03/03/2026

வெறுப்பு

 




பற்றிய ஒன்றைப்
பறித்துப் பாருங்கள்...
பச்சக் குழந்தைகூட அலறும்..
ஆனால்..
வெறுப்பை உமிழாது!

அதுவே
ஒருவர் பற்றிய விடயத்தைப்
ஒருவரிடம் பேசுங்கள்
வெறுப்பு வாந்திகள்
வேகமாய் விழும்...

விருப்பின் முரணாய்
வெறுப்பே வீற்றிருந்தாலும்
வெறுப்பையே விரும்பும்
அருவருப்பான உலகமிது....

யோசித்துப் பாருங்கள்?!

பற்றற்றான் பற்றையே
பற்றச்சொன்னார் வள்ளுவர்
........பற்றினோமா?!
பற்றற்றானை விட்டுவிட்டு
பற்றினோம் மதத்தை; விளைவு
பற்றி எரிகிறதுபார்; ஆம்
பற்றி எரிகிறது பார்!

முதலில் ஒருவர் வருவார்!
பின்னர் இன்னொருவர் வருவார்!
இப்போது முன்னவர்பின் நிற்போர்; பழமைவாதி!
பின்னர்வர்பின் நிற்போர்; புதுமைவாதி!

அதற்குப்பின் ஒருவர் வந்தால்
முந்தைய பின்னவர் பழமைவாதி!
இன்றைய பின்னவர் புதுமைவாதி!
இதில் யார் சரி?
இல்லை யாருடையது சரி?!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!

உயிர்நீங்கும் போதும்
பாவிகளை மன்னியுங்கள் என்றார்
இயேசுநாதர்!

யார் பிறரை மன்னிக்கிறாரோ
அவரின் கண்ணியத்தை அதிகப்படுத்துகிறான் என்றார்
நபிகள் நாயகம்!

தத்வமஸி எனும் தத்துவம்கூறி
எதிரியை நேசிக்கச் சொல்கின்றன
உபநிடதங்கள்!

பகைவனுக்கு அருள்வாய்
என்றார் பாரதியார்!
வெறுப்பை அன்பே வெல்லும் என்றார் மகாத்மா!

இப்படி எத்தனையோ போதனைகள்
இருந்தும் என்செய்ய?

வெறுப்புப் பிரசாரம்
வெறுப்புப் பின்னூட்டமென
எதிர்மறைக் கருத்துக்களை
எப்போதும் நிறைத்தால்
எதிர்காலத் தலைமுறை
என்னவாகும்?!
அட
இப்போதே இடிஇடிக்கிறதே.‌‌

போதும்!
வெறுப்பை விருப்பால் வெல்வோம்!
விருப்பை விரிவாய்க் கொள்வோம்!

No comments: