10/06/2023

வானிற்கும் தூதுவிடும் நீர்

 


வான்விடும் நீரைத்தான் வையகம் வாங்கிடுமோ?!
வானிற்கும் தூதுவிடும் நீர்!
 
✍️செ. இராசா
 
(இன்று எடுத்த ஒளிப்படம்)

09/06/2023

என்ன தவறிழைத்தேன் சகியே

என்ன தவறிழைத்தேன் சகியே
ஏனிந்தத் தண்டனையோ...?!
என்னை மறந்தனையோ சகியே
யாதுமென் விதிதானோ?!

கூறடி நேரடியாய் சகியே
கொன்றிடல் முறைதானோ?!
நூறடி நூறடியாய் சகியே
நுன்மனம் விலகியதோ?!

யாரடி தீர்த்திடுவார் சகியே
என்நிலை இதுதானோ?
பாரடி பார்வையினால் சகியே
பைத்தியம் தெளியாதோ?!

பைந்தமிழ் பார்க்குதடி சகியே
பாடிய கூற்றினையே....
செந்தமிழ் சொல்லுமடி சகியே
தேடிய நாட்களையே...

ஓடியே வந்திடடி சகியே
ஒதுங்கிடல் சரியில்லையே
கூடிட எண்ணிடடி சகியே
கோபமும் முறையில்லையே

வாழ்வதும் ஒருமுறையே சகியே
வாயினி வாழ்ந்திடவே...
ஆழ்மனம் துடிக்குதடி சகியே
அன்பினை வார்த்திடவே..

✍️செ. இராசா

08/06/2023

சபலம்

 #சபலம்

கண்ட மாத்திரத்தில்
நெஞ்சில் தோன்றும் பிரளயம்!
எண்ணிய நேரத்தில்
எங்கிருந்தோ வரும் பூகம்பம்!
அடக்கம் தளர்கையில்
அளவுமீறி உடையும் அணைக்கட்டு!
மயக்கம் படர்கையில்
மதிமீறிப் பாயும் காட்டாறு!

சிறு பொறி போதும்
காட்டுத்தீ பரவ‌‌...
சிறு ஓட்டை போதும்
பெருங்கப்பல் கவிழ..
சிறு சபலம் போதும்
பெரும்‌..மனிதன் வீழ‌‌...

இங்கே..
மேனகைகள் ஆட
விஸ்வாமித்திரர்கள் வீழலாம்
ஆனால்
இந்திரர்களின் சபலத்திற்கு
அகலிகைகள்தான் கிடைத்தார்களா?!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்

ஒரு சின்ன மயிறிலை போதும்
வைரங்கள் கூலாங்கற்க‌ளாக...
முத்துக்கள் வேணாமென்றாக

ஒரு சின்ன துருப்புபோதும்
சாம்ராஜ்யங்கள் சரிய...
காமராஜ்யங்கள தெரிய.

இங்கே அனைவரும் உத்தமர்கள்தான்
பிம்பம் உடையாதவரை......
இங்கே அனைவரும் நல்லவர்கள்தான்
சபலம் தழுவாதவரை..

சபலம்..
பலத்தைக் கெடுக்கும் தீயுண்ணி
நலத்தைக் கெடுக்கும் நாயுண்ணி

கவனம்...

✍️செ. இராசா

06/06/2023

பொத்திப் பொத்தி வளர்த்தவதான் அம்மா அம்மா..

 


அம்மா அம்மா அம்மா அம்மா....
அம்மா அம்மா அம்மா அம்மா....

பொத்திப் பொத்தி வளர்த்தவதான் அம்மா அம்மா..
பூர்வ ஜென்மக் கொடுப்பினைதான் அம்மா அம்மா...

தெய்வம் எங்கே காட்டு என்றால் அதோ அம்மா..
தேட வேணாம் முன்னே நிப்பா இதோ அம்மா...

உள்ளத நல்லத ஆக்கித்தான் போடுவா
தன்பசி பாராம...
கண்ணுல எண்ணைய போட்டுத்தான் தேடுவா
தன்வலி தீராம....(2)

✍️செ. இராசா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா

பாடலாகக் கேட்க

https://youtu.be/gxMgl9NuwMA

05/06/2023

நிலையாமை

 #நிலையாமை

பயணம் முடியும்முன் பாதியில் சென்றால்
துயரம் அதுதரும் சூழ்ந்து
(1)

இருப்பின் அருமை இழப்பில் தெரியும்
இருக்கையில் வாழ்வீர் இசைந்து
(2)

மறுகணம் மட்டும்தான் மாற்றானின் கண்ணீர்
இறுதிவரை எண்ணுபவர் யார்?!
(3)

இருப்போர் விழியை இறந்தோர் திறந்தும்
இருக்கையில் காணாரே இங்கு!
(4)

படக்கென்று தோன்றிப் படக்கென்று மீண்டும்
உடல்விட்டுப் போகும் உயிர்
(5)

அங்குமிங்கும் இங்குமங்கும் ஆடவைத்த நம்முயிர்
எங்குசென்று சேர்கிறதோ எண்ணு!
(6)

அப்பனென்றும் மாமனென்றும் அன்றழைத்த சொந்தங்கள்
இப்பிணத்தைத் தூக்குவென்பார் பின்பு!
(7)

காலக் குதிரைமேல் கண்டபடி செல்பவரில்
ஞாலத்தை வென்றவர்தான் யார்?
(8)

செல்வம் இளமை எதுவும் நிலையல்ல
செல்லும்முன் செய்வாய் சிறப்பு
(9)

காற்றுள்ள போதே கடமையைச் செய்வோருக்கு
கூற்றனும் ஆவான்நல் கூட்டு!
(10)

✍️செ. இராசா

04/06/2023

 


 

எத்தனை எத்தனை தொழில்நுட்பம்
இருந்தும் இங்கே என்னபயன்?
இத்தனை உயிர்கள் போனபின்னும்
யார்தான் பொறுப்பை ஏற்கிறவன்?!

புல்லட் வேகத் தொடரியெல்லாம்
போகிற காலம் வந்ததென்றீர்!
பொல்லாப் பொய்கள் சொல்லாதீர்
போகிற தடத்தை சரிசெய்வீர்!!

இனியும் இனியும் இதுபோலே
இன்னொரு விபத்து வேண்டாமே
கனிவுடன் கடமை புரிந்தாலே
கண்களில் கவனம் சிதறாதே....

✍️செ. இராசா

02/06/2023

இசைக்குள் இசைவோன்

 

இசைக்குள் இசைவோன் இசையால் எழுவோன்
இசையின் இறைவன் இவன்...
 
✍️செ. இராசா
இனிய மனமார்ந்த பிறந்தநாள்
வாழ்த்துகள்
ஐயா

கடலு கதி கலங்கும்

 


கடலு கதி கலங்கும் வெள்ளி சனி நாங்க வந்தா....
தூண்டி துடிதுடிக்கும் துள்ளி வரும் மீனப் பார்த்தா....(2)
 
வந்தவரை இலாபம்தானே அண்ணாத்த- அட
வல்லையினா நட்டமிங்கே என்னாத்த?
வாழும்வரை வாழ்ந்திடுவோம் அண்ணாத்த- அட
வாழ்ந்தபின்னே வருவதிங்கே என்னாத்த?
 
✍️செ.இராசா

01/06/2023

சாதியில்லா சமத்துவன்னு சொல்லுறான்-

 

சாதியில்லா சமத்துவன்னு சொல்லுறான்- ஆனா
சாதிக்கான சான்றிதழக் கேக்குறான்....
சாதிபேதம் இல்லையென்று கூவுறான்- ஆனால்
சாதிபார்த்தே..வேட்பாளர நிறுத்துறான்..
நீதிக்காக நிற்பதுபோல் காட்டுறான் - ஆனால்
நிதிவந்தா வாயபின்னே பொத்துறான்..
ஆதிதொட்டு ஆண்டவன்னு பேசுறான்- ஆனால்
ஏதிலாரைப் போலயின்னும் ஏங்குறான்..
 
✍️செ. இராசா

30/05/2023

 

சூழலுக் கேற்ப துணிவோடு செல்பவனே
வேழம்போல் நிற்கின்றான் வென்று!