவதார புருஷன்!

சிவாஜிக்கும் எழுதி
சிவாவுக்கும்** எழுதிய
வாலிபப் புலவன்!

மயக்கமா கலக்கமாவால்
மயக்கம் தெளிந்ததை
அரிச்சந்திரனாய் விளம்பிய
அரி பக்தன்!

பாரத காவியத்தை
பாண்டவர் பூமியாக்கி
பாமரனையும்
படிக்க வைத்தப் பண்டிதன்!

எந்த ஏகலைவனிடமும்
விரல் காணிக்கை கேட்காத
ஆச்சாரியன்!

திருவரங்கம் அருளிய
.....கவியரங்கம்!
திருக்குவளை விரும்பிய
.....தமிழ்ப்பலகை!

போலச் செய்தப்
போலிகள் முன்னே; பிறர்
வாழச் செய்த கவிஞன்
வாலி!

வாலி- நீர்
வாழி!

✍️செ. இராசா
^Tax
*MGR & ராமர்
**மிர்ச்சி சிவா