01/05/2024

இயலா இசையா? வெண்பாக்கள்




இயல்முதலா? இல்லை இசைமுதலா? என்றால்
இயற்கையின் தோற்றம் இசை!
(1)

பிக்பாங் பெருவெடிப்பின் பேரிசை இல்லையேல்
எக்கோளில் நாமிருப்போம் இங்கு?
(2)

ஓமென்ற ஓசை உலகத்தின் ஆதியாய்
ஆமென் எனச்சொல்வர் ஆய்ந்து!
(3)

ஓசையின் ஓரொழுங்கில் உண்டான கட்டமைப்பைப்
பாஷை எனசொல்வர் பார்
(4)

ஒலிவழி வந்தமைந்த ஒவ்வோர் மொழிக்கும்
ஒலிவரி தோற்றங்கள் உண்டு
(5)

வரிவடிவ மாற்றங்கள் வந்தாலும் நம்மில்
பெரியளவில் மாறா ஒலி
(6)

எழுப்புகின்ற ஓசை எழுத்துரு வாகி
எழுத்துருவைப் பாடல் இசை!
(7)

இசைக்குள் இசையும் இயல்புள்ள சொல்லால்
இசையும் மெருகேறும் இங்கு!
(8)

சொற்றொடர் இன்றியும் தோற்றிடலாம் என்றாலும்
நிற்காது பாடல் நிலைத்து!
(9)

இயலினிதா? இல்லை இசையினிதா? என்றால்
இயலிசை சேர்ந்தால் இனிது!
(10)

✍️செ. இராசா

No comments: