28/02/2024

நாம் படித்திடாதவோர்

 

நாம் படித்திடாதவோர்
......நூல் படைத்த ஈசனின்
நான் படைப்புப் பாத்திரம்
........நானும் நீயும் அவனுமே...
 
தான் நடிக்குமாசையில்
.......தான் படைத்த ஒன்றினில்
நாம் நடிக்கும் வேளையில்
.......தானும் தோன்றக் காணுமே...
 
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
 
✍️செ. இராசா

26/02/2024

தத்தாக்காரம் போட்டுத்தானே பாடுறேன்-

தத்தாக்காரம் போட்டுத்தானே பாடுறேன்- தரிகிட
தாளத்தோட சேர்ந்துநானும் ஆடுறேன்!
பித்தாகோரஸ் தேற்றமெல்லாம் போடுறேன்- ஜெயிச்சிட
ஃபிட்டாநல்ல கம்பெனியத் தேடுறேன்!

என்ன வேணும் உனக்கு - இங்கே
எல்லா சரக்கும் இருக்கு (2)

கானா வேணுமா;? ரொம்ப
ஃபீலா வேணுமா?
பக்தி வேணுமா?; இல்லை
குத்து வேணுமா?
ராப் வேணுமா?; இல்லை
ஃபோக் வேணுமா?

ஆல்பம் செய்யவா?: இல்லை
ஆளை மடக்கவா?
ஃபிலிமுக்காவா? வெறும்
ஃபிலிமு காட்டவா?
கட்சிப் பார்ட்டியா?; இல்லை
கவர்மென்ட் பார்ட்டியா?

என்ன வேணும் உனக்கு - இங்கே
எல்லா சரக்கும் இருக்கு (2)

✍️செ. இராசா

25/02/2024

பஞ்சு மிட்டாய் டேஞ்சர் ஆச்சு

 


பஞ்சு மிட்டாய் டேஞ்சர் ஆச்சு
சாயமிப்போ வெளுத்துப்போச்சு
எய்ட்டி நைண்டி கிட்சுங்கெல்லாம்
கொடுத்து வச்ச மகராசெங்க ...

என்ன சொல்லி என்ன ஆக
ஆஹா...
கெமிக்கல்ஸ் எல்லாம் கூடிப் போக
ஓஹோ...

ஜெல்லி மிட்டாய் ஸ்நாக்சுக்கெல்லாம்
தடைங்க போட்டா நல்லாருக்கும்

அப்டி போடு...

✍️செ. இராசா

கடைசி

இதுதான் கடைசி என
எத்தனையோ கடைசிகள்
கடந்து போய்விட்டன..

அந்தக் கடைசி கடைசிதான் இன்னும் பிடிபடவேயில்லை

23/02/2024

பகுதிநேரம் பாடிடவா

 

பகுதிநேரம் பாடிடவா
.....பைந்தமிழை ஏற்றுகின்றேன்!
தொகுதியேதும் சேர்த்திடவா
.....செந்தமிழைத் தீட்டுகின்றேன்!
விகுதியாக வீற்றிடவா
.....வீறுகொண்டு தேடுகின்றேன்!
தகுதியாக மாற்றிடவே
.....தாயவளை வேண்டுகின்றேன்!
 
✍️செ. இராசா

21/02/2024

கெஞ்சுனாக்கக் கேட்டுக்க

கெஞ்சுனாக்கக் கேட்டுக்க
மிஞ்சுனாக்க மீறிக்க
அஞ்சுறதுக் கஞ்சிக்க
அஞ்சாமையக் கத்துக்க

ஏறிவந்தா எகிறிக்க
இறங்கிவந்தா இரங்கிக்க
சீறிவந்தாத் திமிறிக்க
சிரிச்சுவந்தா சிரிச்சுக்க

இணங்கிவந்தா ஏத்துக்க
வணங்கிவந்தா வணங்கிக்க
பணிஞ்சுவந்தா பார்த்துக்க
துணிஞ்சுவந்தா துணிஞ்சுக்க

ஆடிவந்தா ஆடிக்க
பாடிவந்தா பாடிக்க
ஓடிவந்தா அணைச்சுக்க
ஓடவச்சா நினைச்சுக்க

தோதுவந்தா திரும்பிக்க
சூதுவந்தா ஒதுங்கிக்க
சோதனையப் பழகிக்க
சாதனையப் படைச்சுக்க

✍️செ. இராசா

18/02/2024

முதுமை

 #முதுமை

வயதானால் அழகில்லையென்று
யார் சொன்னது?!

துளிர்க்கும் தளிர் அழகென்றால்
உதிரும் சருகு அழகில்லையா?!

நகைக்கும் மழலை அழகென்றால்
நரைக்கும் முதுமை அழகில்லையா?!

இங்கே...
முன்னுரையின் முகவரி
சுருக்கமிகு அழகென்றால்
முடிவுரையின் முக வரி
சுறுக்கமிகு அழகில்லையா?!

ஆமாம்...
இளமையெல்லாம் எழிலா என்ன?
எனில்;
வண்ணத்துப்பூச்சியின் எழிலென்பது
இளங்கூட்டுப்புழுவில் இல்லைதானே!

அட..
முதுமையெல்லாம் கசக்குமா என்ன?
எனில்;
பழுத்த பழங்களின் ருசியென்பது
பிஞ்சுக் காய்களில் இல்லைதானே...

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..

இன்றைய இளமை என்பது
நாளைய முதுமையே...
இன்றைய முதுமை என்பது
நேற்றைய இளமையே...

உண்மையில்....
இளமை அழகுதான்
மறுக்கவில்லை...
ஆனால் பேரழகென்னவோ
காமம் கழிந்த முதுமையில்தானே?!

✍️செ. இராசா

பச்சைத் தமிழிலில்லைப் பாட்டு!

 

சுத்தத் தமிழ்நீக்கி
.....சூப்பராய் வேண்டுமென
எத்தனையோ பேரிங்கே
......ஏவுகிறார்- சத்தியமாய்க்
கொச்சைத் தமிழையே
......கொண்டாடும் காலத்தில்
பச்சைத் தமிழிலில்லைப்
.....பாட்டு!
 
✍️செ. இராசா

17/02/2024

பார்வை மோதும் நேரம் உயிர்களில்

 #Montage_Song

#பல்லவி
பார்வை மோதும் நேரம் உயிர்களில்
காதல் தீ வருமே...
ஜாடை காட்டி கூறும் விழிகளில்
மௌனக் கலவரமே...

இதுயென்ன புதிய உணர்விது
உடலெலாம் எரியுதே...
இதுயென்ன புதிய மொழியிது
கவியெலாம் பிறக்குதே..

நேரம் போகும் வேகம் அருகினில்
மின்னல் ஆகிறதே- அடி
நீளும் தூரம் நீண்டு போகையில்
இதயம் நிற்கிறதே.....(2)

#சரணம்-1 (பருவக்காதல்)

பூர்வ ஜென்ம காதலிதுவோ
ஒன்னும் புரியலையே
மேக்னட் கண்களில் இத்தனைபவரோ
சுண்டி இழுக்கிறதே

இதுயென்ன புதிய அனுபவம்
என்னையே மறக்குதே
இதுயென்ன இனிய மதுரசம்
நினைத்ததும் மயக்குதே

நேரம் போகும் வேகம் அருகினில்
மின்னல் ஆகிறதே...
நீளும் தூரம் நீண்டு போகையில்
இதயம் நிற்கிறதே...

#சரணம்-2 (இளமைக்காதல்)
நீயும் நானும் போடும் ஃபைட்டுகள்
இன்னும் தொடர்கிறதே..
ஆன போதிலும் நீள்கிற நைட்டுகள்
இன்னமும் இனிக்கிறதே..

இதுயென்றும் தொடரும் புதுசுகம்
இனிமையில் தொடரட்டும்...
இதுயென்றும் இனிக்கும் பலரசம்
தினமென்றும் கிடைக்கட்டும்

நேரம் போகும் வேகம் அருகினில்
மின்னல் ஆகிறதே...
நீளும் தூரம் நீண்டு போகையில்
இதயம் நிற்கிறதே...

#சரணம்-3 (முதிர்க்காதல்)
போதும் போதும் என்னும் சலிப்புகள்
இன்னும் போகலையே...
போகும் போதிலும் காதலின் உணர்வுகள்
இன்னும் தீரலையே...

முடிவின்றி தொடரும் கவியென
முதுமையும் மலரட்டும்...
அழகின்றி மறையும் பொழுதிலும்
அகமென்றும் அரும்பட்டும்...

நேரம் போகும் வேகம் அருகினில்
மின்னல் ஆகிறதே...
நீளும் தூரம் நீண்டு போகையில்
இதயம் நிற்கிறதே...

✍️செ. இராசா


16/02/2024

பொழைக்க ஒரு வழியுமில்லை

 


தொகையறா 

கேனப்பய ஊருக்குள்ள
கிறுக்குப்பய நாட்டாம..
ஊருபூராம் கொள்ளையடிச்சு
வாழுறானே மாட்டாம..
..வாழுறானே மாட்டாம..
 

பல்லவி
பொழைக்க ஒரு வழியுமில்லை
போக ஒரு இடமுமில்லை
விடியலின்னும் வரவில்லையே
அண்ணாச்சி
ஏறும் விலை குறையவில்லை
ஏழ்மை நிலை மறையவில்லை
மாறுமுன்னு சொன்னாங்களே என்னாச்சி

வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி!
மாறிமாறி ஆளுறாங்க நம்மல வச்சி!
 

சரணம்-1
பகுத்தறிவு வேணுமுன்னு பாடம் நடத்துறான்..
பார்ட்னரைத்தான் கோவிலுக்கு அனுப்பி வைக்கிறான்...
தாலியென்ன தாலியென்று கேலி செய்யுறான்..
தாலிகட்டித் தாரத்திடம் பல்லைக் காட்டுறான்..

சாதியற்ற சமத்துவந்தான் வேணு
மென்கிறான்..
சாதியென்ன பார்த்துதானே சீட்டை ஒதுக்குறான்...
டாஸ்மாக்க மூடனும்னு கோசம் போடுறான்...
நாங்கயெப்ப சொன்னமுன்னு வாயை மூடுறான்....

வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி!
மாறிமாறி ஆளுறாங்க நம்மல வச்சி!
 

சரணம்-
அனைவருமே சரிசமன்னு அழகாப் பேசுறான்..
அடுத்தடுத்த வாரிசுக்கே வாய்ப்பக் கொடுக்குறான்..
ஓட்டயெண்ணி மதவுணர்வைத் தூண்டப் பார்க்குறான்..
ஓனருபோல் நினைச்சிநம்மைக் கூறு போடுறான்..

ஒரேநாட்டு மக்களுன்னு ஓங்கிப் பேசுறான்..
உழைக்குமெங்கப் பாட்டாளிய ஒடுக்கப் பாரக்குறான்
கூட்டணிக்குக் கொள்கைகளை அடகு வைக்கிறான்...
குனிஞ்சுபோயி கால்பிடிச்சே நிமிர நினைக்கிறான்.‌

வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி!
மாறிமாறி ஆளுறாங்க நம்மல வச்சி!

✍️செ. இராசா