28/07/2025

குரு


Shared with Public
பெற்றோருக்குப் பின்
கற்றோர்கள் போற்றுவது
குருவைத்தான்...
குருவும் ஆசிரியர்தான்; அதற்காக
ஆசிரியர்கள் எல்லாம்
குரு அல்ல...
வெளிச்சம் பற்றி
விளக்குபரல்ல குரு; இருளை
வெளிச்சம் பாய்ச்சி
விலக்குபவரே குரு...
குருக்கோள் பூசாரிகளல்ல குரு
குறிக்கோள் ஆச்சாரியரே குரு
மாலைபோட்டு மலையேற்றும்
குருசாமியல்ல குரு
மாலை பிறர்போட ஏற்றிவிடும்
குலசாமியே குரு
குருபார்த்தால் கோடி நன்மையாம்
இது;
பஞ்சாஞ்க உண்மை மட்டுமல்ல
நெஞ்சார்ந்த உண்மையும்தான்..
கடைசிவரை கைபிடித்துக்
கூட வருபவரல்ல குரு
பிடித்த கையை தளர்த்தி; எல்லாம்
கூட வைப்பவரே குரு
குருவின் பின் குருவென
குரு பரம்பரை வளர்க்கும்
மட குருக்கள் எல்லாம்
மட....குருக்களே...
அதற்காக..
குரு வழி குருக்களைக்
குறை சொல்ல முடியுமா என்ன?!
கம்பவாரிதியின் குரு
ராதாகிருஷ்ணன் என்பர்
அவரின் குரு கிவா. ஜெகன் நாதன்
அவரின் குரு உ வே. சாமிநாத ஐயர்
அவரின் குரு மீனாட்சிசுந்தரம் பிள்ளை ‌.
இப்படி ஞானவழி குருக்களும்
இல்லாமல் இல்லையே?!
சரி...
படிப்புதான் குருவின் தகுதியா?
யார் சொன்னது?
படித்த மகா கவிக்கு
படிக்காத குள்ளச்சாமிபோல்
மன்னன் ராபர்ட் புருசுக்கு
சாதாரண சிலந்திபோல்
யார் வேண்டுமானாலும்
யாருக்கும் குருவாகலாம்.
ஆம்...
கண்களைத் திறக்க வைக்கும்
காரண கர்த்தா அவர்.
புண்களை மறக்க வைக்கும்
பூரண புத்தா அவர்.
அதுமட்டுமா?!
குறைகளைக் களைபவர் குரு!
பறைவதைப் பறைபவர் குரு!
நிறைகளை நிறைப்பவர் குரு!
மறைகளை விதைப்பவர் குரு!
அன்றைய துரோணாச்சாரியர்கள்
வேண்டுமானால் விரல் கேட்கலாம்
பாவம்....
இன்றைய குருமார்கள் கேட்பதென்ன?
நீங்களே சொல்லுங்கள் ?!!!
✍️என்றும் சீடனாய்
செ. இராசா.

No comments: