அல்லி நகரத்து மைந்தனின்
வெள்ளித் திரையுலக வெற்றி;என்பது
வெறும் சினிமா சம்பந்தப்பட்டதல்ல
அது..
எளிய மனிதனும்
இமயமாகலாம் என்னும் தன்னம்பிக்கை உணர்வையும்;
அப்படித்தான் என்பதல்ல
இப்படியும் செய்யலாம் என்கிற
புதிய சிந்தனையையும்;
கலைஞன் நினைத்தால்
காலத்தையே வகுக்கலாம் என்னும்
ஞானச் செருக்கையும்;
தன்னைச் சார்ந்தவர்கள் வளர்வதில்தான்
தன் வெற்றியும் உள்ளதென்கிற
சார்பியல் தத்துவத்தையும்;
யானைக்கும் அடிசறுக்கும் என்றாலும்
அதே யானை
இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன் என்கிற
பழமொழியின் சாரத்தையும்; என
இப்படி எத்தனையோ
பொருளடக்கம் கொண்டவர்தான்;
அருளடக்கம் ஆகியுள்ளார் என்றால்
அது மிகையல்ல;
முற்றிலும் உண்மையே!
ஆம்!
இவர்; இந்த
செல்லரித்த சமூக அழுக்கை
செல்லுலாய்டில் கழுவியவர்;
16 வயதி(னி)லேயே
பல்நோக்கில் சிந்தித்தவர்;
மட்டுப்படா நுட்பத்தை
மண் வாசனை ஆக்கியவர்;
சொல்லாத காதலுக்கும்
முதல் மரியாதை செய்தவர்;
சொல்லிய காதலுக்கும்
தாஜ்மஹால் படைத்தவர்;
இவரின் நிழல்களின்தான்
எத்தனை நிறம் மாறாத பூக்கள்?
ஐயா..
நீ
கிழக்கு சீமையிலே பிறந்து
பசும்பொன்னாய் மின்னியவன்
கிழக்கே போகும் ரயிலேறி
நாடோடித் தென்றலாய் சுற்றாமல்
சினிமாவில் புகுந்து: அதில்
வேதம் புதிது படைத்தவன்!
உன்னைவிட்டு
எங்கள் நினைவின்
அலைகள் ஓய்வதில்லை! உந்தன்
கடலோரக் கவிதைகள் மாய்வதில்லை!
உண்மையில் உம்மேல் தூவத்தான்
சிவப்பு ரோஜாக்களைத் தந்தாயோ?
உளமாரச் சொல்கின்றேன்
உண்மையில் நீர் ராஜா தான்...
நன்றி இமயமே!
நல்ல இதயமே!
தலைவணங்கி விடைபெறுகிறேன்
தலைநிமிர்ந்து வணங்குகிறேன்.
வானம் சரிஞ்சிடுச்சே
நட்சத்திரம் கருகிடுச்சே
ஞாலம் சுருங்கிடுச்சே
ஏன் ராசா போனீரோ?!
சேதி அறிஞ்சதுமே எத்தனை எத்தனை பேர் - உமக்
காகவே எத்தனைபேர் - வாடி
வதங்கியிங்கே வந்தது எத்தனை பேர்
உமக்காகவே எத்தனை பேர்?!
ஐயா ராசா...சத்திய ஜோதிக்கு நேர்!
தென்கிழக்கு சீமையில
அல்லி நகரத்தில
மண்வாசம் கொண்ட எங்க ராசா ராசா
தன்முனைப்பத் தள்ளிவச்சு
நல்ல கலைஞர்கள
தட்டி வார்த்தெடுத்த ராசா ராசா
அத்தனை பேருக்கும் முன்மாதிரி
எத்தனை பேருள்ளார் உன் மாதிரி
வெண்திரை காட்சியில் செய்தாய் ஒளி
பண்பட மாந்தர்க்கு செய்தாய் வழி..
நன்றி நன்றி!
ஆக்கம்,
செ. இராசா

No comments:
Post a Comment