02/05/2024

முத்துமலை முருகனுக்கு அரோகரா அரோகரா..‌

 


 

தொகையறா

 முத்துமலை முருகனுக்கு
அரோகரா அரோகரா..‌
முக்திதரும் கடவுளுக்கு
அரோகரா அரோகரா..
சக்திசிவ மைந்தனுக்கு
அரோகரா அரோகரா..
வெற்றிதரும் வேலனுக்கு
அரோகரா அரோகரா...

கந்தனுக்கு அரோகரா
கடம்பனுக்கு அரோகரா...
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா...

வேல்முருகா...வெற்றி வேல்முருகா...
வேல்முருகா... வீர வேல்முருகா...
 

பல்லவி
வேல்வடிவ வீட்டினிலே
வீற்றிருக்கும் வேலவனே...(2)
பால்வடியும் முகங்காண
வாரோம்யா- எங்க
பாவத்தைக் களைஞ்சாலே போதும்யா..(2)

வேல்முருகா...வெற்றி வேல்முருகா...ஓம்
வேல்முருகா... வீர வேல்முருகா...
வேல்முருகா...வெற்றி வேல்முருகா...ஓம்
வேல்முருகா... வீர வேல்முருகா...
 

சரணம்_1
ஆறுபடை அத்தனையும்
ஐக்கியமாய் ஆனதுபோல்
ஏழுகோண வீடுகொண்ட
ஈசனோட திருமகனே..
இடக்கரம் வேலேந்தி
இடர்களினை துடைத்திடவே
வலக்கரம் ஆசிதர
வடிவெடித்தக் குலமகனே...

நீரில்லா ஊரினிலே
நீர்கொடுத்த நிலமகனே
நீரில்லா வாழ்வினிக்க
சாத்தியமோ?! சிவமகனே...
பாரெல்லாம் புகழ்மணக்கும் பைந்தமிழின் காவலனே
பூவெல்லாம் ஏங்குதய்யா
மாலையென மாறிடவே...

வேல்முருகா...வெற்றி வேல்முருகா...ஓம்
வேல்முருகா... வீர வேல்முருகா...
வேல்முருகா...வெற்றி வேல்முருகா...ஓம்
வேல்முருகா... வீர வேல்முருகா...
 

சரணம்_2
பத்துமலை முருகனைப்போய் பார்த்திடாத பக்தருக்கும்
முத்துமலை முருகனாக
உருவெடுத்த வடிவழகே
நித்தநித்தம் கடன்சுமையால்
வாடுகின்ற அன்பர்களின்
வேதனைய நீக்கவந்த
நேசமுள்ள இறையுருவே..

பிள்ளைவரம் வேண்டிவரும் எத்தனையோ பேர்களுக்கு
பிள்ளையென மாறிவரும்
பேரருளே.. பெருங்கடலே..
இல்லையென சொல்லுகின்ற எத்தனையோ பேர்களையும்
இல்லையென்ன இல்லையென சொல்லவைக்கும் அருள்மழையே...

வேல்முருகா...வெற்றி வேல்முருகா...ஓம்
வேல்முருகா... வீர வேல்முருகா...
வேல்முருகா...வெற்றி வேல்முருகா...ஓம்
வேல்முருகா... வீர வேல்முருகா...

✍️செ. இராசா

No comments: