25/06/2024

ஆண்டுகள் ஓடியும்

ஆண்டுகள் ஓடியும்
....ஆயுளைத் தாண்டியும்
.......ஆனது யாது தாயே?
ஊண்மிகை உண்டதும்
....ஊழ்வினை தீர்ந்ததும்
....ஓய்ந்ததே வாழ்வு தாயே?!
மீண்டுமோர் வாழ்வென
.....மீண்டுமோர் வாழ்வினி
.......வேண்டிட மாட்டேன் தாயே!
வேண்டுவேன் ஓர்வரம்
.....வெற்றியைக் கோரியே
..........வேதனை தீரும் தாயே!

பாரதம் தாண்டியும்
....பாக்களை ஏற்றிய
.......பாவலன் யாரு தாயே?
பா-ரதம் ஓட்டியப்
.....பாரதி போயினும்
.......பாமகன் உண்டு தாயே!
மா-ரதம் வாங்கிடும்
....மாபெரும் ஆசைகள்
......வந்ததே இல்லை தாயே!
பூரதம் போலொரு
....என்னரும் செந்தமிழ்
.......என்னையும் தாங்கு(ம்) தாயே!

பற்றினை நீக்கிடப்
....பற்றினேன் உன்னையே
......பற்றிலான் ஆக்கு தாயே!
கற்றிடும் ஆசையில்
...கற்றிடக் கற்றிடக்
......கற்றிலேன் ஆனேன் தாயே!
உற்றவர் யாரென
....உற்றுநான் நோக்கையில்
......வெற்றிடம் அங்கு தாயே!
வற்றிடும் போதிலும்
.......நற்றவம் செய்கிறேன்
........ அற்புதம் செய்யு(ம்) தாயே!

✍️செ. இராசா

No comments: