எரிகின்ற தீபத்தில் எண்ணெய் முடிந்தால்
திரியிலே பற்றித் திரியும் -எரியும்
அதுபோல் மனத்தில் அவரவர் எண்ணம்
எதுவோ அதுவரை இங்கு
14/11/2021
அவரவர் எண்ணம் எதுவோ
காத்திருக்கிறேன்
காகிதமும் இங்கே...
எழுதுகோலும் இங்கே....
கவி நீ எங்கே?!
......
காத்திருக்கிறேன்...
உன்னை எழுதப்போகும் கவிஞனாய்..
செ. இராசா
11/11/2021
சுயமி SELFIE வெண்பா
என்னய்யா பார்க்கிறீர்
......எப்போதும் உள்ளுக்குள்
என்னதான் பார்த்தாலும்
.......இப்படியா?!- என்னைக்
கரம்பிடித்த நாள்முதலாய்
.......கைமேலே தூக்கி
சிரம்காட்டி என்ன சிரிப்பு?!
#சுயமி_SELFIE_வெண்பா
செ. இராசா
10/11/2021
பிறந்ததன் காரணம் புரியவும் இல்லை
பிறந்ததன் காரணம் புரியவும் இல்லை!
இறந்தபின் யாதெனத் தெரியவும் இல்லை!
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையினில் தொல்லை!
மறப்பதும் துறப்பதும் அவரவர் எல்லை!
ஈருடல் இணைந்ததில் எத்தனை உயிர்கள்?
ஓருயிர் அணுவிலும் எத்தனை உயிர்கள்?
நீரிலும் நிலத்திலும் எத்தனை உயிர்கள்?
பேரண்டம் முழுவதும் எத்தனை உயிர்கள்?
எப்படி இப்படி எங்கிலும் வந்தோம்?
அப்படி எப்படி அனைவரும் அறியோம்!
முற்படி எப்படி முன்னரே கண்டோர்
சொற்படி நற்படி தொற்றிடப் பாரீர்!
சென்றவர் வந்ததாய் சேதியும் இல்லை
வந்தவர் நின்றிட வாய்ப்புகள் இல்லை
வந்தவர் போவது வாடிக்கை என்றால்
நொந்தவர் நோவது வேடிக்கை அன்றோ?!
செ. இராசா
09/11/2021
நிலம் பார்த்து விளைஞ்சா வித்து
நிலம் பார்த்து விளைஞ்சா வித்து
களம் பார்த்து வெடிச்சா கெத்து
குணம் பார்த்து செஞ்சா சொத்து
பணம் பார்த்து செஞ்சா ஒத்து
நிழல் பார்த்து சிரிச்சா பித்து
நிஜம் பார்த்து சிரிச்சா எத்து
திறம் பார்த்து கதைச்சா தொத்து
நிறம் பார்த்து கதைச்சா மொத்து
செ. இராசா
கொட்டுது கொட்டுது
கொட்டுது கொட்டுது கொட்டுது கொட்டுது
கொட்டோ கொட்டுனு கொட்டுது கொட்டுது
கொட்டுற கொட்டுல கட்டிடம் காணலை
சட்டெனக் கொட்டிட சாலையில் சாக்கடை
பட்டெனக் கெட்டது பட்டணம் நீருல
பட்டதப் பட்டுமே புத்தியில் ஏறலை
எங்கே எங்கேங்கோ- ஏரிகள்
எங்கே எங்கேங்கோ?
இங்கே நீருங்கோ- கோடையில்
எங்கே கூறுங்கோ?!
செ. இராசா
08/11/2021
நல்லதே செய்தாலும் -------- வள்ளுவர் திங்கள்-184
#நல்லதே_செய்தாலும்
#வள்ளுவர்_திங்கள்_184
எல்லாம் தெரியுமென எண்ணிடும் பேருக்கு
நல்லது சொன்னாலும் நஞ்சு
(1)
கண்டால் நடிக்கின்ற காரிய வாதிகள்
பின்னாலே சொல்வர் பிழை
(2)
பணத்தை அளவாக்கிப் பார்க்கின்ற நட்பை
பிணமாய்க் கருதிப் பிரி
(3)
தன்னைப் பெரிதென்றே தம்பட்டம் செய்வோர்கள்
விண்ணையும் சொல்வார்கள் வீண்
(4)
காசுபணம் வாங்காமல் கற்பித்த ஆசானை
மாசுபடப் பேசுவதா மாண்பு?!
(5)
காசிற்காய் வாலாட்டும் கையூட்டு விற்பனரை
தூசிபோல் எண்ணித் துற
(6)
கற்றதை எல்லாமும் கற்பிக்க எண்ணாமல்
நற்பண்(பு) இருந்தால் நவில்
(7)
கொடுக்கக் கொடுக்கக் கொடுக்கின்ற பட்டம்
கொடுக்காமல் போனால் கெடும்
(8.)
உறவினைச் சொல்லி உரையாடி பின்னே
மறப்பது தீயோர் மதி
(9)
என்னதான் செய்தாலும் எண்ணிட எண்ணாதார்
என்றும் குறைசொல்வார் இங்கு
(10)
செ. இராசா
07/11/2021
எத்தனை எத்தனை முகமூடிகள்?!
பாயும் புலி மூக்கில்
பசுத்தோல் முகமூடி...
காமப் பசி நாக்கில்
காதல் முகமூடி..
வஞ்சக வலைவீச
நட்பின் முகமூடி..
சபல உறவாட
சகோ முகமூடி..
ஓட்டு வேட்டைக்கு
சாதிய முகமூடி..
ஆட்சிக் கோட்டைக்கு
அரசியல் முகமூடி..
தம்மொழி மறைக்க
திராவிட முகமூடி...
தம்மையே மறைக்க
தமிழ் முகமூடி..
ஒரு மதத்தைப் பகைக்க
பகுத்தறிவு முகமூடி..
பிற மதங்களை இணைக்க
சமத்துவ முகமூடி..
மரபைத் தொலைக்க
நவீன முகமூடி..
நம்மையே தொலைக்க
நாகரீக முகமூடி..
த்தூ....